ஞாயிறு, 13 ஜூலை, 2025

சத்துருவின் தந்திரம்

 சத்துருவின் தந்திரம்


பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், நேர்வழியாகவே ஒவ்வொரு நாளும் நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும்  (மீகா. 2:13), நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையும்கூடப் பிசகிவிடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்கிறவரும், கடுமையானதாகக் காலங்கள் கண்களுக்குக் காட்சியளித்தாலும், கரம் பிடித்து நம்மை நடத்துகிறவரும், சூழ்நிலைகள் தனது எல்லைக்குள் நம்மை சுருக்கி வைக்க முயற்சித்தாலும், எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் ஆவியில் அவரோடு முன்னேறிச் செல்ல உதவிசெய்கிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

பிரியமானவர்களே! இந்நாட்களில், சத்தியத்திற்காக முன்னேறிச் செல்லும் நாம், சத்துருவின் தந்திரங்களைப் பற்றிய அறிவுடையவர்களாகவும் காணப்படவேண்டுமே! ஏனெனில், தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல விதங்களில் தொல்லைகளைக் கொடுத்து, தேவ மனிதர்களின் வேலைகளைத் தடுத்து, பரலோகத்தின் பணிகளுக்கு பாதிப்பை உண்டாக்க விரும்புபவன் சத்துரு. பிற மனிதர்கள் மூலமாக மாத்திரமல்ல, உடனிருப்போருக்குள்ளும் ஊடுருவி அதனைச் சாதிக்கவும் செய்து முடிக்கவும் துடிப்பவன் அவன்| இதனை நாம் அறிந்துகொள்வது அவசியம். 

'சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்| எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது' (நெகே. 1:3) என்ற செய்தியை  அரமனையிலிருந்த நெகேமியா யூதாவிலிருந்து வந்த சகோதரரிடத்திலும் மற்றும் சில மனுஷரிடத்திலும் விசாரித்து அறிந்தபோது, துக்கம் அவனது உள்ளத்தில் துளிர்விடத்தொடங்கியது (நெகே. 1:4). இத்தகைய 'துக்கமே நமது செயல்பாட்டிற்கான துவக்கம்.'  

என்றபோதிலும், நெகேமியா புறப்பட்டுச் சென்று, பணிகளைத் தொடங்கியபோது,  சன்பல்லாத் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ (நெகே. 4:1,2) என்று இயலாததென அவர்களை ஏளனம் செய்கிறான்| அவ்வாறே, தொபியாவும், அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் (நெகே. 4:3) என்ற நகைப்புக்குரிய வார்த்தைகளால் கேலி பேசுகிறான். எருசலேமைக் கட்டுகிறோம் என்ற நற்செய்தியினால் இஸ்ரவேலரின் மனம் நிறைந்திருக்கும்போது, 'துர்ச்செய்தியினால்' தூற்றிப் பேசுகிறார்கள் சத்துருக்கள். எனினும், கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக்கும்படியான இவர்களது கேலிப் பேச்சுகள் வேலைகளிலிருந்து அவர்களை விலக்கிவிடவில்லையே! ஆம், 'தேவனுக்கடுத்த துக்கங்களை மனதில் சுமந்தால், சத்துருவின் சத்தங்களுக்குச் செவிசாய்க்காமல், அழைப்பிலே நாம் உறுதியாக நிற்க முடியும் என்பது நிச்சயம்.'    

இன்றும், தேவ மனிதர்களுக்கு விரோதமாகவும் மற்றும் ஊழியங்களுக்கு விரோதமாகவும் இத்தகைய வார்த்தைகளை உச்சரிக்கும் சத்துருக்களுக்குச் சாதகமான மனிதர்கள் உண்டு. இத்தகையோர், ஊழியங்களைக் கட்டுவதற்கு அல்ல, கலங்கடிப்பதற்கே தங்கள் கலைகளைப் பயன்படுத்துகிறார்கள்! இத்தகைய மனிதர்களிடத்திலும், துர்ச்செய்தியினை அனுப்புவதற்கான தனது தூதர்களாக இவர்களைப் பயன்படுத்தும் சத்துருவின் வலைகளிலும் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாதே!   

அவ்வாறே, 'நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' (ஆதி. 12:1) என்று ஆபிரகாமை அழைத்தார் ஆண்டவர். அழைப்பினைத் தொடர்ந்த அவனது பயணத்தில், 'உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்' (ஆதி. 15:13) என்ற இடைவெளியினைத் தொடர்ந்து, 'அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்' (யாத். 3:8) என்று தனது செயல்பாட்டினை தேவன் தொடங்கியபோது, 

கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படியாக அனுப்பப்பட்ட மனிதர்களுள் ஒருவனான காலேப், 'நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்| நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்' (எண். 13:30) என்ற நற்செய்தியினை அறிவிக்கின்றான். ஆனால், மறுபுறத்தில், அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: 'நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். அதுமாத்திரமல்ல, நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்| நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்| நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்புமளவிற்கும், இராமுழுதும் அழுமளவிற்கும் தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து  துர்ச்செய்தி  பரம்பச்செய்தார்கள் (எண்;. 13:31-33| 14:1). ஒன்றாகப் பயணித்தவர்கள்தான்| என்றபோதிலும், இவர்களது மாம்சீகப் பார்வை, இவர்களை துர்ச்செய்தியின் தூதர்களாக்கிவிட்டதே! இத்தகைய பார்வையுடையோரிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே! தேவ ஜனங்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உலகத்தில் உண்டு என்பது உண்மையே| என்றபோதிலும், அவர்களது வீழ்ச்சியையும் மற்றும் தோல்வியையும் கூடவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மற்றொரு கூட்டமும் மறைவாக உண்டு என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ராஜாவாகிய யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், கர்த்தருடைய வார்த்தையை அறிவித்த தேவனுடைய மனுஷனைக் குறித்துக் கேள்விப்பட்ட கிழவனான தீர்க்கதரிசி, தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்து போய், 'உம்மைப் போல நானும் தீர்க்கதரிசிதான்| அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான்' என்று அவனிடத்தில் பொய் சொன்னபோது (1இராஜா. 13:18), அதனை நம்பி கிழவனான தீர்க்கதரிசியின் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்ததினால் (1இராஜா. 13:19), தேவனுடைய மனுஷன் வழியில் சிங்கத்தினால் கொன்றுபோடப்பட்டானே! (1இராஜா. 13:24) தேவனுடைய செய்தியை அறிவிக்கும் நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய மனிதர்கள் நுழைந்துவிடாதபடிக்கு கவனமாயிருப்போம். தேவன் பயன்படுத்தும் பாத்திரங்களான நாம் நம்முடைய ஆத்துமாக்களை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுவோம். தேவன் நம்மோடு பேசின வார்த்தைகளை, மனிதர்களுக்காக மாற்றாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக!

இத்தகைய மக்கள், ஆவிக்குரியவர்களைப் போல பேசினாலும், ஆத்துமாவுக்கு இதமான வார்த்தைகளை உதிர்த்தாலும், அவர்களது உள்ளமோ நமது வீழ்ச்சியிலேயே நோக்கமாயிருக்கும். இதனை அறியாமலும் மற்றும் அவர்களால் உண்டாகவிருக்கும் ஆபத்துகளை உணராமலும் அத்தகைய மனிதர்களோடு உறவாடிக்கொண்டிருப்போரின் வாழ்க்கை வீழ்ச்சியினைச் சந்திக்கக்கூடுமே! இத்தகையோரின் உறவு, 'தொடர்பு' என்று தொடங்கினாலும், ஆவிக்குரிய வாழ்க்கையின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து, இறுதியில் நெடுநாள் விளைந்த நெற்கதிராக, அறுவடைக்குத் தயாராக நிற்கும்  ஆத்துமாவைக்கூட ஆண்டவரிடமிருந்து தூ}ரப்படுத்திவிடக்கூடும்| அத்துடன், ஆவிக்குரிய வாழ்க்கையையும் அடையாளமின்றி அழித்துவிடவும்கூடும். 

அதுமாத்திரமல்ல, மற்றவர்களைக் குறித்த பாராட்டுதலுக்கு, நமது உள்ளம் பகையைப் பிரதிபலிக்காதபடிக்கும் காத்துக்கொள்வதும் அவசியம். கோலியாத் இஸ்ரவேலை நிந்தித்ததை தாவீது கேட்டபோது, 'இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்கவேண்டியதில்லை| உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன்' (1சாமு. 17:32) என்று சொல்லி, கோலியாத்தின் மீது வெற்றியும் பெறுகின்றான். கோலியாத் வீழ்த்தப்பட்டுவிட்டான் என்ற நற்செய்தியினால் ஜனங்கள் மகிழ்ந்துகொண்டிருந்தபோது, 'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' (1சாமு. 18:7) என்ற ஸ்திரீகளின் பாட்டு ராஜாவாகிய சவுலுக்கு துர்ச்செய்தியாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்| இன்னும் ராஜாங்கம் மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான் (1சாமு. 18:8,9)| மேலும், தனது அரியணையே தாவீதினிடத்தில் பறிபோய்விடுமோ என்றும், தனது குமாரனுக்கு ராஜாங்கம் நிலைப்படாமற்போய்விடுமோ என்றும் (1சாமு. 20:31) பயப்படத் தொடங்கினான் சவுல்.     

'கோலியாத்தை வீழ்த்தியவன்' என்று அறிந்திருந்தும், 'தனக்குப் பிரயோஜனமானவன்' என்று உணர்ந்திருந்தும், 'தன்னால் செய்யமுடியாததை செய்து முடித்தவன்' என்று தெரிந்திருந்தும், அரியணையை விட்டுக்கொடுக்க சவுல் ஆயத்தமாக இல்லை! தாவீதை வீழ்த்தவே வகைதேடிக்கொண்டிருந்தான் சவுல். தனது மகளை தாவீதுக்கு கொடுக்கும் முன், 'ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள்' என்று சவுல் சொல்லியனுப்பினது, மீண்டும் தாவீதின் வீரத்தை பெலிஸ்தியர்களிடத்தில் நிரூபிக்க அல்ல| மாறாக, அவனை பெலிஸ்தியர்களின் கைகளில் விழவைக்கவே! 'தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது' (1சாமு. 18:25) என்றல்லவா சவுலின் சிந்தையைக் குறித்து வேதம் சித்தரிக்கின்றது. 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்' (யோவான் 14:12) என்ற இயேசுவின் குணத்திற்கு சவுலின் மனம் எத்தனை விரோதமானது?    

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாட்களிலும், சத்துரு இந்த காரியத்தை திட்டமிட்டுச் செய்ததை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றதே. மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தபோது, ஒருபுறம் நற்செய்தியாக இயேசு கிறிஸ்து பிறந்திருக்க, 'பயப்படாதிருங்கள்| இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்' (லூக். 2:10,11) என்ற நற்செய்தி அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, மறுபுறத்திலோ ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான் (மத். 2:16) என்று வாசிக்கின்றோமே. ஒருபுறம் ஆனந்தத்தின் சத்தம், மறுபுறமோ அழுகையின் குரல். நற்செய்தி வரும் நாட்களில், துர்ச்செய்தியை உண்டாக்க சத்துரு எத்தனையாய் முயற்சிக்கிறான் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகின்றதல்லவா. 

அதுமாத்திரமல்ல, இயேசு கிறிஸ்து மரியாளின் கர்ப்பத்தில் இருந்தபோது, உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தபோது (லூக். 2:1), யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போகவேண்டியதாயிற்று (லூக். 2:4,5) என்றும், அதனைத் தொடர்ந்து, ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்| நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான் என்றும் (மத். 2:7,8), தொடர்ந்து, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்| ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றும் சொல்லுகின்றானே (மத். 2:13). இந்த வசனங்கள் நமக்குச் சொல்லும் செய்திகள் அனைத்தும் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை (லூக். 2:10), துக்கமான செய்தியாக மாற்ற சத்துரு எத்தனையாக முயற்சித்தான் என்பதைத்தானே வெளிக்காட்டுகின்றன.

தனியொரு மனிதனாக எகிப்து தேசத்திற்குக் கொண்டுபோகப்பட்டவன் யோசேப்பு (ஆதி. 39:1)  என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான் (ஆதி. 41:51) என்றே எகிப்திலிருந்த யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம்| ஆனால், தேவனோ, அவன் இருக்கும் இடத்திற்கு தகப்பனையும் மற்றும் தகப்பனுடைய குடும்பத்தையும் அழைத்துக்கொண்டுவந்தார். அதுவரை, பஞ்ச காலத்தில் எகிப்தின் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்துகொண்டிருந்த யோசேப்பு, எகிப்தை காப்பாற்ற பார்வோனுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்த யோசேப்பு, தன் சகோதரர்களைக் கண்டதும், 'என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்| அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்| ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் என்றும், பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்' என்றும் சொல்லுகின்றான் (ஆதி. 45:5,7). அது மாத்திரமல்ல, நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்| என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம் (ஆதி. 45:9,10) என்றும் தன் சகோதரர்களிடத்தில் சொல்லியனுப்புகின்றான். யோசேப்பின் வாழ்க்கையில் தகப்பனுடைய வீட்டை விட்டுப் பிரிந்து வந்த துக்கமான செய்தி, நற்செய்தியாக மாறியதே! யோசேப்பு எகிப்திலே உயர்த்தப்பட்டிருந்த நாட்களில், யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள் (ஆதி.  45:16) என்றே யோசேப்பின் குடும்பம் எகிப்திற்குச் சென்றபோது அங்கு கிடைத்த வரவேற்பைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம் நாம். 

என்றபோதிலும், யோசேப்பின் மரணத்திற்குப் பின் அந்த சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கவும் மறையவும் தொடங்கியது| யோசேப்பை அறியாத வேறொரு ராஜன் எகிப்தில் தோன்றினபோதோ, அது முற்றிலும் முடிவுக்கு வந்தது. இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்| தேசம் அவர்களால் நிறைந்தது (யாத். 1:7) என்ற செய்தியை, எகிப்திலே தோன்றிய யோசேப்பை அறியாத புதிய ராஜன் அறிந்தபோது, எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள் என்றும், சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்| அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள் (யாத். 1:13,14) என்று வாசிக்கின்றோமே! தேவ ஜனத்தின் வாழ்க்கையைக் கசப்பாக்க இன்றைய நாட்களிலும் சத்துரு எடுக்கும் முயற்சிகள்தான் எத்தனை! எத்தனை!!

'இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும்' (யாத். 1:10) என்றே சொல்லுகின்றான் புதிய ராஜன். 'நம்மிலும் ஏராளமானவர்கள்' என்ற கணிப்பும் கணக்கெடுப்பும் இஸ்ரவேல் ஜனங்களை அழித்துவிடவேண்டும் என்றே எகிப்தின் புதிய ராஜனைத் தூண்டியது. 'சத்துருவின் தொகையிடுதலுக்குப் பின்னால், தேவ ஜனத்தின் அழிவு திட்டமிடப்பட்டிருக்கின்றது' என்பது இதன் மூலம் நாம்; அறிந்துகொள்ளவேண்டிய செய்தியல்லவா! இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார்' என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டபோது (2சாமு. 24:1), சேனாதிபதியாகிய யோவாபின் வார்த்தைகளையும் கேளாமல், ராஜா என்ற ஸ்தானத்தில் தாவீது ஆணையிட்டபோது, அது ஜனங்களிடையே அழிவைத்தானே கொண்டுவந்தது. நான் இப்படிச் செய்ததினால் பெரிய பாவஞ்செய்தேன்| இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்| நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் (2 சாமு. 24:10) என்று தாவீதை புலம்பவும் செய்ததே. தாவீது செய்த அந்த பாவத்தினிமித்தம், கர்த்தர் கொள்ளைநோயை வரப்பண்ணினார்| அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்களே! (2 சாமு. 24:15) 

பிரியமானவர்களே! இக்கடைசி காலத்தில், கடினமான நாட்களில், நற்செய்தியைச் சுமந்து செல்லும் நாம் இத்தகைய சத்துருவின் தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கவும், எவ்விதத்திலும் துர்ச்செய்திகளுக்கு இடங்கொடுத்துவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லவும்  கர்த்தர் உதவிசெய்வாராக| கிருபை உடனிருக்கட்டும்!  


தேவனுக்கேற்ற துக்கங்களைச் சுமப்பதே

தேவப் பணிக்கான ஓட்டத்தின் தொடக்கம்

அழைத்தவர் அழைப்பிலே அசையாது நிற்கவும்

அதுவே ஆரம்பம் அதுவே ஆரம்பம் 

நற்செய்தியைக் கூறும் மனிதர்களாம் நம்மை

துர்ச்செய்தியைக் கூறி சத்துரு எதிர்ப்பினும் - அவன்

சத்தத்திற்குச் செவியைக் சாய்க்காதிருந்துவிட்டால்

சத்தியத்திற்கே வெற்றி சத்தியத்திற்கே வெற்றி


மாம்சீகக் கண்களின் காட்சி - நம்மை 

துர்ச்செய்தியின் தூதர்களாகிவிடக்கூடாது 

உடனிருப்போர் உயர்த்தப்படும்போதும் - உள்ளத்தில்

பகை துளிர்விடக்கூடாது பகை துளிர்விடக்கூடாது


தலைமுறையை அழிக்கும் சத்துருவின் தந்திரம்

தரிசனம் உடையோரே அதை உடைக்கும் எந்திரம் 

இடைமறிக்கும் எதற்கும் விடையுண்டு அவரிடம்

தொடரட்டும் நம் பயணம் தொடரட்டும் நம் பயணம்

சபையின் தூக்கம்

 சபையின் தூக்கம்


'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை" (மத். 16:18)என்று வாக்களித்தவரும், மூலைக்குத் தலைக்கல்லாகவும் (சங். 118:22) மற்றும் பிரதான மூலைக்கல்லாகவும்  (1 பேதுரு 2:7; எபே. 2:20) அறியப்பட்டவரும், பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் (சக. 4:7) என்றும், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தி, அவாந்தரவெளியிலே தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுகின்ற ஜனங்களால், 'பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும்" (ஏசா 40:3,4) என்றும்  தலைக்கல்லைக் கொண்டுவரும் ஜனங்களைக் குறித்தும் மற்றும் அவர்கள் மூலமாக வெளிப்படவிருக்கும் வல்லமையைக் குறித்தும் முன்னுரைத்தவருமாகிய ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!

பிரியமானவர்களே! அவரை மாத்திரம் தலைக்கல்லாகவும் மூலைக்கல்லாகவும் வைத்துவிட்டு அகன்றுபோய்விடுபவர்களாக அல்ல, 'மனுஷரால்தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்" (1பேதுரு 2:4,5) என்று நாமும் அவரோடுகூட இணைத்துக் கட்டப்படுவதனை பேதுருவின் மூலமாக அவர் நமக்கு எழுதித்தந்திருக்கின்றாரே!

'இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்" (யோவான் 2:19) என்று, ஆலயத்தை தன்னுடைய சரீரத்தோடு ஒப்பிட்டுப் பேசும் இயேசு கிறிஸ்து (யோவான் 2:21), பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் என்றும், நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் (யோவா 17:21,22) என்றும் தன்னோடு நம்மையும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு எத்தனை நெகிழ்ச்சியானது! இதனையே,  அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம் (ரோமர் 12:5) என்று வாசிக்கின்றோம். சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார் (1கொரி. 12:12) என்று தலையாகிய கிறிஸ்துவை முன்னிறுத்தி, அவயவங்களாக நம்மை அவருடன் அடையாளப்படுத்தப்படும் பாக்கியம் பெற்றவர்கள் நாம் என்பதில் எத்தனை ஆனந்தம்! 

இச்சத்தியத்தினையே பவுலும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது என்றும், ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால் (1கொரி. 3:11,12) என்றும் பல்வேறு தரமும் மற்றும் தன்மையுமுடையவர்களாக இணைக்கப்படும் ஜனங்களைக் குறித்தும் குறிப்பிட்டு எழுதுகின்றார். அப்படியிருக்க, பிரியமானவர்களே! மூலைக்கல்லாகிய அவர் மீது கட்டப்பட்டுவரும் நமது தரம் தாழ்ந்துவிடக்கூடாதே! அது கட்டிடத்தைத் தகர்ந்துவிழச்செய்துவிடக்கூடாதே! ஒருவன் கட்டினது நிலைத்தால்... என்றும், ஒருவன் கட்டினது வெந்துபோனால்... என்றும், அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும் (1கொரி. 3:14,15) என்றும் பவுல் எழுதும் வரிகள், கட்டினவனின் கவலையீனத்தையும், அவன் ஆத்துமா கஷ்டப்பட்டுக் கரை சேர்த்ததையும்தானே சுட்டிக்காட்டுகின்றது. பிரியமானவர்களே! தரமற்ற மனிதர்கள் உட்புகுந்ததுதானே, அநேக சபைகளும் மற்றும் ஊழியங்களும் தாழ்த்தப்பட்டு, அஸ்திபாரத்துடன் மாத்திரமே தப்பி நிற்பதற்குக் காரணம். எனவே, அக்கினிப் பரீட்சையின்போது, அஸ்திபாரம் மட்டுமே மீந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.   

'இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை" (சங். 121:4) என்பதை அறிந்திருந்தபோதிலும்,  தலையாகிய அவர் விழித்திருக்கும்போதே, செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே, தலைக்கல்லாகிய அவர் மீது தலைவைத்து ஆறுதலடைவதையும் மற்றும் இளைப்பாறுவதையுமே அங்கங்களாக இணைக்கப்பட்டிருக்கும் அநேகர் விரும்புவதினால், அங்கங்களின் ஆழ்ந்த உறக்கம் முழுச்சரீரத்தையும் அதாவது சபையையும் செயலற்றதாக்கிவிடப் போதுமானதல்லவா! அதுமாத்திரமல்ல, உறக்கம், மயக்கம், உணர்வற்ற நிலை என்ற படிப்படியான வீழ்பரிமாணங்களைத் தொடர்ந்து, தலையாகிய கிறிஸ்துவையே தலைவாசலுக்கு வெளியே தள்ளி, சரீரமாகிய முழுச்சபையையும் மரணத்திற்கு நேராகவும் வழிநடத்திவிடும் ஆபத்தும் தூரத்திலில்லை என்பதும் நமது காதுகளில் தொனிக்கவேண்டிய எச்சரிப்பின் செய்தியல்லவா!  

பிரியமானவர்களே! நம்முடைய ஆவிக்குரிய உறக்கம், தேவனை நம்மூலமாகச் செயலாற்றமுடியாதபடிச் செய்துவிடும். 'மனுர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது" என்று கேட்டபோது, 'சத்துரு அதைச் செய்தான்"  (மத் 13:25-28) என்று வாசிக்கின்றோமே! இன்றைய நாட்களில், இப்படிப்பட்ட நிலை சபைகளில் உண்டாகாமலில்லையோ? சபைகளுக்குள் காணப்படும் களைகளுக்குக் காரணம், கண்ணயர்ந்துத் தூங்கிவிட்ட காவலர்களாகிய மனுஷர்தானே! உறக்கம் சத்துருவை உள்ளே ஊடுருவச்செய்துவிட்டதே! 'மனுஷர் நித்திரைபண்ணுகையில்" என்ற வார்த்தைகள், சபையின் ஊழியர்களை மாத்திரமல்ல, சபையின் அங்கங்களாகிய ஒவ்வொரு மனு~ரையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகின்றதல்லவா! 

மேலும், கண்ணயர்ந்ததினால் உட்புகுந்துவிட்ட களைகளை, வேலைக்காரர்களின் கைகளினால் அகற்றுவதும் வீட்டெஜமானுக்குக் கடினமாகிவிடுகின்றதே! 'வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்" (மத். 13:29) என்று வீட்டெஜமானால் வேலைக்காரர்கள் தடுக்கப்பட்டு, 'அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன்" (மத். 13:30) என்று வீட்டெஜமான் சொல்லுகிறதையும், அறுக்கிற பணிக்காக தேவதூதர்கள் நியமிக்கப்படுகிறதையும் (மத். 13:39) வேதத்தில் வாசிக்கின்றோமே. 

வேலைக்காரர்களுக்குப் பதிலாக, தேவதூதர்கள் நியமிக்கப்படுவதற்கான காரணம் என்ன? வேலைக்காரரிடத்தில் காணப்பட்ட வேறுபிரித்துப் பார்க்கும் திறனின் குறைபாடுதானே! அதனால்தானே, 'அவர்கள் களைகளைப் பிடுங்கும்போது, கோதுமையையுங்கூட பிடுங்கிவிடுவார்கள்" என்று எஜமான் பயப்படுகின்றார். அப்படியிருக்க, வேலிக்குள் சத்துரு வந்ததற்கும் மற்றும் அவனால் களைகள் விதைக்கப்பட்டதற்கும்கூட காரணம் இதுதான் என்பது இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா! 'வீட்டெஜமான் விதைத்த நல்ல விதைகளோடு, சத்துரு விதைத்த களைகளுக்கும் சேர்த்து வேலைக்காரர்கள் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்தது" எத்தனை வேதனை? 'நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றும், 'என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள்" என்றும்,  'அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்குமுன்னே இருந்த "மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்" (எசே. 9:4,6) என்றும் எழுதப்பட்டிருப்பதற்கான கரணம் இதுதானோ? இதைத்தானே பேதுருவும், 'நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?" (1பேதுரு 4:17,18) என்று எழுதுகிறார். அப்படியென்றால், 'சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்" தேவனுடைய வீட்டிலும் இருக்கின்றார்களோ?

எனவே, பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1யோவான் 4:1)என்ற அப்போஸ்தலனாகிய யோவானின் ஆலோசனை சபைக்கு எத்தனை அவசியமான ஒன்று. 

அதுமாத்திரமல்ல, 'பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது" என்ற வார்த்தைகள், பயிர்கள் கதிர்விடும்வரை, அவர்களால் களைகளை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகின்றன. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத். 7:18,20) என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றாரே! மனுஷருடைய உறக்கத்தினால் உள்ளே நுழைந்துவிட்ட களைகள், மரங்களைப்போல உயர்ந்துவிட்ட நிலை சபைக்கு எத்தனை ஆபத்தானது? களைகளாய் சபைக்குள் நுழைந்து, முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு போன்றவர்கள், அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளாமல், தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளிவிடுவார்களே! (3 யோவான் 7-10)

இன்றைய நாட்களிலும், கண்ணயர்ந்து, களைகளை சபைக்கு உள்ளே உலாவவிட்டு, பின்னர் அவைகளைக் களைய முற்பட்டு, இறுதியில் கோதுமை மணிகளையும் இழந்து நிற்கும் சபைகள் உண்டல்லவா! மனுஷரின் உறக்கம் மற்றும் விழித்திராமை, 'கடைசி வரை அதாவது நியாயத்தீர்ப்பு வரை அச்சபையினை கதிர்களையும் மற்றும் களைகளையும் உள்ளடக்கிய சபையாக" மாற்றிவிடுவது எத்தனை வேதனையானது? 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1பேதுரு 5:8) என்ற எச்சரிப்புடன் சபையின் தூதர்களாகிய தலைவர்கள், மூப்பர்கள், மேய்ப்பர்கள் மற்றும் சபை மனிதர்கள் காணப்பட்டால், சபையில் தேவதூதர்களின் களையெடுக்கும் பணி அவசியமற்றதாகிவிடுமே! 

'எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்" (நீதி. 6:9-11) என்ற சாலொமோனின் வார்த்தைகள் நமக்கு எச்சரிக்கையாகத்தானே எழுதித்தரப்பட்டிருக்கின்றன. இன்றைய நாட்களில், 'ஆவிக்குரிய தரித்திரத்தையும், வறுமையையும்" அநேக சபைகள் அனுபவித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் இதுதானே! 'நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்" (வெளி. 3:17,18) என்று லவோதிக்கேயா சபைக்குச் சொல்லப்பட்டதைப்போலத்தானே, இத்தகைய சபைகளுக்கும் சொல்லப்படவேண்டும். 

பகட்டான கட்டிடம், வானளாவிய உயர்ந்த கோபுரம் மற்றும் வண்ண வண்ண மின்விளக்குகளுடனான அலங்கரிப்பு என வெளித்தோற்றத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கின்றபோதிலும், ஐசுவரியமான சபையைப்போலக் காட்சியளித்துக்கொண்டிருந்த போதிலும், பல சபைகளில் உள்ளிருப்போரின் நிலையோ உருக்குலைந்து காணப்படுகின்றதே! 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்" (மத். 23:27) என்ற நிலைதான் இப்படிப்பட்ட சபைகளுக்கும் பொருந்திப்போகிறதோ! 

இன்றைய நாட்களில், தன்னோடு இருப்பவரையும், தன்னுடைய பெலத்தையும் மற்றும் தான் பண்ணவேண்டிய பிரயாணத்தின் தூரத்தையும் அறிந்துகொள்ளாததே அநேக சபைகளைப் பெலவீனப்படுத்தியும் மற்றும் பயப்படுத்தியும் வைத்திருக்கிறது. யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னபோது, எலியா வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான் என்றும், ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்று சொல்லி, தழலில் சுடப்பட்ட அடையையும், பாத்திரத்தில் தண்ணீரையும் அவனது தலைமாட்டில் கொண்டுவந்து வைத்தபோதிலும், அவன், புசித்துக் குடித்துத் திரும்பப்படுத்துக்கொண்டான் (1இராஜா. 19:2,4,5,6) என்றும் வாசிக்கின்றோமே! 

இன்றைய நாட்களில், அநேக சபைகளின் நிலை இப்படிக் காணப்படவில்லையோ? உறங்கிக்கொண்டிருக்கும் சபைகளை தட்டியெழுப்பவும், அவைகளுக்கு முன், 'அப்பத்தையும், தண்ணீரையும்" வைத்து, சபையே, 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்" (1இராஜா. 19:7) என்று அவைகளைச் செயல்படச்செய்யவும், அநேக ஊழியர்களை சபைகளுக்கு தேவன் அனுப்பிக்கொண்டேயிருக்கின்றபோதிலும், 'கூட்டங்கள் நடைபெறும்போது மாத்திரம், கரங்களைத் தட்டி, அந்நியபாஷைகளைப் பேசி, ஆவியில் நிறைந்து, ஆர்ப்பரித்து, ஆவிக்குரிய ஆகாரங்களைப் புசித்துக் குடித்து, திரும்பவும் படுத்துக்கொள்ளுகிறது சபை". 

மேலும், 'சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்" என்று தங்களது பழைய அனுபவத்தையே பேசிக்கொண்டும், 'நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்" (1இராஜா. 19:10) என்று தங்கள் தற்கால பயத்தையும் கூடவே வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கின்ற சபைகள் எத்தனை! எத்தனை!! 'பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்" (1இராஜா. 19:18) என்று தேவன் சொன்னபோதிலும், 'அந்த ஏழாயிரம் பேரோடுகூட நானும் இஸ்ரவேலிலே இருப்பேன்" என்றும், அவர்களோடு இணைந்து நானும் இஸ்ரவேலின் தேவனுக்காகச் செயல்படுவேன் என்றும் தனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொள்வதற்குப் பதிலாக, தனக்கு மாற்றான ஏர் பூட்டி உழுத எலிசாவைத்தானே உடனே தேடிச்சென்றான் எலியா! எலியா மரிப்பதை தேவன் விரும்பாததினால்தான், அவனை சுழல்காற்றிலே எடுத்துக்கொண்டாரோ? அவ்வாறே சபையின் மரணத்தையும் விரும்பாததினாலேயே, சபையையும் எடுத்துக்கொள்ளவிருக்கின்றாரோ?

ஆயிரமாயிரமாய் ஜனங்கள் நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, 'தங்களுடைய ஆவியின் அனுபவங்களிலும், ஆசீர்வாதங்களிலும்" திளைத்தவர்களாக இருந்த இடத்திலேயே இருந்துவிட நினைக்கும் சபையை நோக்கி, 'இங்கே உனக்கு என்ன காரியம்" (1இராஜா. 19:9) என்ற சத்தம் இன்றைய நாட்களில் தொனிக்கட்டும். அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 12:5,6) என்ற சத்தியத்தை இன்றைய நாட்களில் சபைகள் புரிந்துகொள்ளட்டும்.

பாலசிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டவன் சிம்சோன் (நியா. 14:6), முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத் தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டவன் (நியா. 15:4,5), பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனவன் அவன் (நியா. 16:3); என்றபோதிலும், தவறான இடத்தில் அவன் தலைவைத்து நித்திரைசெய்ததினால், அவனது தலை (பெலன்) சிரைக்கப்பட்டுப்போயிற்றே! (நியா. 16:19). தவறானவர்களின் உறவினாலேயே, அவர்களது குடையின் கீழ் சபை நித்திரைசெய்வதினாலேயே இன்றைய நாட்களில் அநேக சபைகளில் 'தலை (பெலன்) சிரைக்கப்பட்டுவிட்டது"; அதாவது தலையாகிய பெலனாகிய கிறிஸ்து அகற்றப்பட்டுவிட்டார் என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியல்லவா! சிம்சோனின் உயிர் மீது அல்ல, அவனுக்கும் தேவனுக்கும் இடையிலான உடன்படிக்கையின் மீதல்லவா முதலில் கத்தி வைக்கப்பட்டது! பெலமுள்ள சபையை 'மற்ற மனுஷரைப் போல ஆக்க" சத்துரு எடுக்கும் முயற்சிக்கு சபையே எச்சரிக்கையாயிருக்கவேண்டுமே!!

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேதுரு 3:9) என்பதை சபை எண்ணினால், ஆத்தும ஆதாயப் பணியில் அல்லவோ அது தீவிரப்படவேண்டும்; மாறாக, 'மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்" (மத். 25:5) என்ற நிலைக்கு சபை தள்ளப்பட்டுவிடாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக; கிருபை உடனிருக்கட்டும்! 


காக்கும் மனுஷர் நித்திரை செய்ததினால்

களைகளைச் சத்துரு விதைத்துவிட்டானே!

வேறுபிரிக்கும் திறனும் இல்லாதே போனதினால் 

வேலிக்குள்ளும் களைகள் விதைகளாய் வந்துவிட்டதே!


கண்ணயர்ந்து சபை தூங்கியே போனதினால்

கண்ணெதிரே களைகளும் மரமாக மாறிற்றே!

விழித்திராமல் சபை நித்திரை செய்ததினால்

வறுமையும் தரித்திரமும் விருந்தாளிகள் ஆயிற்றே!


தரமற்ற மனிதர் திரளா யுட்புகுந்ததினால்

தரைமட்டும் கட்டியவைகளும் தகர்ந்தே போயிற்றே!

தகிக்கும் தீயொருநாள் தாங்காது போய்விட்டால்

தப்பி நிற்கும் மீதமாய் அஸ்திபாரம் மாத்திரமே!


வருகை இன்னும் தாமதிப்பதின் காரணம்

விளக்கை அணைத்து நாம் தூங்குவதற்கல்ல

பிரயாணம் இன்னும் வெகு தூ......ரமிருக்க

படுத்திருந்து நித்திரை செய்வது நியாயமுமல்ல

திங்கள், 17 பிப்ரவரி, 2025

வேலியும் போலியும்

 வேலியும் போலியும்

 Feb 2021

    உலகில் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழும்படியாக மாத்திரமல்ல (ரோமர் 1:1), பரலோகத்திற்கும் அத்துடன் பிறருக்கும் பிரயோஜனமான வாழ்க்கை வாழும்படியாகவும் (1 கொரி. 10:24) நம்மை அழைத்து, முன்குறித்து, தெரிந்தெடுத்து, அவருடைய அடிச்சுவடுகளில் அனுதினமும் நம்மை வழிநடத்திவருகின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். பிதாவிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? (மத். 19:27) என்றல்ல, நம்மிடத்திலிருந்து பிதாவுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வி நம்மில் மிகுந்திருந்தால், ஒவ்வொரு நாளையும் அவருக்காகவே செலவிடவேண்டும் என்ற சிந்தை நம்மை நிறைத்துவிடும். 

    வலிகள் நிறைந்த பாதைகளில் முழு உலகமும் தத்தளிக்கின்ற வேளையிலும், தம் ஜனத்தை வனாந்தரத்தில் போஷித்ததுபோலவும் (யாத். 16:15), செங்கடலையும் மற்றும் யோர்தானையும் பிளந்து வழிநடத்தியதுபோலவும் (யாத். 14:21; யோசுவா 3:17), வழிகளை உருவாக்கி நம்மை வழிநடத்துகின்ற அவருக்கே துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக!

    'முடிந்தது' (யோவான் 19:30) என்று சிலுவையில் இயேசு கிறிஸ்து மொழிந்த வார்த்தை, பிதா நியமித்தவைகளை அவர் நிறைவேற்றி முடித்ததை நினைவுபடுத்துவதோடு மாத்திரமல்லாமல் (யோவான் 17:4), சத்துரு இனி அவரைத் தொடர இயலாத ஓர் வலிமையான நிலைக்கு அவர் உயர்ந்துவிட்டதின் தொடக்கத்தையும் நமக்கு உணர்த்துகின்றது. இயேசு கிறிஸ்துவின் தலை சிலுவையில் உயர்த்தப்பட்டபோது (யோவான் 3:14,15), சத்துருவின் தலையோ கீழே, தரையிலே நசுக்கப்பட்ட வேளை அல்லவோ அது (ஆதி. 3:15). பாடுகளின் வழியாகப் பயணிக்கும் நமது வாழ்க்கையிலும், இத்தகைய வெற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்குங்கால் ஆனந்தமே! எனினும், இக்கட்டுகளும், இன்னல்களும் நிறைந்திருக்கும் இத்தகைய இறுதிக் காலத்தில், சத்துருவின் ஆளுகையில் நாம் வீழ்ந்துவிடாமல், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் காத்துக்கொள்ளும்படியான சில ஆலோசனைகளை இந்த மடலில் எழுதி உணர்த்த விரும்புகிறேன்.

    இது கடைசி காலம் என்பதை மாத்திரமே நாம் கவனத்தில் கொள்ளாமல், கடைசி காலத்தில் ஆண்டவர் செய்யவிருக்கும் அறுவடைக்கு நாம் ஆயத்தமா? என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். 'அறுப்பு' என்றதும், 'அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்' (மத். 9:37,38) என்ற வசனமே நமது ஞாபகத்திற்கு வரலாம்; நம்முடைய கரங்களில் அரிவாளைக் கொடுத்து, ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொண்டு வா என்று அவர் சொல்லுவதையே நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம்; என்றாலும், 'வேலைக்காரர்களாகிய நம்முடைய வாழ்க்கை இன்று அறுக்கப்படுமென்றால், நாம் ஆயத்தமா?' நாம் சந்தோஷப்பட்டு களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் (வெளி. 19:7) என்று சொல்லுமளவிற்கு, எப்பொழுதும் நாம் ஆயத்தமா? மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நாம்தானே ஆகாதவர்களாகப் போய்விடக்கூடாதே. (1 கொரி. 9:27) 

    மணவாட்டிகளை அழைக்க தூதர்களை அனுப்பும்போது, அந்த அறுவடையிலே, அவரோடு நாம் அமர்ந்திருப்போமா? கர்த்தருடைய பிள்ளைகள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் இவ்வுலகத்தாரால் நாம் அழைக்கப்பட்டாலும், 'விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள் நாம்' என்று அழுத்தமாக வேதம் எடுத்துச் சொன்னாலும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை களைகளாகவே வைத்துவிடவேண்டும் என்றும், மணவாளனது வருகையிலே நாம் மண்ணிலேயே இருந்துவிடவேண்டும் என்றும், பிள்ளைகளாக அல்ல பிழைகளாகவே நாம் வாழவேண்டும் என்றுமே பிசாசு விரும்புகின்றான். கலியாண வஸ்திரத்தைக்கூட ஜனங்களை அவன் தரிக்கவிடுகிறதில்லை; இரட்சிப்பின் செய்தியைக்கூட காதுகளில் நுழைய விடுகிறதில்லை; மனம் திரும்புங்கள் என்ற வார்த்தைகளால்கூட இருதயங்களை உணர்வடையவிடுகிறதில்லை; வழியருகிலேயே அநேக ஜனங்களை இன்னும் சத்துரு நிறுத்திவைத்திருக்கிறான், பறவைகள் பறந்துகொண்டிருக்கும் பாதையில்தான் இன்றும் அவர்களை நிற்கச்செய்துகொண்டிருக்கின்றான், விதைக்கப்படும் வசனங்களை உடனே பொறுக்கி வீசிவிடும் வேலையினையே அவன் செய்துகொண்டிருக்கின்றான். உலகமும் அவர்களும் ஒன்றாயிருக்கவேண்டும், உலகத்தோடு ஒட்டியே வாழவேண்டும் என்று, அநேக காரியங்களை காணும்படியாகவும், கேட்கும்படியாகவும் செய்து, உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கவே போதனை செய்கிறான். 

    சத்துருவின் தந்திரத்திற்கு தன்னை விற்றுப்போட்டுவிட்ட ஒரு கூட்டம், ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தையே மறந்துபோய்விட்டது. மணவாட்டி என்பதை மறந்து, மண்ணோடு ஒட்டியே வாழ்ந்துகொண்டிருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை இந்த உலகத்தை விட்டு இன்று அறுக்கப்படுமென்றால், நம்முடைய நிலை என்ன? மணவாளனாகிய அவரை மணவாட்டியாக சந்திக்க நாம் ஆயத்தமா? ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் நம்முடைய கால்கள் அடியெடுத்துவைக்க முடியுமா? தேவ ஜனத்தோடுகூட, தேவனுடைய தோட்டத்தில்தான் நான் இருக்கிறேன், தேவ ஊழியர்கள் வாழும் இடத்திலேதான் நானும் வாழுகின்றேன், என்னைச் சுற்றிலும் அவருடைய வேலி இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு, கனியற்றவர்களாக கவலையின்றி, களைகளாக இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், அறுவடையின் நாட்களில் தேவ ஜனத்திலிருந்து நாம் பிரிக்கப்படுவதும், அக்கினியிலே எரிக்கப்படுவதும் நிச்சயம் என்ற உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். 

    அறுவடையின் நாட்களிலே, களைகளாக நாம் காணப்பட்டுவிடக்கூடாது என்றால், ஆண்டவர் கற்றுத்தந்திருக்கிற காரியங்களை நாம் கடைபிடிக்கவேண்டியது அவசியம். முதலாவது, நாம் கன்னிகைகளோடு கலந்திருந்தால் மாத்திரம் போதாது; நமது கையில் எண்ணெய் இருக்கவேண்டும். 

    மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறும்போது, புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள் (மத் 25:3,4) என்று சொல்லுகின்றார். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளவேண்டியவர்கள் நாம் (சங் 116:13); என்றபோதிலும், புத்தியில்லாத ஜனங்களை, இரட்சிப்பின் பாதையிலிருந்து தூரமாக சத்துரு வழிவிலகச் செய்வதை இந்த உலகத்திலே நாம் காணமுடியும். அப்படிப்பட்டவர்கள், தங்கள் பாத்திரங்களில் எண்ணெய் இல்லாமல் தேவனுடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பார்கள்; இரட்சிக்கப்படாதவர்களாகவே ஆராதனையில் பங்கெடுப்பார்கள்; பாவமன்னிப்பு என்றால் என்ன? என்பதை அறியாமலோ அல்லது அறிந்தும் தங்களை அர்ப்பணிக்காமலோ ஆலயத்தில் அமர்ந்திருப்பார்கள். இவர்கள் கன்னிகைகளோடுகூட கலந்திருக்கலாம், உலகத்தாரால் அடையாளங்காணக்கூடாதவர்களாகக்கூட காணப்படலாம். என்றாலும், 'தேவன் இருதயத்தின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறாரே' (சங். 44:21), அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறதே (எபி 4:13); அப்படியிருக்க அவருக்கு முன்னே நம்மை மறைத்துக்கொள்வது கூடாதே. 

    இரட்சிக்கப்பட்ட மனிதனோடுகூட வயலிலிருந்தாலும், எந்திரம் அரைத்துக்கொண்டிருந்தாலும் (மத். 24:40,41), மனந்திரும்புதலும், மறுபிறப்பும் இல்லையென்றால், மணவாட்டியாக பரலோகம் ஏற்றுக்கொள்ளாதே. ஐயோ! இந்த மனந்திரும்பாத மனிதன், மனந்திரும்பின மனிதனோடு எத்தனையாய் கஷ்டப்பட்டு எந்திரம் அரைக்கிறான், எத்தனையாய் வயலில் வேலை செய்கிறான், எத்தனையாய் உதவி செய்கிறான், ஊழியர்களை எத்தனையாய் தாங்குகிறான், சத்துருவின் தோட்டத்திலும் வேலிக்குள்ளும் அல்ல, என்னுடைய தோட்டத்திலேதானே வேலை செய்கிறான் என்று உழைப்பை மாத்திரம் கணக்கில் கொண்டு, பரலோகத்தின் உள்ளே அவர்களை விட்டுவிடுவதில்லை. தேவ மனிதர்களோடுகூட சேர்ந்து இருந்தாலும், இணைந்து வேலை செய்தாலும், வேலை ஒருபோதும் நம்மை பரலோகம் கொண்டுசெல்லாது. இரட்சிக்கப்பட்டவர்கள், இரட்சிக்கப்படாதவர்கள் ஆகிய இரண்டு கூட்டத்தாரும் வயலில் இருப்பார்கள்; எனினும், நாம் எந்தக் கூட்டத்தில் இருக்கின்றோம்? 'கன்னிகைகள்' என்ற பெயரில் மாற்றமில்லை; எனினும், எண்ணெயில்லையென்றால் நாம் களைகளே. 

    அவருக்காக வேலை செய்திருக்கலாம், அநேக காரியங்களை இழந்திருக்கலாம், ஆஸ்திகளையும் தேவ மனிதர்களுக்காக கொடுத்திருக்கலாம், வாழ்க்கையையே தேவமனிதர்களோடுகூட செலவழித்திருக்கலாம்; எனினும், மனந்திரும்பாவிட்டால், அனைத்து மண்ணோடு போய்விடுமே, தேவனுடைய வயலிலே செய்த வேலையும் வீணாகவே எண்ணப்பட்டுவிடுமே. 

    எனவே சாலொமோன், பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படி செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள் (பிர. 8:10) என்று எழுதிவைத்திருக்கிறான். மேலும், இயேசு கிறிஸ்துவின் நாட்களில், பிதாவின் வீட்டை வியாபார வீடாக ஜனங்கள் மாற்றியிருந்தார்கள் (யோவான் 2:16) என்பதையும் வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே. அதுமாத்திரமல்ல, அவர் எசேக்கியேலை நோக்கி: 'மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? (எசே 8:6) என்று கூறுவது எத்தனை வேதனையான காரியம். கொஞ்சம் கொஞ்சமாக சத்துரு நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கும்போது, நம்முடைய வாழ்க்கையும் இப்படி மாறிவிடக்கூடும். துன்மார்க்கத்திற்கு இடங்கொடுத்து, ஆலயத்தைக் குறித்த பக்தியற்றவர்களாக அதனை வியாபார ஸ்தலமாக்கும்போது, அவரையே அங்கிருந்து வெளியேற்றிவிடுகின்றோம் நாம். அவருக்குப் பிரியமில்லாதவைகளை நாம் செய்யும்போது, ஆண்டவர் வெளியேறிவிடுவதால், ஆலயங்களையும் ஆக்கிரமித்துக்கொள்வது சத்துருவுக்கு எளிதானதே. 

    ஒரு கூட்ட ஜனங்கள், பாதையில் காயப்பட்டுக் கிடக்கிற மனிதர்களையும் காணாமல் பரிசுத்த ஸ்தலத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் (லூக். 10:31,32), தேவையுள்ள ஜனங்களைப் பாராமலேயே தேவாலயத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள், தேவாலயத்திலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? என்பதை அறிந்துகொள்ள முடியாமலேயே தேவாலயத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். தேவன் அல்ல, தேவாலயமே அவர்களுக்கு பெரிதாகத் தென்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், இன்றும் தேவாலயத்தில் தேவனை ஆராதிக்க வரும் மக்கள் உண்டே; இத்தகைய கூட்டத்தில் நாம் காணப்பட்டுவிடக்கூடாது. 

    இரண்டாவதாக, கதிர்களுக்குள்ளே நாம் வளர்ந்துகொண்டிருக்கலாம்; ஆனால், நாம் களைகளாயிருந்துவிடக்கூடாது. தேவனது தோட்டம்தானே, விதைத்தவரும் எஜமானனாகிய அவர்தானே; அப்படியிருக்க களைகள் எங்கே இருந்து வந்தன? தோட்டக்காரர்கள் தூங்கினதால் அல்லவோ! எஜமானால் கோதுமைதான் விதைக்கப்பட்டிருந்தது; எனினும், தோட்டக்காரர்களின் நித்திரை சத்துருவை வேலிக்கு உள்ளே வரவிட்டதோடு மாத்திரமல்ல, விதைக்கவும் வழிவகுத்துவிட்டது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் செய்யும் நித்திரை, சத்துரு நுழைய வழிவகுத்துவிடும். கைபேசியோ, தொலைக்காட்சியோ, புத்தகமோ, பேசும் நபர்களோ, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் நித்திரை சத்துருவுக்கு வழியைத் திறந்துவிடும் என்பதால் நாம் கவனமாயிருக்கவேண்டும். 

    சத்துரு களைகளை விதைத்தபோது வேலைக்காரர்களோ நித்திரைசெய்துகொண்டிருந்தார்கள், அதை அறியாதிருந்தார்கள்; மண்ணுக்குக் கீழே இருந்த அவைகள், கண்ணுக்கும் தெரியாமலிருந்தது; எனினும், வளரத்தொடங்கி, களைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை வெளிக்காட்டத் தொடங்கினபோதோ, அவைகளை அடையாளம் கண்டுகொண்டார்கள். இன்றும், நித்திரை செய்யும் நேரத்தில், களைகளான மனிதர்களை தோட்டத்திற்குள் சத்துரு விதைத்துவிடுகின்றானே. அதனைக் காணும் வேலைக்காரர், இது என் எஜமானின் தோட்டமல்லவா, இவர்களை இங்கே விதைத்தது யார்? ஐயோ! கொஞ்சம் கொஞ்சமாக களைகள் தங்கள் வேலைகளைத் காட்டத் தொடங்குகின்றார்களே, குணத்தை வெளிப்படுத்துகின்றார்களே, வார்த்தைகளில் மாறுபடாய் பேசுகிறார்களே, கதிர்களுக்கும் களைகளுக்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்துகின்றார்களே என்று புலம்பத் தொடங்குகின்றார்கள். ஆம், நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டாதே (மத். 7:18), அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத். 7:16) என்றும் வாசிக்கின்றோமே. எஜமான் விதைத்தவைகள் களைகளாக மாறவில்லை; களைகள் சத்துரு கரங்களால் விதைக்கப்பட்டவைகளே. 

    வேலைக்காரர்களாகிய தாங்கள் தூங்கினதும், காவாமல் போனதும் உண்மைதான்; என்றாலும், சத்துரு வந்துவிட்ட செய்தியையும், விதைத்துவிட்ட செய்தியையும் அவர்கள் அறிந்தபோதோ, அதனை பொறுத்துக்கொள்ள அவர்களுக்கு மனதில்லை. எஜமானின் தோட்டத்திற்குள் எதிரி உலாவுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுடைய விழிகளெல்லாம், சத்துருவின் வழிகளின் மேலேயே இருக்கின்றன. ஐயோ! கதிர்களுக்கு மத்தியில் களையாக இவன் எப்படி வந்தான், தேவனுடைய தோட்டத்திலே சத்துருவின் திட்டம் தீட்டப்படுகின்றதே, என் எஜமான் வந்தால் நான் என்ன பதில் சொல்லுவேன்? என்றே அவர்கள் கலங்கிக்கொண்டிருந்தார்கள். 

    விதைக்கும்படியாக சத்துரு உள்ளே வந்தபோது, வேலைக்காரர்கள் தூக்கத்திலிருந்தார்கள்; ஆனால், சத்துரு களைகளை விதைத்துவிட்டுச் சென்றபின்போ, வேலைக்காரர்களுக்கு தூக்கமே தூரமாகிப்போனது. எஜமானே! நீர் தெரிந்தெடுத்துக் கொண்டுவந்த நல்ல விதையைத்தானே உமது நிலத்தில் விதைத்தீர் என்று களைகளைக் குறித்தே கவலை கொண்டவர்களாக, களைகள் பிடுங்கப்படவேண்டும் என்ற கதறுதலோடு, எஜமானை நோக்கி, 'நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டபோது, எஜமானோ, வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். (மத் 13:28-30) 

    வேலைக்காரர்கள்தானே, களைகளையும் அடையாளம் கண்டுகொண்டவர்கள்தானே, பிடுங்கிப்போடட்டுமா? என்றும் பாரத்துடன் கேட்கின்றார்களே; அப்படியிருக்க, எஜமான் அவர்களை ஏன் தடுக்கவேண்டும் என்ற கேள்வி நமக்குள் உண்டாகக்கூடும். எனினும், சில களைகளின் வேர், சில கோதுமைகளின் வேரோடு மண்ணுக்கு அடியில் நமது கண்களுக்கும் மறைவாக பின்னியிருக்கிறது; களைகளைப் பிடுங்கினால், கூடவே கோதுமைகளையும் அது இழுத்துக்கொண்டுவரும், களைகளாகிய மனிதர்களை அகற்றினால், கோதுமைகளாகிய மனிதர்களையும் இழுத்துக்கொண்டு செல்பவர்கள் அவர்கள், களையாகிய அவர்கள் மீது கரம் வைத்தால், தோட்டத்தின் விளைச்சலின் மேலேயே விரல்நீட்டுபவர்கள் அவர்கள் என்பதே அதற்குக் காரணம். வீரமுடன் வேலைக்காரர்கள் கேட்டபோதிலும், வேண்டாம் என்று தடுத்து, தூதர்களிடமே அதை விட்டுவிட்டதின் காரணம் இதுவே (மத். 13:39,49). நமது நித்திரையினால் களைகள் உள்ளே வந்துவிட்டாலும், அறுக்கும் பொறுப்பினையோ அவரது கரங்களிலேயே விட்டுவிடுவோம். சத்துரு விதைத்தது போகட்டும், இனி கொண்டுவருகிறதையாவது தடுக்க தீவிரிப்போம். கோதுமைகளாக இல்லாவிடில் கொளுத்தப்படுவது நிச்சயம். நம்முடைய மாம்ச பெலத்தை பிரயோகிப்போமென்றால், நீதிமான்களையும் இழக்க நேரிடும். நாம் கொஞ்சம் தூங்கிவிட்டாலும், இறுதிவரை களைகளோடுதான் வாழ்ந்துகொண்டிருக்க நேரிடும்; அத்துடன், கதிர்களை மாத்திரமல்ல, களைகளையும் வேலிக்குள்ளேயே வைத்து தினம் தினம் பராமரிக்கும் சூழ்நிலையும் நேரிட்டுவிடும். கதிர்களின் வேலிக்குள் களைகள் வந்துவிட்டால், கதிர்களின் வேருக்கும் அனுதினமும் அது ஆபத்துதானே; எனவே, எச்சரிக்கை. 

    மூன்றாவதாக, நாம் பசுமையாக இருந்தால் மாத்திரம் போதாது; பிறரது பசி தீர்க்கவேண்டும். நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே (சங் 50:12) என்று சொல்லுபவர்தான் நம்முடைய தேவன்; இல்லாதவைகளையும் இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர் அவர் (ரோமர் 4:17); 'உண்டாகக்கடவது' (ஆதி. 1:3) என்ற ஒரு வார்த்தையே அதற்குப் போதுமானது; அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங் 33:9) என்பதே வேதத்தின் சத்தியம். அப்படியிருக்க, தான் பசியாயிருப்பதை பிறரிடத்தில் சொல்லவேண்டியதோ அல்லது தன்னுடைய பசியைத் தீர்க்கும்படியாக பிறரைத் தேடவேண்டியதோ அவருக்கு அவசியமில்லாதது என்று ஒருவேளை நமக்குத் தோன்றலாம். ஆனால், தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வல்லமை பிறரது பிரயோஜனத்திற்காகவே என்பதை வெளிப்படுத்தும்படியாகவே, இத்தகைய மாதிரியை தனது வாழ்க்கையின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் தாலந்துகளையோ, வரங்களையோ, ஆஸ்திகளையோ கொண்டு நம்முடைய வாழ்க்கையையே திருப்திப்படுத்த நாம் முயற்சிக்காமல், பிறருக்காகவே பயணிப்போமென்றால் அதன் பலனை பரலோகத்தில் நாம் காண்பது நிச்சயம். 

    அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: 'நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்' என்று அவருடைய வல்லமையைக் கொண்டே வழியில் மறித்து, அவரை திசை திருப்ப முயற்சித்த போதிலும், தன்னுடைய வல்லமை வெளிப்படும் வார்த்தையை தனக்கென அவர் பயன்படுத்தவில்லையே. மாறாக, மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத் 4:2-4) என்று சொன்னவராக, பிசாசின் ஆலோசனையினை புறந்தள்ளினாரே. 

    எனினும், பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா? என்று பின்வாங்கிப்போன தனது சீஷர்களிடத்தில் அவர் கேட்டபோது, 'ஒன்றுமில்லை' என்று அவர்களிடமிருந்து வந்த பதிலைக் கேட்டபோதிலும், தன்னிடத்திலிருந்தவைகளை தானே புசித்துவிட்டு புறப்பட்டுப் போய்விடவில்லையே; அத்துடன், கடலிலிருந்து வெறுமையாகவும் உடனே சீஷர்களை வெளியே அழைத்துவிடவில்லையே; மாறாக, அவர்களது வலையை நிரப்பியதுடன், தான் ஆயத்தம்பண்ணிவைத்திருந்த அப்பத்தையும், மீனையும் அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்களது பசியைத் தீர்த்தாரே (யோவான் 21:5-9). வெறுமையாய் கடலிலிருந்த அவர்களது பசியில் அவருக்குத்தான் எத்தனை அக்கறை! 

    என்றபோதிலும், சீஷர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்படியாக, பெத்தானியாவிலிருந்து அவர் புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டானபோது, அவர்களிடத்தில் எதுவும் கேட்காமல், இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள் (மாற் 11:12-14) என்று வாசிக்கின்றோமே. மற்றவர்களைப் போஷpக்க நீங்கள் 'எல்லாக் காலத்திலும்' ஆயத்தமாயிருக்கவேண்டும் என்ற பாடத்தையே இயேசு கிறிஸ்துவின் இந்த செயல் சீஷர்களுக்குப் போதித்தது. 

    ஆதாமும், ஏவாளும் தங்களது நிர்வாணத்தை மறைக்க அத்திமரத்தில் இலைகளைத் தேடினார்கள்; புசிக்கவேண்டாம் என்று சொல்லப்பட்ட மரத்தின் கனியைப் புசித்துவிட்டு, புசிக்கும்படியான கனிகளைக் கொடுக்கும் அத்திமரத்திலோ இலைகளைப் பறித்து அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள் (ஆதி. 3:7). ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தேவை அத்திமரத்தின் இலைகளல்ல, கனிகளே. 

    அவரது தோட்டத்திற்குள் இருக்கிறேன்; அவரது தோட்டத்தின் பலனையே தினம் தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்; மற்ற மரங்களைக் காட்டிலும் பச்சைப் பசேலென இருக்கிறேன் என்று ஒருவேளை நம்மை நாமே பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கலாம்; எனினும், கனியில்லையெனில், அவரது கரத்தினாலேயே நாம் அகற்றப்படுவோம் என்பது நிச்சயம். நிலத்தைக் கெடுக்கும் அத்திமரமாக அவரது வேலிக்குள் நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாதே (லூக். 13:6-9); செத்த ஈக்களாக தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறப்பண்ணிவிடக்கூடாதே (பிர. 10:1). கயிற்றினால் சவுக்கை உண்டுபண்ணி தனது ஆலயத்தைச் சுத்திகரிப்பதற்கு முன் (யோவான் 2:15), கனிகளால் நம்முடைய வாழ்க்கையை நிறைத்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளுவோம். 

    ஆளும் பதவிகளையே தேடித் தேடி, ஆவிக்குரிய கனிகள் அற்றவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். அதிகாரத்தையே விரும்பி விரும்பி தங்கள் மதுரத்தை விட்டுவிட்டவர்கள் பலர். இவர்கள் பதவிகளிலே பசுமையாக இருந்தாலும், பரலோகத்தின் பார்வையிலோ கனியற்ற பட்டுப்போன விருட்சங்களே. நமது மதுரத்தையும், நற்கனியையும் விட்டு விட்டு மற்றவர்களை நாம் அரசாளச் சென்றுவிடக்கூடாதே (நியா. 9:11). லாசருவைப்போல வாசலில் கிடந்தாலும் (லூக். 16:20), நித்தியத்தில் ஆபிரகாமின் மடியிலேயே தலைசாய்க்கவேண்டும் (லூக். 16:23) என்பதே நித்தமும் நமது நினைவாகட்டும். மொர்தெகாயைப் போல அரமனை வாசலில் அமர்ந்திருந்தாலும் (எஸ்தர் 2:19) தேவ ஜனங்களின் அழிவினைத் தடுத்து நிறுத்தும் சிந்தையே நமது எண்ணங்களில் இன்றும் என்றும் உயர்ந்து நிற்கட்டும்.

விலைகொடுத்து வாங்கியவரின் தோட்டத்திற்குள்

களைகளாக உலாவும் மனிதர்களா!

கைகளில் எண்ணெயோடு கன்னிகைகள் புறப்பட

காலியான பாத்திரங்களோடு போலிகளா!


கணப்பொழுது நித்திரையும் சத்துருவுக்கு வழிதருமே

வேலியின் வாசலுக்குள் போலிகளும் ஊடுருவுமே

வேலிக்குள் வளர்ந்தபின் வேரோடு பிடுங்கினால்

கதிர்களும் களைகளோடு காணாமற்போய்விடுமே


அவசரமாய் தோட்டத்தில் அரிவாளை நீட்டாமல்

விளைச்சலின் இடையிலே குலைச்சலைக் காட்டாமல்

விட்டுவிடு வளரட்டும் வருகையின் நாள் மட்டும்

அறுவடை அவருடையது அன்றவை எரிபடட்டும்


பாதையில் பசுமையாய் பார்வைக்கு நில்லாமல்

பயணமாய் வருவோரின் பசியினைத் தீர்த்திடுவோம்

நிலத்தினைக் கெடுக்கும் விருட்சமாய் வளராமல்

நித்தியம் மகிழும் கனிகளைக் கொடுத்திடுவோம்


அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோதரன் P.J. கிருபாகரன்


புதன், 11 டிசம்பர், 2024

அழைப்பினைத் தொடரும் ஆயுள்


Nov. 2024

சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறவரும் (ஏசா. 33:5), தமது பரிசுத்த ஆலயத்தின் நன்மையாலும் மற்றும் உச்சிதமான கோதுமையினாலும் நம்மைப் போஷித்து, கன்மலையின் தேனினால் நம்மைத் திருப்தியாக்குகிறவரும் (சங். 65:4; 81:16), திருப்தியாக்கினதைத் தொடர்ந்து, கழுகுக்குச் சமானமாய் நமது வயதை திரும்ப வாலவயதுபோலாக்குகிறவரும் (சங். 103:5), வாலவயதாக்கினதைத் தொடர்ந்து, நன்மையினால் நாம் போஷிக்கப்பட்டதின் காரணத்தையும் பெலத்தையும் வாழ்க்கையில் உணரச் செய்யும்படியாகவும் மற்றும் தனது இராஜ்யத்தின் பணிக்காக அதனைப் பயன்படுத்தும்படியாகவும், நம்மை பலவான் கையிலுள்ள அம்புகளாக மாற்றி, நாணமடையாமல்  சத்துருக்களைச் சந்திக்கச் செய்கிறவருமாகிய (சங். 127:4,5) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்! 

பிரியமானவர்களே! இக்கடைசி நாட்களில், அழைப்பினைத் தொடர்ந்த புறப்படுதலிலும் மற்றும் ஆத்தும ஆதாயப் பணியின் அவசரத்திலும், தொய்வினைச் சந்திக்காமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும் என்ற தாகம் நம்மில் தணிந்துபோகாமல் நிலைத்திருக்கட்டும்.       

சூழ்நிலைகளும், சுற்றுப்புறங்களில் நடப்பவைகளும், அத்துடன், நாம் உற்றுநோக்கும் காரியங்களும், நாம் சுவிசேஷம் அறிவிப்பதனை அடக்கும் சுவர்களாக ஒருபோதும் நமது கண்களுக்குக் காட்சியளிக்கக்கூடாது. 'கதவுகள் பூட்டியிருக்கையில், நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம்' (யோவான் 20:19) என்று சொன்னவரின் சீஷர்கள் நாம் என்ற நினைவு நித்தம் நம்மை ஆட்கொள்ளுமென்றால், அடைக்கப்பட்ட மனிதர்களையும், கிராமங்களையும், பட்டணங்களையும், தேசங்களையும் அவருக்காக ஆதாயப்படுத்தவேண்டும் என்ற வேட்கை நம்மை ஆத்தும வீரர்களாக நிச்சயம் மாற்றிவிடும்.   

வஸ்திரங்கள் கிழித்துப்போடப்பட்டு, அநேக அடிகள் அடிக்கப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்ட நிலையில் பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், தங்கள் கட்டுகளைக் குறித்துக் கவலைப்படாலும் அத்துடன் கண்ணீர் வடிக்காமலும், கர்த்தரைத் துதித்துப் பாடினதினால், அவர்களுடைய கட்டுகள் மாத்திரமல்ல, 'காவலில் வைக்கப்பட்டிருந்த, துதிப்பாடல்களைச் சிறைச்சாலையில் கேட்டுக்கொண்டிருந்த எல்லாருடைய கட்டுகளும்' கழன்றுபோயிற்றே! (அப். 16:26). மேலும், 'நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம்' (அப். 16:28) என்று பவுல் சத்தமிட்டுக் கூறுவது, 'துதிப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்ததைத் தொடர்ந்து, காவலில் இருந்தவர்கள், பவுல் மற்றும் சீலாவினால் அறிவிக்கப்பட்ட சுவிசேஷத்தை ஒருவேளை சிறைச்சாலையில் அமர்ந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கக்கூடும்' என்பதையும் நமக்குத் மறைவாக எடுத்துக்கூறுகின்றதே! 'சரீரப்பிரகாரமான விடுதலையைக் காட்டிலும், ஆத்தும விடுதலையே அவசியம்' என்று உணர்த்தப்பட்ட மற்றும் உடனிருந்தவர்கள் உணர்ந்துகொண்ட இரவாக அது இருந்திக்கக்கூடும். 

அதுமாத்திரமல்ல, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்துகொள்ளப்போனான சிறைச்சாலைக்காரனையும் நோக்கி, பவுல் மிகுந்த சத்தமிட்டு, 'நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே' (அப். 16:27,28) என்று அவனையும் தப்புவித்து, அவனுடையவர்கள் அனைவரையும் அவர்கள் ஆதாயப்படுத்தினார்களே! 'ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?' என்ற சிறைச்சாலைக்காரனின் கேள்வியும், 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்' (அப். 16:30,31) என்ற அப்போஸ்தலரின் பதிலும், அங்கு இரட்சிப்பின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டுக்கொண்டிருந்ததையும் கூடவே மறைவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றதே! காவலிலிருக்கின்றவர்களைக் காயப்படுத்துகின்ற சிறைச்சாலைக்காரயும், காயங்களைக் கழுவும் நிலைக்கு சுவிசேஷம் மாற்றிவிட்டதே! சிறைச்சாலைக்காரனே பவுலையும் சீலாவையும் சிறையிலிருந்து வெளியே வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய், வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதிக்கக் கேட்டு, அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்களே! (அப் 16:33) 

பிரியமானவர்களே! நாம் அறிவிக்கிற சுவிசேஷம் நிச்சயம் ஒருநாள் நம்மைக் காயப்படுத்துகின்றவர்களையும் காயங்களைக் கழுவுகிறவர்களாக மாற்றும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, நமக்கு விரோதமாக எழும்புகின்ற மற்றும் நம்மைக் காயப்படுத்துகின்ற ஜனங்களின் அழிவையும் தடுத்து நிறுத்தி, அவர்களையும் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் ஆத்துமாக்களையும் நித்திய அழிவிற்கு விலக்கி மீட்டு நித்திய ஜீவனில் சேர்க்க கர்த்தர் நமக்கு உதவிச் செய்வாராக! சிறைச்சாலைக்காரன் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால், சிறையிலிருந்து வெளியே செல்வது அப்போஸ்தலர்களுக்கு மற்றும் அவர்களோடுகூட காவலிலிருந்தவர்களுக்கும் மேலும் இலகுவாக மாறியிருக்கும்; என்றாலும், சிறைச்சாலைக்காரனின் ஆத்துமாவும் கர்த்தரின் பார்வையில் விலையுயர்ந்தது என்பதை அவர்கள் அறிந்ததினாலேயே, 'அந்த ஒரு ஆத்துமாவையும் இழக்க அவர்கள் ஆயத்தமாக இல்லை'; விளைவு, அவனே அவர்களை வெளியே அழைத்துச் சென்று வீட்டாருக்கும் மற்றும் உடனிருந்தவர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வகை செய்தான். நாம் தப்புவிக்கும் ஒரு ஆத்துமா, அநேகருக்கு கிறிஸ்துவை அறிவிக்கும் பாலமாக மாறக்கூடும் என்பது எத்தனை உண்மை. 

கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கிச் (அப் 9:1,2) சென்றுகொண்டிருந்த சவுலை, 'அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும்  இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்' (அப். 9:15) என்று பார்க்கின்றவரல்லவா நமது தேவன்; இத்தகைய பார்வை, நம்மையும் ஆட்கொள்ளுவதாக. 

சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்து, கதவுகளெல்லாம் திறவுண்டதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று பவுலும் சீலாவும் சிறைச்சாலையை விட்டு உடனே வெளியே ஓடியிருந்தால், காவலில் வைக்கப்பட்டிருந்த, மற்றும் அவர்களோடு கட்டப்பட்டிருந்த மற்றவர்களும் சிறைச்சாலையை விட்டு வெளியே ஓடியிருப்பார்கள்; 'காவலிலிருந்த மற்றவர்களுக்கு சரீரப்பிரகாரமான விடுதலை கிடைத்திருக்கும்; ஆனால், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் கிடைத்திருக்காதே!' அநேக நேரங்களில், நம்முடைய வாழ்க்கையின் விடுதலையை மாத்திரமே மனதில் கொண்டவர்களாக வாழ்வதினால், மற்றவர்களை விடுவிக்கும் பணியிலிருந்து நாம் விலகிப் பயணிக்கின்றோம் அல்லது வெளியேறிவிடுகின்றோம். அல்லது, மற்றவர்களது கட்டுகள் கழன்றுவிழுவதற்காக மாத்திரமே காரியங்களைச் செய்து, அவர்களது ஆத்தும இரட்சிப்பைக் குறித்து அக்கரையற்றவர்களாகச் சென்றுவிடுகின்றோம். இத்தகையப் பிழையினால், மண்ணுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டினாலும், விண்ணகம் சேராமல் விலைமதிப்புள்ள ஆத்துமாக்கள் விட்டுவிடப்பட்டுவிடுமே! என்றபோதிலும், இந்த நிலையில் வாழ விரும்பும் கூட்டத்தினரும், வாழத் தூண்டும் கூட்டத்தினரும் பெருகி வரும் காலம் இது. இம்மைக்காகமாத்திரம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்து, பரிதபிக்கப்படத்தக்க நிலையில் (1 கொரி. 15:19), சரீரத்தோடும் மற்றும் சரீரத்திற்குச் சார்ந்தவைகளோடும் திருப்தியாகிவிடுகின்றவர்களின் வாழ்க்கை, சத்துருவுக்குச் சாதகமாகவே மாறிவிடுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. 

 மேலும், பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட  இருந்த சதுசேயசமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தபோது,  கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான் (அப். 5:17-19). சிறைச்சாலையில் வைக்கப்பட்டு அப்போஸ்தலர் பத்திரமாகப் பூட்டப்பட்டிருந்தபோதிலும், தூதனால் அக்கதவுகள் திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டதே! 

(அப். 5:19,23). இதனால், சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் அடைக்கப்படும்போது, 'ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவர்' (வெளி. 3:7) அவர் என்பது எத்தனை தெளிவாகிறது. என்றபோதிலும், விடுவிக்கப்பட்டுவிட்டோம் என்று அப்போஸ்தலர்கள் ஓடி ஒளிந்துகொள்ளவில்லையே! மீண்டும் பகீரங்கமாகப் பிரசங்கித்தால், சிறை செல்ல நேரிடும் என்றும் அவர்கள் எண்ணி அஞ்சவில்லையே! 'நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள்' என்ற தூதனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள் அல்லவா! (அப். 5:20,21) நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? (அப். 5:28) என்ற பிரதான ஆசாரியனின் கேள்விக்கு, 'மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது' (அப். 5:29) என்பதுதானே அவர்களது உறுதியான பதிலாயிருந்தது. 

அவ்வாறே, எருசலேமின் அலங்கம் கட்டிமுடிக்கப்பட்டபோது, சன்பல்லாத்தும் கேஷேமும் நெகேமியாவுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்து, ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டபோது, 'நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது' (நெகே. 6:3) என்பதுதானே நெகேமியாவின் பதிலாயிருந்தது. மேலும், தொபியாவும் சன்பல்லாத்தும் கூலிகொடுத்ததினால், 'நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள்' (நெகே. 6:10) என்று  செமாயா சொன்னபோது, 'என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை' (நெகே 6:11) என்பதுதானே நெகேமியாவின் பதிலாயிருந்தது. இத்தகைய உறுதியான அர்ப்பணிப்பு, இந்நாட்களில் வாழுகின்ற நமக்கும் எத்தனை அவசியமானது! சூழ்நிலைகளைப் பார்த்து சுவிசேஷத்தினை மூடிவிட அல்ல; மறாக, சூழ்நிலைகள் எதுவானாலும் சுவிசேஷத்திற்காக உயிர்விட அழைக்கப்பட்டவர்கள் நாம் என்ற நினைவு நம்மை விட்டு நீங்காதிருக்கட்டும். 

பிரியமானவர்களே! 'நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது' (ஏசா. 43:2) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளை, அநேக நேரங்களில், தனிப்பட்ட வாழ்க்கையுடன் மாத்திரமே நாம் பொருத்திப் பார்ப்பதினால், 'நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்' என்றும்,  'வடக்கே நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,  நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்' என்றும், 'கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்' என்றும் (ஏசா. 43:5-7,8) பரந்த பார்வையுடன் தரிசனமாகக் கொடுக்கப்பட்ட பரலோகத்திற்கடுத்த ஆத்துமத் தாகம் நம்மில் தணிந்துபோய்விடுகின்றதே! 

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17) என்று  எச்சரிக்கையாக கலாத்தியருக்கும் மற்றும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் (ரோமர் 8:5) என்று அறிவுறுத்துதலாக ரோமாபுரியாருக்கும் எழுதப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக்கூடாது. 'யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?' என்று உரைக்கிற ஆண்டவரின் சத்தத்தை நமது ஆவிக்குரிய செவிகள் கேட்டபின்னும், 'இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்' (ஏசா. 6:8) என்று அதற்குக் கீழ்ப்படிவதற்கு மாறாக, மறுத்து, மாம்சம் எதிர்த்து நிற்பதினால், அழைப்பும், அத்துடன் அழைப்பினை நோக்கியப் பயணமும் வாழ்க்கையில் அமைதியாக்கப்பட்டுவிடக்கூடாதே! யோனாவைப் போன்ற திசை மாறியப் பயணத்தினால், நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காப்பதற்குப் பதிலாக, அவர்களின் அழிவுக்குக் காரணமாகும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக்கூடாதே! 'ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்' (யோனா 1:14) என்று அழைக்கப்பட்டோரால் அலறும் நிலைக்கு ஜனங்கள் தள்ளப்பட்டுவிடக்கூடாதே! அதுமாத்திரமல்ல, நாம் சென்றிருக்கவேண்டிய நினிவேயும் அழிவைச் சந்தித்துவிடக்கூடாதே! அவசரமான கர்த்தரின் வேலையில், நாம் அசதியாய் இருந்துவிடாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக! (எரே. 48:10)

'அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது' என்றும் (யோனா 1:2), 'இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது' (யாத். 3:9) என்றும், யோனாவைப் போல அல்லது மோசேயைப் போல நம்மையும் தேவன் தனது பணிக்காத் தேடக்கூடுமே! அப்படியிருக்க, 'நான் எம்மாத்திரம்' (யாத். 3:11) என்றும், 'நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்?' (யாத். 3:13) என்றும், 'அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்' (யாத். 4:11) என்றும், 'நான் வாக்கு வல்லவன் அல்ல' (யாத். 4:10) என்றும், 'ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்' (யாத். 4:13) என்றும் மோசேயைப் போலவும் மற்றும் யோனாவைப் போலவும் விலகியோட விரும்பும் மனநிலையிலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக!  

மனுபுத்திரனே, உன்னை  இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன் (எசே. 3:17,18) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் எச்சரிக்கின்றாரே. அப்படியிருக்க, துன்மார்க்கத்தில் வாழும் ஜனங்களுக்கு தூய்மையின் வழி காட்ட, சுவிசேஷத்தை நாம் சுமந்துசெல்லவேண்டியது எத்தனை அவசியமானது; அவசரமானது. 'என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்' (ரோமர் 1:15) என்றும், 'சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்' (ரோமர் 15:19) என்றும், 'கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்' (ரோமர் 15:21) என்றும், 'சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ' (1 கொரி. 9:16) என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையையும் பற்றிக்கொள்ளட்டும். 

'நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது' (2 தீமோ. 4:6-8) என்றும், 'தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்' (பிலி. 1:23) என்றும், 'இந்த தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்' (2 கொரி. 5:8) என்றும், தனது இதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்தும் பவுல், 'அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்' (பிலி. 1:24) என்றும், 'நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்' (பிலி. 3:12) என்றும் எஞ்சியிருக்கும் தனது முடிவுறாத ஆசையினை முன்வைக்கின்றாரே! கிறிஸ்துவுக்கடுத்த மற்றும் ஆண்டவரின் இராஜ்யத்திற்கடுத்த காரியங்களில், தனது வாழ்க்கையின் பங்கு நிறைவேறிவிட்டது என்ற குறுகிய எண்ணத்துடன், தனது ஓட்டத்தை முடித்துக்கொள்ள பவுல் ஒருபோதும் விரும்பவில்லை; மாறாக, தனது வாழ்க்கை முடிவுறுகின்ற தருவாயிலும், 'ஆசையாய்த் தொடர்கிறேன்' என்ற வார்த்தைகளையே கூறுகின்றார். 

அநேக நேரங்களில், கிறிஸ்துவுக்கடுத்த காரியங்களில், நாம் செய்துமுடித்துவிட்டவைகளை நினைவுகூர்ந்து, அவைகளை வரிசையாகப் பட்டியலிட்டு, சாதித்துவிட்டோம் என்பதைப் போன்றதோர் சரித்திரத்தினை எழுதி, நமது வரலாற்றை அத்துடன் முடித்துவிட விரும்புகின்றோம். நமது வாழ்க்கைப் புத்தகத்தில் அதிகமதிகமாய் பக்கங்களை அவர் சேர்க்க விரும்பும் நேரத்தில், எலியாவைப்போல எடுத்துக்கொள்ளுதலை எதிர்பார்க்கிறோம். நாம் சேர்த்துவைத்திருக்கும் வாழ்க்கையின் பக்கங்களைப் பார்த்து, உலகம் ஒருவேளை நமது பயணத்தைப் பல விதங்களில் பாராட்டிப் பேசினாலும், பரலோகத்தின் பார்வையில், பாதி வழியில் நின்றுவிட்ட பேருந்தைப் போல நமது வாழ்க்கை காணப்பட்டுவிடக்கூடாதே! 

யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னபோது, 'போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்' (1 இராஜா. 19:2,4) என்று தனது பயணத்தைப் பாதியில் நிறுத்திவிட ஆயத்தமாகிவிட்டான் எலியா. போஜனம் கொடுத்து, 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்' (1 இராஜா. 19:7) என்று தைரியப்படுத்தினபோதிலும், ஒரு கெபிக்குள் போய்த் தங்கிவிட்டான். 'நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்' (1 இராஜா. 19:10) என்று சொன்ன அவனுக்கு, 'பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்' (1 இராஜா. 19:18) என்று கர்த்தர் சொன்னபோதிலும், தன்னுடைய பணியை முடித்துக்கொள்ளவேண்டும் என்றும், எத்தனை சீக்கிரமாக தன்னுடைய பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியுமோ அத்தனை சீக்கிரமாக தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும் என்றுமே அவன் விரும்பினான்; எனவே, முதல் இரண்டு பணிகளான, ஆசகேலைச் சீரியாவின் மேல் இராஜாவாகவும், யெகூவை இஸ்ரவேலின் மேல் இராஜாவாகவும் அபிஷேகம்பண்ணுவதற்கு முன், மூன்றாவது பணியாகச் சொல்லப்பட்டிருந்த எலிசாவின் மேல் தன் சால்வையைப் போட்டான் (1 இராஜா (1 இராஜா. 19:15,16.19). கர்த்தரின் பணியில் இருக்கும் நமக்கு, எலியாவைப் போன்ற இத்தகைய அவசரம் வந்துவிட்டால், அழைப்பின் பயணம் பாதியில் நின்றுபோய்விடுமே!   

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் (நீதி. 27:7) என்ற வசனத்திற்கொப்ப, தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனிடத்தில் நாம் வேண்டிக்கொண்ட மற்றும் தேவனிடத்திலிருந்து இவ்வுலகத்தில் நாம் பெற்றனுபவிக்கும் ஆசீர்வாதங்களில் மாத்திரமே திருப்தியடைந்து, தேன்கூடாகிய 'ஆத்தும அறுவடை' என்னும் அவரது பணியினைப் புறந்தள்ளிவிடக்கூடாதே! 'பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்' என்ற வார்த்தையின்படி, எத்தனை துன்பங்களை, பாடுகளை மற்றும் இன்னல்களை நாம் சகித்தாலும் மற்றும் சந்தித்தாலும்,  'கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்' (2 கொரி. 12:10) என்ற ஆத்தும அறுவடைக்கடுத்தத் தித்திப்பான வாழ்க்கையை நோக்கி நித்தமும் நமது பயணம் நகரட்டும். 2 கொரி. 11:23-27, அப். 5:41, ரோமர் 8:36-39, 2 கொரி. 1:6, கொலோ. 1:24 ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள ஆத்துமாக்களைத் தேடியலைந்த பவுல் மற்றும் அப்போஸ்தலரின் அனுபவங்கள், நம்முடைய வாழ்க்கைக்கும் பாடமாகட்டும். திருப்தியடையாதவைகளின் பட்டியலில் 'பாதாளம்' இடம்பெற்றிருக்க (நீதி. 30:15,16; ஆபகூக் 2:5), பரலோக இராஜ்யத்தில் ஆத்துமாக்களைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய நாம் திருப்தியாகிவிடுவது தகுமோ? 

தீரு பட்டணத்து சீஷர்கள், பவுலை நோக்கி, 'நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம்' (அப். 21:4) என்று சொன்னபோதிலும் மற்றும் செசரியாவில், அகபு தீர்க்கதரிசி, 'பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்' (அப். 21:11) என்று சொன்னதைக் கேட்ட ஜனங்கள் பவுலை வேண்டிக்கொண்டபோதிலும், 'நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்' (அப். 21:13) என்ற பவுலின் அர்ப்பணிப்பு மிக்க வார்த்தைகள், நம்முடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கட்டும்! 


வாழ்க்கையின் எல்லையிலும் 

வார்த்தையின் வில்லை ஏந்துவோம்

முன்னிருக்கும் பணிக்கு என்றும்

முற்றுப் புள்ளி வைக்காதிருப்போம் 


போதும் என்று எண்ணிவிட்டால்

போகும் தூரம் கண்ணில் தென்படாதே

வழிகள் இன்னும் தூரமிருந்தாலும்

விழிகளும் காண முற்படாதே


ஆசீர்வாதங்களில் திருப்தியாகிவிட்டால் 

ஆத்தும பாரம் அகன்றுபோய்விடுமே

பாடுகளைக் கண்டதும் பயந்துவிட்டால் 

பாதியில் பயணம் நின்றுபோய்விடுமே


திருப்தியான வாழ்க்கை தந்தவரின் 

தேன்கூட்டை நாம் மிதித்துவிடக்கூடாதே

நெருக்கங்களானாலும் கசப்புகளானாலும்   

நேசருக்காக அவை தித்திப்பானவைகளே

 



அன்பரின் அறுவடைப் பணியில்

சகோ. P. J. கிருபாகரன்


புதன், 15 மே, 2024

ஆசீர்வாதமா? வேதனையா?

 ஆசீர்வாதமா? வேதனையா? 

June 2024

 மண்ணினாலே படைக்கப்பட்டவர்களாயினும் நம்மை விண்ணுக்குரியவர்களாகவே நடக்கப் பழக்குவிக்கிறவரும் (2 கொரி. 5:1), இவ்வுலகத்தின் சிறையிருப்புகளில் சிக்கிக்கொள்ளாமல் அவர் சிறகுகளின் கீழே  தஞ்சம் புக நம்மைத் தெரிந்துகொண்டவரும் (சங். 91:4), நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன் (லேவி. 20:26) என்று நம்மை முத்திரித்தழைத்தவரும், 'அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல' (யோவான் 1:27) என்று யோவான் ஸ்நானகனைப் போல சொல்லத்தக்கவர்களாகிய நம்மை, சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாக (எபே 6:15) அவரது பணியில் முன்னேறச்செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். 

'எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு' (யோபு 23:14) என்ற யோபுவின் வார்த்தைகளின்படி, மேற்படிப்பிற்காகக் காத்திருக்கும் நமது பிள்ளைகளின் வாழ்க்கையில் தடையின்றி தேவ சித்தம் நிறைவேற கர்த்தர் உதவிசெய்வாராக!   

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, 'பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்' என்று தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்ட பலிபீடத்தின் கீழேயிருந்த ஆத்துமாக்கள் கேட்ட கேள்விக்குப் பதிலாக, 'தங்களைப் போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும்' என்று சொல்லப்பட்டதைப் போன்ற (வெளி 6:9-11) காலம் இது. ஒருபுறம் ஆத்தும அறுவடை பெருகுகிறது என்றாலும், மறுபுறம் பணித்தளங்களிலே விதைகளாகும் ஊழியர்களின் தொகையும் நிறைவாகிக்கொண்டேயிருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியமல்லவா! பலிபீடத்தினடியில் சேரும் பாக்கியம் ஒருவேளை நமக்குக் கிட்டாவிடினும், சம்பத்தைச் சேர்க்கும் நாளில், 'ஊழியஞ்செய்தவன்' என்று நாம் வித்தியாசமாவது காட்டப்படவேண்டுமே. (மல். 3:18)

எனவே, ஆத்துமாக்களாக அரிக்கட்டில் அங்கம் வகித்தால் மாத்திரம் போதும் என்ற மனநிலையோடு அல்ல, அறுவடையாளர்களின் தொகையை நிறைவாக்குவோரின் வரிசையில் வீரர்களாக முன்னேறுவோம்; கர்த்தரின் கண்களுக்கு முன் கதிர்களாக மாத்திரமே காட்சிக்கு நின்றுகொண்டிருப்பவர்களாக அல்ல, கோதுமை மணிகளாக விழுந்து பலனைக் கொடுக்கப் புறப்படுவோம்; அரண்மனை சுகமே போதும் என்று அடங்கிக்கிடப்பவர்களாக அல்ல; செத்தாலும் சாகிறேன் என்று ஆத்துமாக்களைக் காக்க அடியெடுத்துவைப்போம். இவைகளையே சிந்தையில் சுமந்தவர்களாக வருங்காலங்களில் ஆத்தும ஆதாயப் பணியில் முன்னேறிச் செல்ல கர்த்தர் துணைசெய்வாராக!  

பிரியமானவர்களே! ஆண்டவரின் அழைப்பினை ஏற்று, ஆத்தும ஆதாயப் பணியில் முன்னேறிச் செல்ல முனைந்து நிற்கும் நாம், நம்முடைய வாழ்க்கையை பயணத்திற்குப் பாரமானதாகவும், பாதகமானதாகவும் மற்றும் பாதை மாறக்கூடியதாகவும் ஒருபோதும் மாற்றிவிடக்கூடாது என்பதிலும் கவனமாயிருக்கவேண்டும். ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் குறைவுகள், தடைகள் மற்றும் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் போன்றவை, அநேக நேரங்களில் தவறான திசைகளிலும் மற்றும் தவறான பாதைகளிலும் நம்மை வழிநடத்திவிடவும் மற்றும் தவறான மனிதர்களுடன் நம்மை இணைத்துவிடவும், அவர்களுடன் உறவினை உருவாக்கவும், அவர்களோடு ஐக்கியம் கொள்ளும்படிச் செய்யவும் போதுமானவை. தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நாம் ஆசைப்படுவது ஒருபோதும் தவறல்ல; அது தன் விருப்பங்களை மனதில் சுமந்துகொண்டிருக்கும் ஒரு பிள்ளை, தந்தையினிடத்தில் சென்று கேட்பதைப் போன்ற ஒரு சுதந்திரமான உரிமை உணர்வே. என்றபோதிலும், நாம் எத்தனையாய் வேண்டினாலும், 'சகலத்தையும் அதினதின் காலத்திலே (in His time) நேர்த்தியாகச் செய்கின்ற தேவன்' (பிர. 3:11), நம்முடைய வாழ்க்கையிலும், 'அவருடைய வேளையிலேயே' தகப்பனாக அவர் நமக்குத் தர வேண்டுமென்று விரும்புகின்றவைகளைத் தருகின்றார் என்பதை அறிந்துகொள்வது அவசியம். எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; 'ஏற்ற வேளையிலே' (due time, proper time, right time) நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர் (சங். 145:15) என்றும், 'என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது' (யோவான் 2:4; 7:6) என்றும் வாசிக்கின்றோமே. எனவே, நம்முடைய தேவைகளிலும், தேவனுக்காகவே காத்திருக்கக் கற்றுக்கொள்ளுவோம். தேவைகளைக் குறித்த அறிவு மாத்திரமல்ல, அவைகளைத் தரும் தேவனைக் குறித்த அறிவும் நம்மை ஆட்கொள்ளுமென்றால், 'காத்திருக்குதல் நமக்கு கடினமாயிராது, நமது கால்களும் வழிதப்பிப் பயணிக்காது'

மேலும், 'நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை' (யாக்கோபு 1:17) என்பது மெய்தான்;; என்றபோதிலும், அவருடைய சித்தத்தின்படி கேட்டால் மாத்திரமே அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதையும் கூடவே நாம் அறிந்திருக்கவேண்டுமே (1யோவான் 5:14). ஆத்துமாவைக் குறித்து எவ்வளவேணும் எள்ளளவேணும் கவலைகொள்ளாமல், சரீரத்தின் காலம் இவ்வுலகத்தில் காலாவதியாகின்ற நேரத்திலும், ஆஸ்திகளின் மீது மாத்திரமே ஆசைகொண்டு, அவைகளையே வாழ்க்கையின் இலட்சியமாகவும் இலக்காகவும் மனதிற்கொண்டு, அவைகளால் மாத்திரமே தங்கள் வாழ்க்கையை நிறைக்க முற்படுவோரை, 'மதிகேடனே' (லூக். 12:20) என்றுதானே அவர் அழைக்கின்றார். இத்தகைய மதிகேட்டிற்குள் நமது மனம் நுழைந்துவிடாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக!  

அத்துடன், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் அவர் நமக்குள்ளே கிரியைசெய்கிறார் (எபே. 3:20) என்பதும் உண்மையே; என்றபோதிலும், அது நம்முடைய வேண்டுதலின் குறைபாட்டை அதாவது, அவர் கொடுக்கவிருந்ததைக் காட்டிலும் நாம் குறைவாக அவரிடத்தில் வேண்டிக்கொண்டதைத் தான் சுட்டிக் காட்டுகிறதே தவிர, நம்முடைய வாழ்க்கைக்கு மிஞ்சிய அல்லது மிகுதியான தேவைகளை நமக்கென்று மாத்திரமே கொடுத்து நம்மை நிறைத்து விடுவதைச் சுட்டிக் காட்டவில்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். 'அதிகம்' என்று நம்முடைய கரங்களில் அவர் கொடுப்பவைகளில், அவருக்கும் அத்துடன் பிறருக்கும் பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாத மனிதர்களே, சுயநலவாதிகள் என்ற சிறைக்குள் தங்களை அடைத்துக்கொள்ளுகிறார்கள். தங்களது ஆசீர்வாதங்களுக்குள் அந்நியர் அத்துமீறிவிடாதபடி அரண்களுக்குள் வாழ்க்கை நடத்துகின்றார்கள். இவர்கள், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்த (மத். 25:18) மனிதனுக்கு ஒப்பானவர்களே.பிரியமானவர்களே! ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணக் கொடுக்கப்பட்டவைகளையும், சரீரத்திற்காகச் சேர்த்துவைக்கும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாதே! 

ஆனால், 'ஆசீர்வாதங்கள் அளிக்கப்பட்டதற்கான காரணத்தை' அறிந்தவர்களோ, தேவன் விரும்புகின்ற வண்ணம் அவைகளை தேவனுக்காகத் திரும்பக் கொடுக்கவும், தேவனுடைய இராஜ்யத்திற்காகச் செலவழிக்கவும் மற்றும் மற்றவர்களுக்காகப் பகிர்ந்து அளிக்கவும் அறிந்திருப்பார்களே (லூக். 8:3; அப். 2:45; எபி. 10:34). 'நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்' (லூக். 16:9) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பெற்ற ஈசாக்கையே பலியாகக் கொடுக்க ஆயத்தமாயிருந்த ஆபிரகாமைப் போலவும் (ஆதி. 22:2), பெற்ற சாமுவேலை ஆலயத்திலே கொண்டுவந்து அர்ப்பணித்த அன்னாளைப் போலவும் (1 சாமு. 1:28) நம்மையும் தேவன் மாற்றுவாராக!    

'போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன்' (மாற். 10:20) என்று நியாயப்பிரமாணத்தின்படி தன்னை நீதிமானாகக் காண்பிக்க முயன்ற மனிதனிடத்தில், 'உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு' (மாற். 10:21) என்று 'கொடுக்கப்பட்டதற்கான காரணத்தை' இயேசு கிறிஸ்து சொன்னபோது, அதைக் கொடுமை என நினைத்த அவன் தடுமாறிவிட்டானே (மாற். 10:24); நீதிமான் என்று தன்னை நிரூபிக்க முயன்றவன்  நித்திய ஜீவனுக்கே தூரமாகிவிட்டானே! பிரியமானவர்களே! தேவன் தரும் ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, கூடவே, அவைகளுக்கான காணரங்களையும் காணும்படியாக நமது கண்கள் திறக்கப்படட்டும். ஆசீர்வாதங்களை எப்படியாவது அள்ளிக்கொள்ளவேண்டும் அடைந்துவிடவேண்டும் என்று ஆவல் கொள்ளுகின்ற ஜனம், அவைகளை அடைந்த பின், அதற்கான காரணங்களை அறிந்துகொள்ள விரும்பாததினாலேயே, ஆசீர்வதிக்கப்படும்வரை அவரோடு கூட இருந்துவிட்டு, ஆசீர்வதிக்கப்பட்டபின் இளைய குமாரனைப் போலப் பிரிந்து சென்றுவிடுகின்றனர். ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதில், ஆபிரகாம் மற்றும் சாராய் இவர்களுடைய குடும்ப வாழ்க்கையிலிருந்தும், சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்! 

'கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே' (ஆதி. 15:2) என்று ஆபிரகாம் ஆண்டவரிடத்தில் சொன்னபோது, 'இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்' (ஆதி. 15:4,5) என்றார். உடனே, 'அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதி. 15:6) என்று வாசிக்கின்றோம்;. 

என்றபோதிலும், அந்த விசுவாசத்தைத் தொடர்ந்து, 'இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே' என்று சொன்னபோதோ, 'கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்' (ஆதி. 15:8) என்ற  ஆபிரகாமின் வார்த்தைகள், அவனுக்குள் இருக்கும் சந்தேகத்தைச் சுமந்துவருகின்றதே. 'சந்ததியைத் தருவேன்' என்றபோது இருந்த விசுவாசம், 'சுதந்தரமாகத் தேசத்தைத் தருவேன்' என்றபோது காணப்படவில்லையே! இந்த சந்தேகத்தைச் சுமந்த ஆபிரகாமின் கேள்விக்குக் கிடைத்த வேதனையான விடை தான், 'உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்' (ஆதி. 15:18) என்பது. பிரியமானவர்களே! நம்முடைய ஆசீர்வாதத்திற்கடுத்த காரியங்களில் நமக்கு இருக்கும் உறுதியான விசுவாசமும் நம்பிக்கையும், ஆத்தும அறுவடைக்கடுத்த காரியங்களிலும் நமக்குக் காணப்படவேண்டுமே. நம்முடைய வாழ்க்கைக்கடுத்தவைகளில் இருக்கும் விசுவாசம், தேசத்தைச் சுதந்தரிப்போம் என்ற நிலைக்கு வளர தேவன் உதவிசெய்வாராக.    

இரண்டாவதாக, 'உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்' என்று கர்த்தர் ஆபிரகாமோடு பேசியிருந்தபோதிலும், 'அவன் கர்த்தரை விசுவாசித்தான்' என்று எழுதப்பட்டிருந்தபோதிலும், சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்று சொன்ன வார்த்தைகளுக்கு, 'தேவனிடத்தில் கேட்காமல் ஆபிராம் கீழ்ப்படிந்துவிட்டானே' (ஆதி. 16:2); இது அடுத்த வேதனையை ஆபிரகாமின் வாழ்க்கையில் ஆரம்பித்துவைத்தது. ஆகார் தான் கர்ப்பவதியானதினால், தன் நாச்சியாராகிய சாராயை அர்ப்பமாக எண்ணினபோது, சாராய் ஆபிரகாமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும் (ஆதி. 16:4,5) என்று சொல்லுகிறாள்; அதுமாத்திரமல்ல, வீட்டை விட்டே ஓடிப்போகுமளவிற்கு ஆகாரை கடினமாக நடத்துகிறாள் சாராய் (ஆதி. 16:6). இவை அனைத்தும், சாராயின் சத்தத்தைக் கேட்டதினால் வந்த விளைவுகள்தானே! அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலும், தேவனுடைய வார்த்தைகளைக் காட்டிலும், மனிதர்களுடைய வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெற்றுவிடும்போது, மேலோங்கி நின்றுவிடும்போது, நம்மை ஆள அவைகளுக்கு நாம் அனுமதி அளித்துவிடும்போது, தேவனுடைய திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் விரோதமாகவே அவைகள் நம்மைத் தூண்டிவிடுகின்றன, வழிநடத்திவிடுகின்றன; இவைகள் வேதனைகளின் வழியிலேயே நம்மைக் கொண்டுசேர்க்கும். கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங்கீதம் 127:1) என்ற வார்த்தை சாராயின் வாழ்க்கையில் எத்தனையாய் பொருந்திப்போனது. 

அவ்வாறே, ஆதாம், 'ஏவாளின் வார்த்தைக்குச் செவி கொடுத்து', பூசிக்கக் கூடாத மரத்தின் கனியைப் புசித்தபோது, 'நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றும், ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்' (ஆதி 3:16,17) என்றும் வேதனையை தங்கள் வாழ்க்கையில் வருவித்துக்கொண்டார்களே. 

மேலும், அனனியா மற்றும் சப்பீராள் தம்பதியினர், ஒருவர் சொல்ல ஒருவர் சம்மதித்து அல்லது ஒருவருக்கொருவர் செவிகொடுத்து, கர்த்தருக்கு விரோதமாக வஞ்சித்து வைத்ததினால் மரணமடைந்தார்களே. 'நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்?' என்று பேதுரு கேட்டபோது 'ஆம், இவ்வளவுக்குத்தான்' (அப். 5:8) என்ற  'கீழ்ப்படிதலுக்குள் கலந்த பொய்' அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிட்டதே. 'தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல' (மத். 10:37)  என்று இயேசு கிறிஸ்து சொல்லுவதின்  அர்த்தம், இந்தச் சூழலுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகின்றதது. 

பிரியமானவர்களே! நம்முடைய வீடு, நாம் மாத்திரம் அல்ல கர்த்தரும் இணைந்து கட்டத்தக்க பாத்திரமுள்ளதாகக் காணப்படவேண்டுமே. கர்த்தருக்குப் பிரியமில்லாத இடங்களில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்தால், அது நிச்சயம் தேவனுக்குத் தூரமாகவும் மற்றும் துரோகமாகவும் மாறிவிடுவது நிச்சயம். மனைவிகளே, 'கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல', உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் (எபே. 5:22) என்ற பவுலின் வார்த்தைகள், கணவனோ அல்லது மனைவியோ என்ன சொன்னாலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியுங்கள் என்பதைக் குறிக்கவில்லை; மாறாக, கீழ்படிதலில் புருஷனையும் மனைவியையும் இணைத்து நிற்கும் 'கர்த்தருக்குக் கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தையே' எடுத்துரைக்கின்றது. அதாவது, 'கர்த்தருக்குக் கீழ்ப்படிதல்' என்ற வட்டத்திற்குள்ளேயே கணவன் மனைவியின் கீழ்ப்படிதல் அடங்கியிருக்கின்றது' என்பதையே தெளிவுபடுத்துகின்றது; இதற்கு மிஞ்சியது வேதனையே! 

மூன்றாவதாக, தேவனுக்குக் காத்திராமல், நமது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாம் காட்டும் அவசரத்தினால், தேவன் விரும்பாத வழிகளில் பயணித்து பலன்களை அடைந்தாலும், அதன் முடிவில் வேதனையே ஒட்டியிருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. நான் பிள்ளைபெறாதபடிக்குக் 'கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்;' (ஆதி. 16:2) என்பதை அறிந்திருந்த சாராய், கர்த்தருக்குக் காத்திருக்கவில்லை; தன்னுடைய குறை நிவர்த்தியாகும்படியாக, தேவனிடத்திற்குச் சென்று முறையிடவில்லை; தனது குறைக்கானக் காரணங்களை தேவனிடத்திற்குச் சென்று அறிய முற்படவில்லை; மாறாக, குறுக்கு வழியில் தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, தனது தேவையை பூர்த்தியாக்கிக்கொள்ள தனது அடிமைப்பெண்ணாகிய ஆகாரை கையிலெடுத்ததினால், தன்னுடைய வாழ்க்கைக்கும் வருங்காலச் சந்ததிக்கும் தானே வேதனையை வருவித்துக்கொண்டாளே! 

தனது ஆசைப்படியும் மற்றும் தனது விருப்பப்படியும், தனது கணவனையே ஆகாரினிடத்தில் சேரும்படியாக சாராய் அனுமதித்தபோதிலும், அதனை விரும்பாத ஆண்டவர் அதனால் உண்டாகும் பலனைத் தடுக்கவில்லை; அதாவது, ஆகாரின் கர்ப்பத்தை அவர் அடைக்கவில்லை; என்றபோதிலும்,  சாராளின் செயலினால் உண்டான பலனைக் குறித்து, 'அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்' (ஆதி. 16:12) என்ற வேதனையான வார்த்தைகளைக் கூடுதலாகக் கூறுகின்றாரே. இது நமக்கு கற்பிப்பது என்ன? தவறான வழிகளில் விரும்பினவைகள் வாய்த்தாலும், அது வேதனைகளையே வாழ்க்கையில் சுமந்துவரும் என்பதைத்தானே! இராஜாவாகிய சவுல் அஞ்சனம் பார்க்கிறவளிடத்தில் விசாரிக்கும்படியாகச் சென்றதும், இஸ்ரவேலின் இராஜாவாகிய அகசியா பாகால்சேபூலினிடத்திலும் விசாரித்து அறிய முற்பட்டதும் இத்தகையத் தவற்றைத்தானே நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. தேவனிடத்திற்குச் செல்லும் தகுதியை இழந்திருந்ததினால்தானே இவர்களுக்கு இந்த நிலை.  

பிரியமானவர்களே! இன்றும், தேவனிடத்தில் செல்வதற்கானத் தகுதியை இழந்ததினாலேயே, அநேகர் வழிதவறிப் பயணித்து வேதனைகளைத் தங்கள் வாழ்க்கையில் கூட்டிக்கொள்ளுகின்றனர்.  தங்கள் வாழ்க்கையில் காணப்படும் குறைகளுக்கானக் காரணங்களைத் தேவனிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ள முற்படாமல், அக்கம் பக்கத்திலும், எட்டிய தூரத்திலும், கண் பார்வையின் எல்லைகளுக்குள்ளும், மனித பெலத்திற்குள் கிடைப்பவைகளாலும் தங்கள் தேவைகளையும் மற்றும் ஆசைகளையும் உடனடியாகத் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்; இத்தகைய வழிகளில் நாம் விலகிப்போகாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக. நம்மை திருப்திப்படுத்திக்கொள்ள தேவன் விரும்பாத வழிகளில் நாம் பயணிப்போமென்றால், நம்முடைய பயணத்தின் பலனை ஒருவேளை நாம் காணக் கூடும்;; ஆனாலும், அந்த பலனின் பின்னால் மறைந்திருக்கும் வேதனையை நிச்சயம் ஒரு நாள் உணர நேரிடும். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' (நீதி 10:22) என்று வாசிக்கின்றோமே, அத்தகையை ஆசீர்வாதங்களை அவரிடத்திலிருந்து மாத்திரமே பெற்று வாழ கர்த்தர் உதவிசெய்வாராக! 


தவறான முடிவுகள் தேவனுக்கு நம்மைத் தூரமாக்கும்

தேவவையற்ற மனிதருடனும் ஐக்கியத்தை உருவாக்கும்

விரும்பினவைகள் வாய்த்தாலும் வேதனைகள் கூடவரும்

வருங்கால வாழ்வினையும் வலிகளால் நிறைத்து நிற்கும்


மத்தியஸ்தர் ஒருவரே இதை மறந்துவிடலாகாது

மற்றவர் மூலமாக மதிலைத் தாண்ட இயலாது  

பிள்ளைகள் நாமானால் பிதாவின் கண்கள் தூங்காது

பதிலாய் வரும் பலன்கள் தரித்து எங்கும் நிற்காது


ஆசீர்வாதங்களுக்கு மட்டுமே ஆண்டவரென்றால்

ஆத்துமத் தாகம் நம்மில் அணைந்துபோகுமே

ஆசீர்வதிக்கப்பட்டதின் காரணம் கண்டால் 

ஆண்டவரின் இராஜ்யம் பலன் அடைந்திடுமே


அரிக்கட்டில் மாத்திரம் அங்கம் வகிக்கின்றோமா, அல்லது 

அறுவடையாளர்களாக முன்னேறுகின்றோமா 

கதிர்களாக மாத்திரமே காட்சியளிக்கின்றோமா, அல்லது 

கழுத்தையும் கொடுக்க துணிந்து நிற்கின்றோமா


தேகத்தைக் காட்டிலும் தேசத்தின் தேவை அதிகம்

தேவனின் அழைப்பு ஏற்று புறப்படுவோம் இன்று நாமும்

வருகையின் நாட்கள் விரைந்து எண்ணப்படுகிறதே

வரவேற்க வெறுங்கையாய் நாம் நிற்கக் கூடாதே 


அன்பரின் அறுவடைப் பணியில் 

அன்பு சகோ.  P. J. கிருபாகரன்