Skip to main content

நியாயமா? நீதியா?

நியாயமா? நீதியா?


தேவன் நீதிபரர், நம்மையும் நீதிமான்களாக மாற்றுகிறவர், அதற்கென்று சொந்தக் குமாரனென்றும் பாராமல் இயேசுவையே பலியாக சிலுவையில் கொடுத்தவர். எத்தனையாய் பிதாவை விட்டு வழி விலகிப் போனாலும், உலகத்தின் இறுதியில் நடைபெறவிருக்கும் நியாயத்தீர்ப்புக்கு முன்னர் நம்மை நீதிமானாக விரும்புகிறவர். தேவனது நியாயத்தீர்ப்பினை இன்னும் மனுக்குலம் சந்திக்கவில்லை; அதற்குள்ளாக அவரை அண்டிக்கொண்டு நீதிமானாகிவிடுவதற்கு நமக்குத் தருணம் தரப்பட்டிருக்கிறது. நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றோம் (ரோம 5:9). தேவனுக்கு விரோதமாக மனிதர் எத்தனையோ பாவங்களை இப்புவியில் செய்துகொண்டிருந்தாலும், பாவத்தின் மேல் பாவத்தினை அதிகரித்துக்கொண்டிருந்தாலும் நியாயம் தீர்த்து விரைவில் மனிதரை நித்திய ஆக்கினைக்குள் தள்ளிவிடவேண்டும் என்று ஆசைப்படாமல், தனது குமாரனாகிய இயேசுவின் வருகையைத் தள்ளிப்போட்டுக்கொண்டேயிருக்கின்றார். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேது 3:9). எனவே, அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:7) என்றார் இயேசு. எனவே தாவீது, அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார் (சங் 103:10) என்று தேவனைக் குறித்து எழுதுகின்றார். 

குற்றவாளியாக நம்மை கூண்டுக்குள் மாத்திரம் நிறுத்திவிட்டு, நியாயாதிபதியாக தேவன் சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டிருப்பவரல்ல. நமக்கு நியாயத்தீர்ப்பு நடக்கும் முன்னதாக, நம்முடைய குற்றங்களைக் கழுவி நியாயத்தீர்ப்பின் நாளன்று நீதிமானாக நம்மை நிறுத்த விரும்புகிற பிதா அவர். வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் (யூதா 1:24) என்று யூதா தேவ விருப்பத்தை தனது நிருபத்தில் எழுதுகின்றாரே. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ 2:4). உலகத்தின் இறுதி நாட்களில் தண்டனை வரும் முன்னதாக, நம்மை தம்பிள்ளையாக்கிக்கொள்வதுதான் தேவனுடைய திட்டம். இதனை மனதில் கொள்ளாமல், தேவனது அன்பினைப் புரிந்துகொள்ளாமல் தேவனை மறந்து தண்டனைக்கு நேராகவே, நியாயத்தீர்ப்புக்கு நேராகவே ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு பெருங்கூட்டம். 

சமாரிய ஸ்திரீ. இயேசு முதலில் இந்த உலகில் வந்தது நம்மை நியாயந்தீர்க்க அல்ல நீதிமானாக்க, இரண்டாம் முறையாக இந்த உலகத்திற்கு மீண்டும் வரப்போவது நீதிமானாக்க அல்ல நியாயந்தீர்க்க. எனவே, தேவனது நீதிமானாக்கும் திட்டத்தை அறிந்துகொள்வோம், புரிந்துகொள்வோம், அவரைத் தள்ளிவிடமால் நம்பக்கமாய் ஏற்றுக்கொண்டு, அவர் 'தம் பிள்ளை' என்று அழைக்கும் ஸ்தானத்தைப் பெறுவோம்.

பலர் இன்றைய நாட்களில் தேவன் எனக்கு நியாயம் செய்துவிட்டால் போதும் என்ற மனநிலையோடேயே நின்றுவிடுகின்றனர். எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை முறியத்துவிட்டால் போதும் என்ற மனதோடேயே நின்றுவிடுகின்றனர். எதிரிகளின் சூழ்ச்சிகளினின்று என்னை அவர் காப்பாற்றிவிட்டால் போதும் என்று திருப்தியடைந்துவிடுகின்றனர். நியாயம் என் பக்கம் தான், தேவன் அதனைச் சரியாகச் செய்தார் என்று சந்தோஷப்பட்டுக்கொள்கின்றனர். இதனை விளக்கும்படியாகவே இயேசு இரு உவமைகளைச் சொன்னார்.

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.(லூக் 18:2-5) தேவன் எனது வாழ்க்கையில் இந்த நியாயாதியைப்போல செயல்பட்டுவிட்டால் மாத்திரம் போதும், எனக்கு நீதி கிடைத்துவிட்டால் போதும் என்பதிலேயே திருப்தியடைந்துவிடுகின்ற மக்கள், தேவனை இந்த உலகத்தில் 'நியாயாதிபதியாக' மாத்திரமே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களை நோக்கியே, 'என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்?' (லூக் 12:14) என்றார் இயேசு. நான் உங்களை நியாயந்தீர்க்க இப்போது வரவில்லை, நீதிமானாக்கவே வந்திருக்கிறேன் என்று இயேசு சொல்வதின் கருத்தையோ ஜனங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் (மத் 9:13) என்று இயேசு ஆணித்தரமாகக் தான் வந்த நோக்கத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகின்றாரே. மனந்திரும்பும்படி நம்மை அழைக்கவந்த இயேசுவை நியாயஞ்செய்யும்படியாகவே வற்புறுத்திக்கொண்டிருந்தால், நம்மை நீதிமானாக்கவே அவர் வந்தார் என்ற மறுபக்கத்தை நாம் மறந்துவிடுவோம். அலுவலகத்தில், குடும்பத்தில், அண்டை வீட்டாரிடத்தில், சபையில், ஊரில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் தேவன் எனக்கு நீதி செய்தார் என்று சாட்சி சொல்லிக்கொண்டிருப்போம். இப்படிப்பட்டோராய் நாம் இருந்தால், நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் அவசியம். நியாயந்தீர்க்கப்பட்டவர்கள் பலர் ஒன்பது குஷ்டரோகிகள் சென்றுவிட்டதைப் போல சென்றுவிடுகின்றனர். தேவனிடத்தில் அவர்கள் எதிர்பார்த்ததும் அதுதானே, தாங்கள் நீதிமான்களாகவேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதானே அவர்கள் வந்தார்கள்; எனவே, நீதி கிடைத்ததும், நீதிமானாக தாங்கள் வாழவேண்டும் என்ற மனம் அவர்களுக்கு இல்லாது போயிற்று.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார் (லூக் 18:10-14).

பாவியாக இருந்தபோதிலும், தேவனுக்கு விரோதமானவைகளைச் செய்துவிட்டேனே என்று உள்ளம் அவனை உறுத்தியபோதிலும், மார்பிலே அடித்துக்கொண்டு: 'பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றபோது, ஆயக்காரன் நியாயந்தீர்க்கப்படவில்லை, நீதிமானாக்கப்பட்டான். அப்படியே, போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் (யோவா 8:4,5) என்று இயேசுவை வேதபாரகரும், பரிசேயரும் நெருக்கியபோதிலும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நியாயத்தீர்ப்பு செய்யப்படவேண்டும் என்று இயேசுவை வற்புறுத்தியபோதிலும், இயேசு அவளை நோக்கி: நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவா 8:11) என்று அவளை நீதிமானாக்கியல்லவோ அனுப்பினார். நமக்கு விரோதமாக எத்தனை காரியங்களைச் செய்த நபர்களானாலும், எத்தனை துரோகத்தைச் செய்த மனிதர்களானாலும் அவர்கள் நமது கண்களின் முன்பாகவே நியாயந்தீர்க்கப்படவேண்டும் என்ற விருப்பம் நமக்குள் ஓங்கி நிற்குமென்றால், நாம் நீதிமான்களல்ல. நம்மையும், நம்முடைய துரோகியையும் இருவரையும் நியாயந்தீர்க்க அல்ல இருவரையும் நீதிமானாக மாற்றுவதே இயேசுவின் அன்பு. அந்த அன்பின் குணத்தை மாற்ற நாம் எத்தணிக்காதிருப்போம்; அது நம்மால் கூடாது; ஏனெனில், அவர் மாறாதவர்.

உலக வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் நீதிமான்களாக நம்மை மாற்றிக்கொள்ளவே அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தார். பாவிகளான நமக்காக பாவத்தை ஏற்றுக்கொண்டவர் அவர். இயேசுவின் இதயத்தின் அன்பை அறிந்துகொள்ளுவோம். நீதிமான்கள் என்ற பட்டியலில் நாமும் இடம்பெறுவோம்.










 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி