Skip to main content

ஆஸ்திகளா? ஆத்துமாக்களா?


www.sinegithan.in


மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்பதுதான் உலகத்திலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன்பாக இயேசு கிறிஸ்து வைத்திருக்கும் பிரதானமானதோர் கேள்வி. தங்களது ஆத்துமாவுக்கு இருக்கும் பிரதானமான மதிப்பினை உணராமல், ஆஸ்திகள் மேலேயே கண்களைத் திருப்பினவர்களாக, தினம் தினம் இவ்வுலகத்தில் பயணத்தைத் தொடரும் மனிதர்கள் இன்றும் அநேகர்.  நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன் (நீதி 11:30) என்றே எழுதுகிறார் சாலொமோன்; அப்படியே பவுலும், நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன் (1கொரி 9:19) என்று தனது நிருபத்தில் எழுதுகின்றார். ஆனால், பலரோ, தங்களது ஆத்துமாக்களைக் குறித்தும் கவலைப்படாமல், பிறரது ஆத்துமாக்களைக் குறித்தும் கவலைப்படாமல், ஆஸ்திகள் இருந்தால் மட்டும் போதும்; அதுவே ஆனந்தம் என்ற நிலையில், ஆஸ்திகள் அனைத்தையும் சரீரத்திற்காகவே அதாவது மண்ணிற்காகவே செலவழித்துவிட்டு, மண்ணுக்குள் புதையுண்டுபோய்விடுகின்றனர். 

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி 2:7) என்று வாசிக்கின்றோமே. தங்களது சரீரமாகிய மண் விரும்பும் காரியங்களைச் செய்யவும், அவைகளுக்காகவே செலவழிக்கவும், தங்கள் ஆஸ்திகளை பயன்படுத்துகின்றனர். 'வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றும்,  நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன் என்றும், நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன் என்றும், நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டு பண்ணினேன். வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு மாடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது என்றும், வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை என்றும் சொன்னபோதிலும்,  எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது (பிர 2:1-11) என்றுதானே முடிவிலே சாலொமோன் எழுதுகின்றான். 

இதனை அறிந்ததினாலேயே தாவீதும் தனது சங்கீதத்தில், 'வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்' (சங் 39:6) என்று எழுதுகிறானே. மேலும், தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒரு போதும் முடியாது (சங் 49:6-9) என்றும் வாசிக்கின்றோமே. 

எனவே, வேதத்தின் அடிப்படையில் ஆஸ்திகள் மற்றும் ஆத்துமாக்கள் இவ்விரண்டையும் வேறுபிரித்துப் பார்த்து செயல்படவேண்டியது நம்முடைய கடமை. அப்படிச் செயல்பட்டால் மாத்திரமே, நமக்கும் அத்துடன் பரத்திற்கும் பலன் உண்டாகும். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது (2 பேதுரு 3:7) என்றே எழுதுகின்றார் பேதுரு. அதுமாத்திரமல்ல, யோவானும் கர்த்தர் தனக்கு வெளிப்படுத்தின விசேஷத்தில், 'வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின' (வெளி 6:14) என்றும், பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை (வெளி 20:11) என்றும், பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று (வெளி 21:1) என்றும் எழுதுகின்றாரே.  எனவேதானே, அப்போஸ்தலனாகிய பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற நிருபத்தில், 'அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்' (பிலி 3:11) என்று எழுதுகின்றார். வானமும், பூமியும் அழிவுக்குட்பட்டவைகளை என்பதை நமக்கு அறிவிக்கும்படியாகவே, 'வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத் 5:18) என்று இயேசு கிறிஸ்துவும் குறிப்பிடுகின்றார். 

வானமும், பூமியும் இப்படி அழிவுக்குள்ளானதாகவே அவரது பார்வையில் வைக்கப்பட்டிருக்க, அவருடைய பிள்ளைகளாகிய நாம், அவைகளை நிலையானவைகளைப் போல அனுபவிக்க நினைக்கக்கூடாதே. 'உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா' (லூக் 18:22) என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, அழிந்துபோகக்கூடிய ஐசுவரியத்தை அந்த தலைவனால் விடமுடியவில்லையே; அதினால், பரலோக ஆசீர்வாதத்தையே அவன் இழந்துவிட்டானே. 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்' (லூக் 16:9) என்றல்லவோ, நமது ஆ}ஸ்திகளை அவருக்கென பயன்படுத்துவதற்கான ஆலோசனையினைக் கொடுத்தார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது. ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன் (பிர 6:2,3) என்று எழுதுகின்றாரே சாலொமோன். 

நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து  வைக்கிறதற்கு இடமில்லையே; நான்  ஒன்று  செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு:  ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார் (லூக் 12:20) என்று வாசிக்கின்றோமே. அப்படியென்றால், நாம் சம்பாதித்தவைகளாயிருந்தாலும், கர்த்தரே நமக்குக் கொடுத்தவைகளாயிருந்தாலும், 'ஆஸ்திகளுக்கும் அதனை வைத்திருப்பவருடைய ஆத்துமாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை' என்பதை இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றதே.

ஆனால், இன்றைய உலகத்திலோ, ஆஸ்திகள் இருந்தால்தான் அவைகள் ஆசீர்வாதங்கள் என்றும், வேண்டிக்கொண்ட ஆஸ்திகள் கிடைத்துவிட்டால், அதனை ஆவிக்குரிய வாழ்க்கையோடுகூட தொடர்புபடுத்தி, ஆத்துமாவில் உண்டாகும் மகிழ்ச்சியினால் அதனை சாட்சியாகப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள் பெருகிவருகின்றனர். இதனால், வேதம் போதிக்கும் மறுபக்கத்தை அவர்களது மனம் மறந்தேபோகின்றது. 

அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்; (2கொரி 8:1-3) என்று பவுல் எழுதுகின்றாரே. 

பவுலும், சீலாவும் காவலிலே, கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டவர்களாய் இருந்தபோது, நடுராத்திரியிலே பதேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் (அப் 16:25) என்று வாசிக்கின்றோமே, மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோம 8:39) என்றல்லவோ வாசிக்கின்றோம். ஆஸ்திகள் இருப்பதினால் அல்ல, ஆண்டவர் உடன் இருப்பதினாலேயே இவர்களுடைய வாழ்க்கையில் ஆனந்தம் பொங்கிவழிகின்றது என்பது எத்தனை நிச்சயம். 

ஆதலால்,  நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய்  உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் (2கொரி 12:15) என்றுதானே தன்னுடைய உள்ளத்தின் விருப்பத்தைக் குறித்தும், வாஞ்சையைக் குறித்தும், கொரிந்து சபைக்கு எழுதும்போது பவுல் சுட்டிக்காட்டுகின்றார். 

ஆஸ்திகளும், ஐசுவரியங்களும் நம்முடைய ஆத்துமாக்களுக்கானதே என்ற நினைவோடு, ஆஸ்திகளைக் கொண்டு ஆத்துமாவை சந்தோஷப்படுத்த நினைத்தாலோ, அல்லது நம்முடைய ஆத்துமாவுக்காக அவைகளைச் சேர்த்துவைத்தாலோ, நம்மைப் பார்த்தும் தேவன் 'மதிகேடனே' என்றுதான் கர்த்தர் கூறுவார். 

'ஆஸ்திகள்' இவ்வுலகத்தில் வாழுகின்ற நாட்களில் நாம் அனுபவிப்பதற்கு மாத்திரமே; பரலோகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அல்ல. எனவே, யோபுவும், நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் (யோபு 1:21) என்று கூறுகின்றார். அவ்வாறே சாலொமோனும், தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை (பிர 5:15) என்று எழுதுகின்றாரே. 

ஞானஸ்நானம் பெறும்படியாக தன்னிடத்தில் வந்த ஜனங்களை நோக்கி, இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று சொன்னதோடு, 'அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும்' என்று கேட்ட ஜனங்களுக்குப் பிரதியுத்தரமாக, இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் (லூக் 3:11) என்று யோவான் பிரசங்கித்தானே. யோவானது இந்தப் போதகம், 'கொடுப்பதை, கனிகொடுக்கும் மரத்தோடு ஒப்பிடுகின்றதல்லவா'. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும் (மத் 7:19) என்ற சட்டத்திற்குள், இப்படிப்பட்ட மரங்களும் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டுவிடுமே. 'கனியைத் தேடினபோது, அதிலே ஒன்றையுங் காணவில்லை' (லூக். 13:6) என்ற நிலையில் நம்முடைய வாழ்க்கை காணப்பட்டுவிடக்கூடாதே. 

மரங்கள் தங்களுக்காக கனி கொடுப்பதில்லை, தங்களில் பழுக்கும் கனிகளை தாங்களே சாப்பிடுவதுமில்லை; அப்படியென்றால், அவை கனிகொடுப்பது எதற்காக? பிறருக்காகவும் மற்றும் தன்னைப் போன்ற மரங்கள் பெருகும்படியாகவும்தானே. நம்முடைய வாழ்க்கையிலும், கர்த்தர் நமக்குக் கொடுத்திருப்பவைகளை நாம் மாத்திரமே அனுபவிக்கவேண்டும் என்ற மனநிலையிலிருந்து மாறுபட்டு, பிறருக்காகவும், தேவனுடைய ராஜ்யத்தில் ஆத்துமாக்கள் பெருகும்படியாகவும் அவைகளைச் செலவழிப்போமென்றால், பரலோகத்திலே நம்முடைய பெலன் மிகுதியாயிருக்கும். 

உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.  திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.  உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக். 6:33-36) என்று இயேசு கிறிஸ்து நமக்கு போதித்திருக்கின்றாரே. 

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும் (2கொரி 9:7-9) என்று எழுதுகின்றார் பவுல். இந்த வசனத்தை 'ஊழியர்களுக்கும், ஊழியங்களுக்கும்' கொடுப்பதை மனதில்கொண்டே பலமுறை ஒருவேளை நாம் தியானித்திருக்கலாம். என்றாலும், 'ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்' என்று எழுதப்பட்டிருக்கும் வரிகளை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, இயேசு கிறிஸ்து, 'பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே' (லூக் 11:42) என்று போதிக்கின்றார். 

பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் (மத் 25:36). மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:40) என்று நம்மைக் குறித்தும் சொல்லப்படவேண்டுமே. உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும் (லூக் 11:41) என்பதும் இயேசு கிறிஸ்துவின் போதனையல்லவோ. 

நம்மிடத்தில் கொடுக்கப்படும் ஆஸ்திகள், நம்முடைய பிரயோஜனத்தையும், பயன்பாட்டினையும் தாண்டி, பரலோகம் மகிழும்படியாக, தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே வேதம் காட்டும் வழி. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும் (நீதி 11:26) என்று வாசிக்கின்றோமே. வாங்குகிறதற்கு பெலனில்லாத ஜனங்களுக்கும் உதாரத்துவமாய் கொடுக்கின்ற குணம் நம்மிடத்தில் உண்டாகவேண்டுமே. பெற்றுக்கொண்டவைகளை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்ற மனநிலையினாலேயே, புதியவைகளை அநேகர் இன்று இழந்து நிற்கிறார்கள். பிறருக்கு இறைக்காததினாலேயே, அவர்களுடைய கிணற்றிலே புதிய நீர் சுரக்கவில்லை. 'இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும்' (மத். 22:21) என்று இயேசு கிறிஸ்து சொன்னதைப் போல, தேவனுடையதை தேவனுக்கும், இராயனுடையதை இராயனுக்கும், ஏழைகளுக்கும் மற்றும் தரித்திரர்களுக்கும் உடையதை ஏழைகளுக்கும், தரித்திரர்களுக்கும் நாம் கொடுத்துவிடுவோமென்றால், வருகையின்போது சோதிக்கப்படும் நமது வரவு செலவு கணக்கு பரலோகம் மகிழும்படியாக இருக்கும். அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:10) என்று சொன்னாரே இயேசு கிறிஸ்து. பிதாவின் சித்தத்திற்கடுத்த இந்த செயல்திட்டத்திற்காகச் ஆஸ்தி  செலவழிக்கப்படட்டும் நமது ஆஸ்தி. 

அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள் (லூக் 8:3) என்று வாசிக்கின்றோமே. நம்முடைய ஆஸ்திகளும், ஆத்தும ஆதாயத்திற்காக செலவழிக்கப்படட்டும்.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி