Skip to main content

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும் 

விழுந்தவர்கள்

www.sinegithan.in


பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல விதங்களில் தொல்லைகளைக் கொடுத்து, தேவ மனிதர்களின் வேலைகளைத் தடுத்து, பரலோகத்தின் பணிகளுக்கு பாதிப்பை உண்டாக்க விரும்புபவன் சத்துரு. சத்துருக்கள் மூலமாக மாத்திரமல்ல, உடனிருக்கும் சகோதரர்கள் மூலமாகவும்கூட அதனைச் சாதிக்கவும் செய்து முடிக்கவும் துடிப்பவன் சத்துரு. பாழாய்க் கிடந்த எருசலேமைக் கட்டவேண்டும் என்ற விருப்பத்துடன் நெகேமியா எழுந்து சென்றபோது, அதை விரும்பாத சன்பல்லாத்தும் மற்றும் தொபியாவும் அவர்களுக்கு எதிர்த்து நின்றதைப் போல (நெகே. 2:10,19), இராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாகப் பறப்படுவோருக்கும், இடிந்து கிடக்கும் ஆலயங்களாகிய மனிதர்களை திரும்பக் கட்டும்படியாக எழுந்து செல்லும் ஊழியர்களுக்கும் இன்றும் எதிரியாகப் புறப்படுகிறவன் சத்துரு. எருசலேமைக் கட்டுகிறோம் என்ற நற்செய்தியினால் இஸ்ரவேல் மக்களின் மனம் நிறைந்திருக்கும்போது, 'நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்' (நெகே 4:3) என்று அவர்களை ஏளனம் செய்யும் 'துர்ச்செய்தியினால்' தூற்றிப் பேசுகிறார்கள் சத்துருக்கள். அவ்வாறே, கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படியாக அனுப்பப்பட்ட மனிதர்களுள் ஒருவனான காலேப், மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்' என்ற நற்செய்தியினை அறிவித்துக்கொண்டிருக்கும்போது, அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள் (எண்; 13:30-33) என்று வாசிக்கின்றோமே. 

என்றாலும், 'பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்' (1 யோவான் 4:4) என்ற யோவானின் வார்த்தைகளை அறிந்தவர்களாகிய நாம்,  தொடர்ந்து முன்னேறிச் சென்று 'அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதையும் மற்றும் ராஜ்யத்தைச் சுதந்தரிக்கத் தகுதியுடையவர்களான தேவனுடைய பிள்ளைகளை இப்பூமியில் பலுகிப் பெருகச் செய்வதையும் நிறுத்திக்கொள்ள முடியாதே.' எதிர்ப்போரையே பார்த்துக்கொண்டிருக்க அல்ல, மாறாக எஞ்சியிருக்கும் இராஜ்யத்தின் பணிகளையே நெஞ்சில் நிறுத்தினவர்களாக முன்னேறும்படியாக அழைக்கப்பட்டவர்களல்லவா நாம். 'கிறிஸ்துவே அஸ்திபாரம்' (1 கொரி. 3:11); 'பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்பதே நமக்கிருக்கும் பெலன். ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக அப்போஸ்தலர்கள் நிறுத்தப்பட்டபோது, பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னபோது, பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது (அப். 5:28,29) என்று சொன்னார்களே; இதுதானே அப்போஸ்தலர்களிடமிருந்து நாம் அறிந்துகொண்ட பாடம். உப்பரிக்கையை உடைக்க அல்ல, அஸ்திபாரத்தையே அசைக்க சத்துரு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும், வல்லவரோடிருந்தால் நாம் வெல்வது எளிதானதே.

வீரர்களிடம், வெற்றியையும் மற்றும் வளர்ச்சியையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உலகத்தில் காணப்பட்டாலும், வீரர்களிடம் வீழ்ச்சியையும் மற்றும் தோல்வியையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் மற்றும் ஒரு கூட்டமும் இன்றும் புதர்களுக்குப் பின்னால் உலகத்தில் மறைந்து காணப்படத்தான் செய்கிறது. ஆவிக்குரியவர்களைப் போல அவர்கள் பேசினாலும், ஆத்துமாவுக்கு இதமான வார்த்தைகளை அவ்வப்போது அவர்களது உதடுகள் உதிர்ப்பது போலத் தோன்றினாலும், அவர்களது உள்ளமோ அருகிலிருப்போருக்கு 'ஆழமான குழியினையே' தோண்டுவதிலேயே ஆர்வமாயிருக்கும். இதனை அறியாமலும் மற்றும் அவர்களோடு ஒட்டியே நின்றுகொண்டிருக்கும் ஆபத்துகளை உணராமலும் அத்தகைய மனிதர்களோடு உறவாடிக்கொண்டிருக்கும் மனிதர்களும், அவர்களால் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் காயங்களை உண்டாக்கிக்கொண்ட மனிதர்களும் இன்று ஆவிக்குரிய உலகில் ஏராளம். அத்தகையோரின் உறவுகள், தொடர்பு என்று உலகப்பிரகாரமான வாழ்க்கையில் தொடங்கினாலும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து, இறுதியில் நெடுநாள் விளைந்த நெற்கதிராக, அறுவடைக்குத் தயாராக நிற்கும் நமது ஆத்துமாவை ஆண்டவரிடமிருந்து தூரப்படுத்திவிடுவதுடன்,  நமது முழு ஆவிக்குரிய வாழ்க்கையையும் அடையாளமின்றி அக்கினியால் கொழுத்திவிடவும்கூடும். இத்தகைய மனிதர்களுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். கோலியாத்தை வீழ்த்தியவன் என்று அறிந்திருந்தும், வீரன் என்று தெரிந்திருந்தும், தனக்குப் பிரயோஜனமானவன் என்று உணர்ந்திருந்தும், தாவீதை வீழ்த்தவே வகைதேடிக்கொண்டிருந்தான் ராஜாவாகிய சவுல். 'ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள்' என்று சொல்லியனுப்பினது, மீண்டும் தாவீதின் வீரத்தை பெலிஸ்தியர்களிடத்தில் நிரூபிக்க அல்ல; மாறாக, பெலிஸ்தியனாகிய கோலியாத்தை வீழ்த்தியவனை பெலிஸ்தியர்களிடமே விழவைக்கவே. தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது' (1சாமு 18:25) என்றல்லவா சவுலின் சிந்தையைக் குறித்து வேதம் சித்தரிக்கின்றது. 

'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' (1 சாமு 18:7) என்று ஸ்திரீகள் பாடும்போதே ராஜாவாகிய சவுலின் இதயத்தில் பகை துளிர்விட்டுவிட்டதே; ஆனால், 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் (யோவா 14:12) என்ற இயேசுவின் குணத்திற்கு சவுலின் மனம் எத்தனை விரோதமானது? சவுலைப்போன்ற குணமுள்ள மனிதர்கள் வீரர்களிடம் வீழ்ச்சியையே தேடுவார்கள் என்பது நிச்சயம். 

மேலும், யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், கர்த்தருடைய வார்த்தையை அறிவித்த தேவனுடைய மனுஷனை, கிழவனான தீர்க்கதரிசி சிங்கத்திற்கு இரையாக்கிவிட்டதையும் (1 இராஜா. 13:1-3,24) வேதத்தில் வாசிக்கின்றோமே. அதுபோலவே, 'கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ' (எண்; 12:2) என்ற எண்ணம், உடனிருந்த ஜனங்களில் ஒரு கூட்டத்தாரை தலைவனாகிய மோசேக்கு விரோதமாக எழும்பச் செய்துவிட்டதே. என்றாலும், கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரி 2:14) என்ற பவுலின் வார்த்தைகளே, சத்துரு நமக்கெதிராய்த் தொடுக்கும் ஒவ்வொரு போருக்கும் பதிலாகட்டும். 

நற்செய்தியை அறிவிக்கப் புறப்படுவோரின் வாழ்க்கை;கையில் துர்ச்செய்தியை நுழைக்க சத்துரு எத்தனையாய் எத்தனித்தாலும், தேவனோ துர்ச்செய்தியை நற்செய்தியாக மாற்றுகிறவர் என்பதை நாம் மறந்துவிடலாகாது. தனியொரு மனிதனாக யோசேப்பு எகிப்து தேசத்திற்குக் கொண்டுபோகப்பட்டான் (ஆதி. 39:1); என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான் யோசேப்பு (ஆதி 41:51) என்றே எகிப்திலிருந்த யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம்; ஆனால், தேவனோ, அவன் இருக்கும் இடத்திற்கு தகப்பனையும் மற்றும் தகப்பனுடைய குடும்பத்தையும் அழைத்துக்கொண்டுவந்தார். அதுவரை, பஞ்ச காலத்தில் எகிப்தின் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்துகொண்டிருந்த யோசேப்பு, எகிப்தை காப்பாற்ற பார்வோனுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்த யோசேப்பு, தன் சகோதரர்களைக் கண்டதும், 'என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் என்றும், பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்' என்று சொல்லுகின்றான் (ஆதி 45:5,7). அது மாத்திரமல்ல, நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம் (ஆதி. 45:9,10) என்று தன் சகோதரர்களிடத்தில் சொல்லியனுப்புகின்றான். யோசேப்பின் வாழ்க்கையில் தகப்பனுடைய வீட்டை விட்டுப் பிரிந்து வந்த துக்கமான செய்தி, சந்தோஷமான செய்தியாக மாறியது. 

அநேக நேரங்களில் பிற மனிதர்களால் நாம் தள்ளப்படும்போது,  ஒதுக்கப்படும்போது, யோசேப்பைப் போல தகப்பன் குடும்பத்தையும் மற்றும் தகப்பன் குடும்பத்தில்  உண்டான துன்பங்களையும் மறந்துவிடவும், அவர்களற்ற வாழ்க்கையினை வாழவுமே விரும்புகின்றோம். நாம் எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும், அவர்களைக் குறித்த நினைவற்றவர்களாகவும் உணர்வற்றவர்களாகவுமே மாறிவிடுகின்றோம். ஆனால், தேவனது விருப்பமோ அதுவல்ல; பகையை அல்ல ஒருவரை ஒருவர் சந்திக்கும் பாலத்தையே உருவாக்க விரும்புகின்றார் அவர். ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி 16:7) என்பதுதானே வேதம் அவரைக் குறித்துக் காட்டும் வெளிச்சம்.  யோசேப்பின் வாழ்க்கையில் துக்கமான செய்தி, சந்தோஷமான செய்தியாக மாற்றப்பட்டதுபோல, நம்முடைய வாழ்க்கையிலும் மாற வழிவிடுவோம். பாவத்தினால், பிதாவை விட்டுப் பிரிந்து கிடந்த மனுக்குலத்தை மீட்பதற்காக, பாலமாக தனது சொந்த குமாரனையே அனுப்பினாரே. இன்றும் அவரது நாமத்தின் மூலமாகத்தானே பிதாவை நாம் 'அப்பா பிதாவே' என்று அழைக்கிறோம். 'என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்' (மத். 27:46) என்று கதறும் நிலைக்கு சிலுவையில் அவர் தள்ளப்பட்டாலும், 'அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்' (ஏசா. 53:11) என்றுதானே அந்த பாடுகளின் விளைவாக வரும் சந்தோஷத்தின் செய்தியை ஏசாயா தீர்க்கதரியின் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். 

பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையும், பாடுகளை நினைத்து தகப்பனுடைய குடும்பத்தை முற்றிலும் மறந்துவிட நினைத்த யோசேப்பைப் போல அல்ல, பாடுகளின் மத்தியிலும், பிதாவோடு இணைக்கும் பாலமாக மாறிய இயேசு கிறிஸ்துவைப் போல மாற கர்த்தர் உதவி செய்வாராக. பாடுகளை நினைத்து, பயணத்தை நிறுத்திவிடாமல், பாலமாக செயல்பட்டு, அறியப்படாத மக்களை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே தேடிச் சென்று அவரை அறிவிப்பதினால் மாத்திரமே இந்த சந்தோஷத்தின் செய்தியை நமது வாழ்க்கையிலும் பெற்றனுபவிப்பது சாத்தியமாகும். அத்துடன், 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' (யோவா 16:20) என்று இயேசு கிறிஸ்து சீஷர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தையும் நமது வாழ்க்கையில் நிறைவேறும். 

என்றாலும், இத்தகைய சந்தோஷத்தின் செய்தியை துக்கமான செய்தியாக மாற்ற சத்துரு பல வழிகளில் முயற்சிப்பதையும், அதற்காக அவன் செய்யும் சூழ்ச்சிகளையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். யோசேப்பு எகிப்திலே உயர்த்தப்பட்டிருந்த நாட்களில், யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள் (ஆதி.  45:16) என்றே யோசேப்பின் குடும்பம் எகிப்திற்குச் சென்றபோது அங்கு கிடைத்த வரவேற்பைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். என்றாலும், யோசேப்பின் மரணத்திற்குப் பின் அந்த சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கவும் மறையவும் தொடங்கியது; யோசேப்பை அறியாத வேறொரு ராஜன் எகிப்தில் தோன்றினபோதோ, அந்த சந்தோஷம் முடிவுக்கு வந்தது. 

இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது (யாத். 1:7) என்ற செய்தியை, எகிப்திலே தோன்றிய யோசேப்பை அறியாத புதிய ராஜன் அறிந்தபோது, 'அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும்' என்றான். (யாத். 1:10) 

சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுள்ள தேசங்கள், மக்கள் கூட்டங்கள் மற்றும் பகுதிகள் எவை என்றும், சுவிசேஷம் அறிவிக்கப்படாத தேசங்கள், மக்கள் கூட்டங்கள் மற்றும் பகுதிகள் எவை எவை என்றும் நாம் அறிந்துகொள்ள முயற்சிக்கும் அதே நேரத்தில், சுவிசேஷம் பெருகுவதையும், இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக அவரை ஏற்றுக்கொண்டு பிதாவின் பிள்ளைகளானவர்களையும் நம்மைத் தொடர்ந்து சத்துருவும் தொகையிட்டுக்கொண்டிருப்பதோடு, தனது அறிவிலும் ஏற்றிக்கொண்டேதானிருக்கிறான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. தன்னைப் பின்பற்றுவோரைக் காட்டிலும், தனது ஆளுகைக்கு உட்பட்டிருப்போரைக் காட்டிலும், ஆண்டவரை அறிந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பிசாசு ஆத்திரம் கொண்டு அடக்க முற்படுகின்றான்; அது மாத்திரமல்ல, ஆண்டவரைப் பின்பற்றும் பிள்ளைகளை அழித்துவிடும்படியாக, பலவிதமான சூத்திரங்களையும் வகுத்து செயல்படவும்; தொடங்குகிறான். என்றாலும், இவைகள் அனைத்தும் 'உங்களிலிருக்கிறவர் பெரியவர்' (1யோவா. 4:4); என்பதை அறியாத அவனையே வீழ்ச்சிக்கு நேராக வழிநடத்தும், தேவ ஜனத்தை அல்ல என்பது நிச்சயம். 

'நம்மிலும் ஏராளமானவர்கள்' என்ற கணிப்பும் கணக்கெடுப்பும், இஸ்ரவேல் ஜனங்களை அழித்துவிடவேண்டும் என்று எகிப்தின் புதிய ராஜனை தூண்டியது. 'சத்துருவின் தொகையிடுதலுக்குப் பின்னால், தேவ ஜனத்தின் அழிவு திட்டமிடப்பட்டிருக்கின்றது' என்பது நாம்; அறிந்துகொள்ளவேண்டிய செய்தி. இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட சட்டங்களை தேசத்தில் உண்டாக்கி, தேவ ஜனங்களைத் தேடத் தொடங்குகின்றான் சத்துரு என்பதில் சந்தேகமில்லை. 'ஏராளமானவர்கள்' என்பதை அறிந்துகொண்டதும், எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி: நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும்' என்றான் (யாத் 1:15,16). 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாட்களிலும், சத்துரு இந்த காரியத்தை திட்டமிட்டுச் செய்ததை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றதே. இயேசு கிறிஸ்து மரியாளின் கர்ப்பத்தில் இருந்தபோது, உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தபோது (லூக். 2:1), யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போகவேண்டியதாயிற்று (லூக். 2:4,5). அதனைத் தொடர்ந்து, ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினபோதிலும் (மத் 2:7,8), அதற்குப் பின், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்;  ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்று சொல்லுகின்றானே (மத் 2:13). இந்த வசனங்கள் நமக்குச் சொல்லும் செய்தி என்ன? கருவிலிருக்கும் இயேசு கிறிஸ்துவை பிறந்ததும் கொலை செய்யவேண்டும் என்ற திட்டத்துடன் சத்துரு கொண்டுவந்ததே குடிமதிப்பு என்பதுதானே. எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை (லூக் 2:10), துக்கமான செய்தியாக மாற்ற சத்துரு எத்தனையாக முயற்சித்தான் என்பதைத்தானே இது வெளிக்காட்டுகின்றது. 

ஒருபுறம் நற்செய்தியாக இயேசு கிறிஸ்து பிறந்திருக்க, 'பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்' (லூக் 2:10,11) என்ற செய்தி அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, மறுபுறத்திலோ ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான் (மத் 2:16) என்று வாசிக்கின்றோமே. ஒருபுறம் ஆனந்தத்தின் சத்தம், மறுபுறமோ அழுகையின் குரல் என, நற்செய்தி வரும் நாட்களில், துர்ச்செய்தியை உண்டாக்க சத்துரு எத்தனையாய் முயற்சிக்கிறான் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகின்றதல்லவா. இது குடிமதிப்பினால் நடைபெற்ற கொலைகள் என்பதை நாம் மறுத்துவிடக்கூடுமோ?

அதுமாத்திரமல்ல, 'இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார்' என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டபோது (2 சாமு. 24:1), சேனாதிபதியாகிய யோவாபின் வார்த்தைகளையும் கேளாமல், ராஜா என்ற ஸ்தானத்தில் தாவீது ஆணையிட்டபோது, அது ஜனங்களிடையே அழிவைத்தானே கொண்டுவந்தது. நான் இப்படிச் செய்ததினால் பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் (2 சாமு 24:10) என்று தாவீதை புலம்பவும் செய்ததே. தாவீது செய்த அந்த பாவத்தினிமித்தம், கர்த்தர் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்களே. (2 சாமு 24:15)

  மேலும், எகிப்தின் புதிய ராஜன் சொன்னதைப் போல, 'பலத்தவர்கள்' என்று மற்றவர்கள் நம்மை உயர்த்திப் பேசும்போதும், ஒப்பிட்டுப் பேசும்போதும்கூட நாம் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். அவர்களது ஒப்பிடுதலுக்குப் பின்னால், சத்துரு அழிவினை ஆயத்தம்பண்ணிவைத்திருக்கக்கூடும்.  'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' என்று முறைமுறையாக ஸ்திரீகள் பாடினபோது, அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான் (1 சாமு 18:7-9) என்றும், அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான் (1சாமு 18:11) என்றும் நாம் வாசிக்கின்றோமே. 

பிரியமானவர்களே! நற்செய்தியை அறிவிப்பதினால் கிடைக்கும் சந்தோஷத்தில் மகிழுபவர்களாக மாத்திரமல்ல, நற்செய்தியை அறிவிக்கும் நம்மை வீழ்த்தும்படியாக சத்துரு எடுக்கும் முயற்சிகளைத் தகர்த்தொழிக்கும் தேவனோடு இணைந்தவர்களாகவே தொடர்ந்து முன்னேற செல்ல நம்மை அர்ப்பணிப்போம். கிருபை உடனிருப்பதாக! 


வளர்ச்சியை விரும்பும் மனிதர் ஊடே 

வீழ்ச்சியை விரும்பும் மனிதர் உண்டு

வெற்றியைப் பெறும் மனிதர்கள் வாழ்விலும்

தோல்வியைத் தேடும் மனிதர்கள் உண்டு


சத்தியத்தின் சந்ததி இத்தரையில் பெருகினால்

நித்தியத்திற்கு விருப்பம் சத்துருவுக்கோ விரோதம் 

இராஜ்யத்தின் சுவிசேஷம் ஊரெங்கும் ஊடுருவினால்

இத்தரைக்கு மகிழ்ச்சி சத்துருவுக்கோ இகழ்ச்சி


தலைமுறையை அழிக்கும் சத்துருவின் தந்திரம்

தரிசனம் உடையோரே அதை உடைக்கும் எந்திரம்

இடைமறிக்கும் எதற்கும் விடையுண்டு அவரிடம்

தொடரட்டும் நம் பயணம் வெற்றியாய் முடியட்டும்


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள