Skip to main content

ஆயுதமாகும் ஆத்துமா

 

ஆயுதமாகும் ஆத்துமா



பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ. கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.(1சாமு 17:37)


தற்காலத்தில் நாம் சந்திக்கும் வேதனைகளும், சோதனைகளும்,  வியாதிகளும், வருத்தங்களும், வருங்காலத்தில் நம்மை வீரர்களாக நிறுத்தவே என்ற உறுதியான சத்தியம் உள்ளத்தில் உறைந்திருந்தால்; சோதனைகளின் மத்தியிலும் மண்ணான சரீரத்திலிருக்கும் நமது ஆத்துமாவை பொன்னாக மாற்றி, போருக்கு ஆயத்தமான ஆயுதமாக அதனை வனைந்துவிட ஒப்புக்கொடுப்போம். போருக்கு தேவன் நம்மை உருவாக்கும் விதத்தை பலர் உணர்ந்து அறிந்துகொள்ளாததினாலேயே, நிகழ்காலத்தில் சந்திக்கும் எல்லாவற்றையும் தங்களது வாழ்க்கைக்கு எதிரானதாகவே பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு ஆயுதத்தை உருவாக்க இன்னொரு ஆயுதம் தேவையல்லவா! ஒரு கோடரியை உண்டாக்க இரும்பையே உருக்கும் அக்கினியும், கோடரியாக இரும்பினை அடித்து உருமாற்றும்படியான சம்மட்டியும் தேவையானதல்லவோ! அப்படியிருக்க, உருமாற்றப்படுவதற்கு ஏதுவாக தன்னை இளகப்பண்ணும் அக்கினியையும், அடித்து உருமாற்றுவதற்கு ஏதுவான சம்மட்டியையும் இரும்பு வெறுக்குமென்றால், அது கோடரியாக மாறுவது எப்படி? 

ஆயுதமாக  நம்மை ஆயத்தப்படுத்தும் அத்தனையையும் சத்துரு நம்மை விட்டு தூரப்படுத்தவே விரும்புகின்றான். எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது (1சாமு 13:19-20) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே. நம்மை கூர்மையாக்கும்படியாக, கொல்லர்களைப் போல தேவன் வைத்திருக்கின்ற மனிதர்களை, சத்துரு கொள்ளை கொண்டுபோய்விடக்கூடும். தேவ மனிதர்களைக் கொண்டு மாத்திரமல்ல, எதிரிகளைக் கொண்டும் நம்மை கர்த்தர் கூர்மையாக்கக்கூடுமே. 

கோலியாத்தை எதிர்கொள்ள ஆயத்தமாகிய தாவீது சவுலைப் பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான் (1சாமு 17:34-36)

என்ற வார்த்தை வீரனாக வனத்தில் அவன் வனையப்பட்டதையே வெளிப்படுத்துகின்றது. இந்த நாட்களில் நாம் சந்திக்கும் வியாதிகளும், வரும் நாட்களின் பெரும் போருக்கு நம்மை ஆயத்தப்படுத்தவே என்பது நிச்சயம். 

வலிகளை உண்டாக்கும் மனிதர்கள் நமது வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் குணங்கள் என்ற ஆயுதம் கூர்மையாக்கப்படாமல் போய்விடக்கூடும். தேவன் அனுமதித்திருக்கும் மனிதர்களைக்கூட அருவருத்து வெறுத்ததினாலேயே, அநேகருடைய வாழ்க்கை என்னும் வாள் இன்றும் இன்னும் வெட்டுமளவிற்குக் கூர்மையாகாமல் மழுங்கலாகவே காணப்படுகின்றது. இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, பொலைந்துபோ. சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல்வீட்டாரின் இரத்தப் பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்று சீமேயி தாவீதை தூஷித்ததைக் கேட்டதும், செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்?

நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்று சொன்னபோது, தாவீது செருயாவின் குமாரனை நோக்கி, 'செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் 

தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் (2சாமு 16:7-10)

என்றல்லவா பதிலளித்தான். தன்மேல் சொல்லப்படும் தூஷணமான வார்த்தைகளைச் சகித்துக்கொள்ளும் அளவிற்கு தாவீதின் ஆத்துமா சத்துவம் பெற்றிருந்ததே. இத்தகைய சத்துவம் ஆண்டவருக்கும் தாவீதுக்கும் இடையிலான உறவினால் உண்டானது அல்லவா. 

மேலும், தன்மேல் சொல்லப்படும் தூஷணமான வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள சக்தி பெற்றிருந்த தாவீதின் ஆத்துமாவினால், கோலியாத் ஜீவனுள்ள தேவனை நிந்தித்ததையோ பொறுத்துக்கொள்ள முடியவில்லையே. ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம் (1சாமு 17:26) என்று எதிர்த்து சென்றானே; யுத்தத்திலும் ஜெயத்தைப் பெற்றானே. நம்முடைய ஆத்துமாவும் இத்தகைய ஆயுதமாகட்டும். 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி