Skip to main content

இடையில் வரும் இறைவன் (தானி 4:27)

 இடையில் வரும் இறைவன்



நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.(தானி 4:27)


மனம்போன போக்கில், இவ்வுலகத்தின் வழிகளிலே மனிதர்கள் போய்க்கொண்டிருப்பதை, தனது விழிகளினால் பார்த்துக்கொண்டேயிருப்பதுடன், அவர்களைத் தடுக்கும்படியாகவும், தப்புவிக்கும்படியாகவும் பல்வேறு வழிகளில் வழியில் வந்து மறித்து நிற்பவர் நம் தேவன். என்றபோதிலும், இடையில் வரும் இறைவனை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், மறித்து நிற்கும் அவரையும் தாண்டிச் சென்று மரணத்தில் மாட்டிக்கொள்ளும் மக்கள் கூட்டம் மிகுதி.  

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சகல சவுக்கியங்களோடு அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தான் (தானி. 4:4). தனது ஆட்சிக்குட்பட்ட பாபிலோனைக் குறித்த பெருமை அவனது உள்ளத்தை ஆக்கிரமித்திருந்தது. பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் (1 பேதுரு 5:5) என்ற எதிர்ப்பைச் சம்பாதித்தவனாக, ஆண்டவரையே தனக்கு எதிரியாக மாற்றியிருந்தான் நேபுகாத்நேச்சார். அவனுடைய நிலையைக் குறித்து, அவனிடத்திலேயே சொப்பனத்தில் ஆண்டவர் காட்டியபோதிலும், அது அவனுக்கே விளங்கவில்லை. இன்றைய நாட்களிலும், நேபுகாத்நேச்சாரைப் போன்ற ஜனங்கள் உண்டு. தங்களுக்கென ஆண்டவர் காட்டும் காரியங்களை தங்களாலேயே புரிந்துகொள்ள இயலாத மக்கள் ஒருபுறம் இருக்க, எல்லா வசனங்களையும், யாருக்கோ பிரசங்கிக்கவேண்டியவைகள் என்ற கோணத்தோடு பார்ப்பதினால், தன்னுடைய வாழ்க்கையோடு பேசும் வசனங்களையும்கூட தவறவிட்டுவிடுகிற மக்கள் ஆவிக்குரிய உலகத்தில் உண்டு.  

மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டான் நேபுகாத்நேச்சார். அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினாலே போஷிக்கப்பட்டது (தானி 4:12) என்றபோதிலும், விருட்சத்தை வெட்டும்படியாக ஆணை பிறந்தது. அதுமாத்திரமல்ல, அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது (தானி 4:16) என்ற ஆணையும் கூடவே பிறந்தது. இவை அனைத்தும், தன்னுடைய நிலையையே சுட்டிக்காட்டுகின்றது என்பதை நேபுகாத்நேச்சார் அறிந்துகொள்ளவில்லை. என்றபோதிலும், தானியேல் அங்கு வரும்படியாக வழியமைத்தார் ஆண்டவர். 

ஆபத்தை மாத்திரம் கூறிவிட்டு, அங்கிருந்து அகன்றுவிடவில்லை; ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ள வழியையும் எடுத்துக்கூறுகின்றான் தானியேல். நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும் என்றும், நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு, நீதியைச் செய்து, உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி, உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்ற ஆலோசனையையும் கொடுத்தான் (தானி 4:26,27). என்றபோதிலும், தானியேலின் வார்த்தைகளுக்கு நேபுகாத்நேச்சார் செவிகொடுக்கவில்லை. பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் நேபுகாத்நேச்சார் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா (தானி 4:29,30) என்ற வார்த்தை அவனது வாயிலிருந்து புறப்பட்டவுடனே, அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது (தானி 4:33). அவனுக்கு புத்திவந்தபோது (தானி, 4:34,36), பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்தினதோடு, அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான் (தானி 4:37). 

இன்றும், வாழ்க்கையில் அழிவு வருவதற்கு முன் கைப்பிரதிகள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ வரும் ஆண்டவரது ஆலோசனையை அடையாளம் கண்டுகொள்ளாததினால்,  மிருகம்போல வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். பரம அதிகாரத்தை அறியாததினாலேயே, பெருமை அநேகருடைய வாழ்க்கையில் குடிகொண்டிருக்கின்றது.


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி