இறைச்சியா?
இச்சையா?
'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்கூடுமல்லவா! பவுலும் இதனை தனது நிருபத்தில் எழுதி எச்சரிக்கின்றாரே (1தீமோ. 3:3,8; தீத்து 1:7,11). ஆசீர்வாதத்திற்காகவும், ஆகாரத்திற்காகவும் மாத்திரம் ஆண்டவரைத் தேடுவோரின் பயணம் பாதியில் முடிந்துவிடும் அல்லது முறுமுறுப்போடு முற்றுப்பெற்றுவிடும்.
'ஐந்து அப்பம் மற்றும் இரண்டு மீனினால்' போஷிக்கப்பட்ட ஜனங்கள், மீண்டும் இயேசு கிறிஸ்துவைத் தேடி வந்தபோது, இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, 'நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்' என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவான் 6:26) என்கிறாரே. இன்றைய நாட்களிலும், அநேகருடைய தேடுதல்களின் நிலை இதுவே. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொண்டதைத் தக்கவைத்துக்கொள்ளவும், பெற்றுக்கொண்டவைகளைப் பெருகச் செய்யவும், ஆசீர்வாதங்கள் தொடர்ந்து தங்களை வந்தடைந்துகொண்டிருக்கவுமே அவரைத் தேடுகின்றார்கள்; இத்தகைய தேடுதல், இத்தரையோடு நமது பயணத்தை நிறைவு செய்துவிடும்; மறுகரைக்கு நம்மை கொண்டுசேர்க்காது.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று (யாத். 12:35-38) என்றும், சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளையமிறங்கினபோது, ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: 'நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்? (யாத். 17:3) என்றும், ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள் (எண்;. 32:1) என்றும் வாசிக்கின்றோமே. அபப்டியென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, 'ஆடுமாடுகளும்' உடன் சென்றன என்பதை நாம் அறிந்துகொள்ளமுடிகின்றதே.
யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: 'நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்' என்றும், பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால், நீங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் ,துவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்' (ஆதி 46:31-34) என்தான் தனது குடும்பத்தை பார்வோனுக்கு முன் அறிமுகப்படுத்துகின்றான்; அப்படியென்றால், ஆடுமாடுகளோடு அவர்களது வாழ்க்கை பிணைந்திருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடிகின்றதல்லவா!
'இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தை திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து' (யாத். 16:3) என்றுதான் எகிப்தை அவர்கள் வர்ணித்தார்கள்; என்றபோதிலும், 'இறைச்சிப் பாத்திரத்தை' விட்டுவிட்டு, 'அப்பத்தை' மாத்திரம் வானத்திலிருந்து கொடுத்தார் ஆண்டவர்; என்றபோதிலும், இப்பொழுதோ, 'இறைச்சிப் பாத்திரங்களாகிய' 'இச்சிக்கும் பாத்திரங்களாகிய' 'அந்நிய ஜனம்' அவர்கள் பக்கத்திலிருந்ததால், 'இச்சையின் பாத்திரம்' அவர்களையும் பற்றிக்கொண்டது.
நம்முடைய வாழ்க்கையும், இத்தகைய நிலைக்குள் தள்ளப்பட்டுவிடாதபடிக்கு எச்சரிக்கையோடிருப்போம்! தேவன் தரும் ஆசீர்வாதங்களைத் தள்ளி, விரோதிகளின் வாழ்க்கையில் காணப்படும் வலையில் சிக்கிக்கொள்ளாதிருப்போம்,
Comments
Post a Comment