Skip to main content

உயர இருந்தே வரட்டும் ஒத்தாசை

உயர இருந்தே வரட்டும் ஒத்தாசை

 

'எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையம் உண்டர்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்' (சங். 121:2) என்பதே தாவீதின் அழுத்தமான, விசுவாசத்துடன்கூடிய நம்பிக்கை. தேவனிடத்திலிருந்து ஒத்தாசை கிடைக்கும் என்று நம்புகிற மனிதர்கள் எவ்வித சூழ்நிலைகளிலும் கலங்கிப்போவதில்லை. மனிதர்கள் உடனிருப்பார்களா, அல்லது போய்விடுவார்களா? இந்தக் காரியம் நடக்குமா அல்லது தடைபட்டுப்போகுமா? இந்தக் காரியத்திற்கு தேவன் கிரியை செய்யக் காத்திருக்கவேண்டுமா அல்லது தாங்களே கிரியை செய்யத் தொடங்கிவிடாமா? என்று ஆட்டங்காண்பதில்லை அத்தகையோரின் விசுவாசம். மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங். 118:8) என்பதை அறிந்தவர்கள் அவர்கள். பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்பதை புரிந்துகொண்டவர்கள் அவர்கள் (சங். 118:9). கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (சங். 40:4) என்பதுதான் சங்கீதக்காரன் நமக்குக் கற்றுத்தரும் உயரியப் பாடம். நான் இரண்டாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்தபோது, ஆசிரியர் செந்தூர்பாண்டியர் அவர்கள் வகுப்பில் கற்றுக்கொடுத்த பாடலே எனது நினைவுக்கு வருகின்றது,

பூமி அழிந்தாலும், ஆழி பொங்கினாலும்
என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்
யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன்
ஓர் போதும் அவர் கைவிடார் அஞ்சிடேன் என்பதுதான் அந்தப் பாடல்.

Click here to download the song

மேலும், எனது தாய் அடிக்கடி பாடும் ஓர் ஆங்கிலப் பாடலும் நினைவுக்கு வருகின்றது.

No never alone (2)
He promissed never to leave me 
Never to leave me alone

ஓர் போதும் விடார் (2)
என்றுரைத்த தேவன் என்னை என்றும் கைவிடார்

Click here to download the song

கர்த்தருக்கு முன்பாக நாம் செம்மையானதோர் வாழ்க்கை வாழுவோமென்றால், அவருடைய முகம் நம்மை நோக்கிக்கொண்டேயிருக்கும் (சங். 11:7), அவருடைய ஒத்தாசையும் நமக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது (சங். 34:15, 1பேதுரு 3:12) என்பதை மறந்துவிடவேண்டாம்.

ஒத்தாசை இல்லாததைப் போன்ற நிலைகள் உண்டாகும்போது, தேவன் ஒருவரையே நமது கண்கள் நோக்கிப் பார்க்கட்டும். அவர் தமது பிள்ளைகளாகிய நம்மை நோக்கியே பார்த்துக்கொண்டிருக்க, நாம் அவரிடத்தில் செல்லாமல், உலகத்தாரைப் பார்த்துக்கொண்டிருந்தால், அது தேவனை கனவீனம் பண்ணுவதாகிவிடுமே. அப்பா பக்கத்தில் நிற்கும்போது, அடுத்தவரிடத்தில் பிச்சை கேட்பது அசிங்கமல்லவா! கானானிய ஸ்திரீ இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டபோது, இயேசு அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார் (மத். 15:25,26). ஆனால் இன்றோ, பிள்ளைகள் பலர் நாய்க்குட்டிகளிடத்தில் சென்று அப்பத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இது, இளையகுமாரனனின் நிலையைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. இளையகுமாரன், பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான் (லூக். 15:16). இந்த நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் மக்கள் அநேகர்.

சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்ற செய்தியை சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள். அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள் (எஸ்றா 4:2,3). இதையே பவுலும் வைராக்கியத்துடன் எழுதினார். கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2கொரி. 6:15). கர்த்தருடைய பணியைச் செய்துகொண்டிருக்கும் நாம், இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களோடு கலந்துவிட்டால், அது 'பிசாசுக்கு இடங்கொடுத்ததே ஒழிய வேறல்ல' (எபே. 4:27). சத்துரு தன் ஆதிக்கத்தைச் செலுத்த அது ஆரம்பமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

கர்த்தருடைய சொற்கேட்டு பயணிப்பதற்கு மாறாக, ஆகாபை தேடிச் சென்று சகாயம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்னர், பிரசித்திப்பெற்ற ஊழியர் ஒருவர் வணங்கிய கரங்களுடன் விக்கிரகாராதனைக்காரர்களின் தலைவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்; அவருக்கு அருகே தமிழக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் நின்றுகொண்டிருந்தார். தினசரிப் பத்திரிக்கையில் வெளிவந்த புகைப்படத்துடனான இச்செய்தி, பலரது உள்ளத்தை உடைத்தது. தேவனுக்கு முன் நிற்கும் மனிதர், இவருக்கு முன் இப்படி வளைந்துபோனாரே என்பதை எனது கண்களாலே நான் கண்டபோது, எனக்கிருந்த மனக்கஷ்டம் சொல்லமுடியாதது. அந்த ஊழியரின் பாடிய பாடல்களால் ஈர்க்கப்ட்டே வாழ்ந்துகொண்டிருப்பவன் நான். எதற்காக அந்தச் சந்திப்பு நடந்தது? என்று என்னிடம் உண்டான கேள்விக்கு விடைகாண முற்படும் முன்னதாக, அந்தச் சந்திப்பு தேவையே இல்லை என்ற பதில் என்னை முந்திக்கொண்டது. கல்வி நிறுவனங்களை வளர்த்துவிட்டதால் உண்டான நிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்றும், அரசாங்கத்தினிடமிருந்து ஒத்தாசை பெறவே இச்;சந்திப்பு என்றும் அப்போதைய பத்திரிக்கைகள் தகவல்களைத் தந்திருந்தன. இது அந்த ஊழியத்தின் தலைமுறையினரோடும் கூட தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பதைக் காணுங்கால் வேதனைதான் மிஞ்சுகிறது. எத்தனையாய் சத்துரு கலந்துவிட்டான், எத்தனையாய் சத்துரு இவர்களை இழுத்துக்கொண்டான். என்னென்ன காரணங்கள் அத்தகைய ஊழியர்கள் சொன்னாலும், அவை அனைத்தும் வேதத்திற்கு ஒவ்வாதவைகளாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்றும் ஊழியர்கள் பலர் முதல்வரையும், தேசத்தின் பிரதமமந்திரிகளையும் சென்று சந்திக்கும் நிலையிலேதான் உள்ளனர்; முதல்வரும், பிரதமமந்திரிகளும் வந்து சந்திக்கும் நிலைக்கு தங்களை வளர்த்துக்கொள்ளவில்லை.

எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான். அவனிடத்திற்கு வந்த ஏசாயா தீர்க்கதரிசி, 'நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்' என்ற கர்த்தரின் செய்தியை அவனுக்கு அறிவித்தார். அப்பொழுது, எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான் (2இரா 20:2,3). அப்பொழுது, கர்த்தரிடத்திலிருந்தே அவனுக்கு சகாயம் கிடைத்தது. 'உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும்அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன்' என்றார் கர்த்தர் (2இராஜா. 20:6). அதற்கு அடையாளமாக சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவும் செய்தார் தேவன்.

எனினும், எசேக்கியா வியாதியாயிருந்தான் என்னும் செய்தியை எசேக்கியா சொல்லாமலேயே பிறர் சொல்லக் கேள்விப்பட்டான் பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா. இவன் வியாதியாயிருக்கும் நேரம்தான் அவனது ராஜ்யத்திற்குள் நுழையும் தருணம் என்பதை அறிந்துகொண்டான்; எசேக்கியாவுக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். சத்துரு செய்யும் யுக்தியான இந்த காரியத்தை உணர்ந்துகொள்ள திறனற்ற எசேக்கியா, அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை (2இரா 20:12-13). கர்த்தரோ அiதை விரும்பவில்லை, தன்னுடைய இராஜ்யத்தை சத்துரு வந்து சுற்றிப்பார்ப்பதை அவர் வெறுத்தார். சத்துருவின் கால் தடங்கள் தனது ராஜ்யத்தின் எல்லைக்கு உள்ளே வந்துவிட்டதினால் தேவன் மனஸ்தாபப்பட்டார். ஏசாயா தீர்க்கதரிசியை எசேக்கியாவினிடத்திற்கு அனுப்பினார். ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான் (2இரா 20:14). பாபிலோன் தேவ ஜனங்களை சிறைவைத்த தேசமல்லவா?

அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான். அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (2இரா 20:15-18). கர்த்தரிடத்தில் ஒத்தாசையைத் தேடி அது கிடைத்தபோதிலும், சத்துருவை அறியாமல் அவனது ஒத்தாசையையும் பெற்றுக்கொண்ட எசேக்கியாவின் ராஜ்யத்திற்கு நடந்தது வேதனைக்குறியது. எனினும், இத்தனை பெரிய பொல்லாங்கை தனது குமாரர்கள் எதிர்கொள்ள இருப்பதை அறிந்தும், 'என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே' என்றான் எசேக்கியா (2இரா 20:19). ராஜ்யம் நன்றாயிருக்கிறது என்பதை தனது நாட்களில் பார்த்தால் போதும் என்று ஆசைகொண்டவன் எசேக்கியா, தனது மரணத்திற்குப் பின் அது எப்படிப்போனால் எனக்கென்ன? என்ற நிலையில்தான் அவன் மனம் வாழ்ந்தது.

எசேக்கியாவைப் போலவே ஊழியர்கள் பலரும் வழிதப்பிப்போய்விடுகின்றனர், புதிரிலிருந்து எழுந்துவரும் எதிரியைக் காணக்கூடாமற்போய்விடுகின்றனர். சத்துருவை சந்திக்கும் இடத்தையோ சத்துரு சசந்திக்கும் இடத்தையோ அறிந்துகொள்ளாமல், வரையறுக்காமல், சகலத்தையும் காட்டிக்கொடுத்துவிடுகின்றனர். கர்த்தர் கட்டிவைத்திருக்கும் காரியங்கள் அனைத்தையும் எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடுகின்றனர். ஊழியர்களின் தேவையுள்ள நேரங்களை அறிந்து சத்துரு உதவிசெய்பவனைப்போல உட்புகுந்துவிடுகின்றான். ஊழியங்களுக்கு சிற்சில உதவிகளையும் செய்து, தங்களையும் தேவ ஊழியத்தில் ஒருவனாக அடையாளம் காட்டிக்கொள்கிறான் சத்துரு. கர்த்தர் கட்டிக்கொண்டிருக்கும் கட்டடத்தில், தன்னுடைய கரத்தையும் வைக்க விரும்புகிறான், தனக்கும் அதிலே பங்கு உண்டு என்று உரிமை பாராட்ட விரும்புகிறான். நூறு சதவீதம் கர்த்தர் என்ற இடத்தில், 90,80,70,60,50,40,30,20,10 என்று குறையும் சதவீதங்கள் ஒருநாளில் '0' வாகவும் மாறும் ஆபத்து உண்டு. சதவீதங்கள் குறைந்தால் சோதோம் எரியும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவனை உள்ளே விட்டால், நிச்சயம் உலகமே பின்னே வரும்.

கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றில் நடைபெற்றுவரும் அசனப் பண்டிகைகளுக்கு, விக்கிரகங்களை வணங்கும் மக்களிடமிருந்து பணமும், பொருட்களும் பெறப்படுகின்றன. மொய் வசூலிப்பது போல ஆலயத்திலிருந்துகொண்டு அவரை அறியாதவர்களிடமிருந்து வரும் பணத்தையும் சேர்த்து காணிக்கை என்று கூட்டிக்கொண்டு, கூட்டாஞ்சோறு போடுவதற்கு ஆலயம் சத்திரமல்லவே; சத்தியத்தை அறிவோம். தேவ ஜனங்களை பிற ஜனங்களோடு கலக்க சத்துரு எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் சத்தியத்தை அறியாமல் கண்கொருகிப்போனவர்கள் சிக்கிக்கொண்டனர். ஆலயம் கட்டுவதற்கும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக அவர்களைத் தேடிச் செல்வது நம்முடைய கடமை, ஆனால் சுவிசேஷத்தின் தேவைக்காக அவர்களிடத்தில் செல்வது நம்முடைய மடமை. அசனத்திற்காக அரிசி கொடுத்தார், பருப்பு கொடுத்தார், காய்கறிகள் கொடுத்தார் என்று சந்தோஷப்படும் நீங்கள் அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொடுத்தீர்களா? என்பதைச் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஆலயத்தைச் சார்ந்த பிற வளர்ச்சிப் பணிகளுக்கும்கூட அப்படியே செய்யப்படுகின்றது. யாரிடத்தில் வாங்கி எதைச் செய்யவேண்டும்? என்ற அறிவே இல்லாத நிலைக்கு கிறிஸ்தவர்கள் குருடர்களாகிவிட்டதினால், திருடர்கள் பெருகிவிட்டார்கள். நண்பர்களாக அவர்களோடு கூட பேசுவதையோ, பழகுவதையோ நான் தடை என்று சொல்லவில்லை, அது அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க வழிவகுக்கும்; ஆனால், அவர்களுடைய சம்பிரதாயங்களுக்குள் நாம் நுழைவதும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அவர்களிடமிருந்து இயேசுவின் பணிக்கானவைகளைப் பெறுவதையுமே தவறு எனக் குறிப்பிடுகின்றேன். 

கிறிஸ்துவின் பணியைச் செய்யும் கிறிஸ்தவ ஊழியர்களே கிறிஸ்துவைக் கொண்டு மாத்திரமே அதனைச் செய்யுங்கள். 'இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட' ஆசைப்படாதிருங்கள். அஸ்திபாரத்தில் அவன் கைவைத்துவிட்டால், ஆஸ்தியே அவனுடையதாகிவிடும். அவனுடைய அஸ்திபாரம் இல்லாமல், உங்களுடைய ஆஸ்தியைக் காப்பாற்றக்கூடாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவீர்கள். தேசத்தின் தலைவர்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளை மேடை ஏற்றும் கலாச்சாரம் இப்போது ஊழியர்களிடையே அதிகரித்துவருகின்றது. அரசியல்வாதிகளும், ஆவிக்குரியவர்களும் சமமல்ல என்பதை அறிந்துகொள்ளாததினால் வந்த விளைவு இது. மரியாதையும் மதிப்பும் கொடுக்கப்படவேண்டிய இடத்தில் கொடுக்கப்படவேண்டும், ஆனால், ஊழியர்கள் தங்களுக்கு இருக்கும் ஆவிக்குரிய மரியாதையை கொடுத்து (இழந்து) அதனை அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் இருக்கும் பிரசன்னத்தில், தேவையில்லாத பிரசன்னங்கள் இராதபடி எச்சரிக்கையாயிருப்போம்; இல்லையேல், எசேக்கியாவின் நிலையையே நாமும் சந்திக்க நேரிடும். இது பயங்காட்டுதல் அல்ல, எச்சரிக்கை!

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுகு;குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசாயா 30:21) என்கிறார் தேவன். வலது, இடது புறத்தை நாம் பார்க்கும்போது, வழியை விட்டு இழுபட்டுவிடக்கூடாது. எங்கெங்கோ, என்னென்னவோ நடந்துகொண்டிருந்தாலும், அதைக் குறித்து நீங்கள் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை; உங்கள் வழி இதுதான்; அதிலே திடமாயிருங்கள்; கர்த்தர் தந்த தாலந்துகளை திறமைகளை அந்த வழியிலேயே வெளிப்படுத்துங்கள். இழுப்புண்டுபோனால் உங்கள் அழைப்பு வெளுப்புண்டுபோகும். உலகத்தையே கையில் கொடுத்தார் தேவன், ஆனால், அதில் ஒரு பழத்தைக் காட்டி ஆதாமை ஏமாற்றிவிட்டான் பிசாசு.

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் 
என் கண்களை ஏறெடுப்பேன் 
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் - என்ற பாடலைப் பாடி நம்மை அர்ப்பணிப்போம். 

Click here to download the song 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி