Skip to main content

விசுவாசிகளின் வித்தியாசம்

விசுவாசிகளின் வித்தியாசம்

 

ஆடைகளில் மாத்திரமோ, நகைகளைக் கழற்றிவிடுகிறதினால் மாத்திரமோ, ஆலயத்திற்குச் செல்வதினால் மாத்திரமோ ஆண்டவரைக் காட்டிவிடமுடியாது; வாழ்க்கையின் செயல்களில் ஆண்டவர் காண்பிக்கப்படவேண்டும். வேதத்திற்கு முரணில்லாமல், ஒவ்வொரு படியிலும் நாம் முன்னேறவேண்டும். தன் ஜனத்தை விடுவிக்கும்போது, 'என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்குக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்' (யாத். 8:23) என்றார் கர்த்தர். மனிதர்களுக்கு மாத்திரமல்ல, இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும், எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணிக் காண்பித்தவர் நம் தேவன் (யாத். 9:4). பரிசுத்தமுள்ளதற்கும், பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணுகிறவர் (லேவி. 10:10). ஊழியஞ்செய்கிறவனுக்கும், ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் காண்பிக்கிறவர் (மல். 3:18). தம்மை அண்டி நிற்போரை இத்தனையாய் வித்தியாசப்படுத்தி தேவன் காண்பிக்கும்போது, அவரைச் சார்ந்து நிற்கிற நாமும் அவருடன் இருக்கிறவர்கள் என்று உலகத்தினின்று நம்மை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கவேண்டுமல்லவா.

நீங்கள் தாழ்விலிருந்து உண்டானவர்கள், நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள் (யோவான் 8:23) என்று நம்மை அடையாளப்படுத்தினாலும்; நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டேன் (யோவான் 15:19) என்றும், நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத். 5:14) என்றும் நம்மை உலகத்தினின்று வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றார் இயேசு. இதையே அப்போஸ்தலனாகிய பவுலும், 'ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்' (பிலி. 2:21) என்று கூறுகின்றார். உலகத்திலே நாம் இருந்தாலும் நாம் நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டியவர்கள். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது (1கொரி 10:23) என்று ஆவிக்குரிய வாழ்க்கையில் தான் எடுத்திருக்கும் நிலையினை எழுதுகின்றார் பவுல்.

நீதியின் வழியிலேயே தவறாது நடக்கும் நாம், நீதியின் நிமித்தம் வரும் பாடுகளையும் தவறாது ஏற்றுக்கொள்ளவேண்டுமே; துன்பங்களின் மத்தியிலும் நமது வித்தியாசத்தைக் காண்பிக்கவேண்டும். எனவே இயேசு, நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே (மத் 5:10-12) என்றும், பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் (லூக். 23:31) என்றும் நாம் எதிர்கொள்ளவேண்டிய பாடுகளை முன்னறிவிக்கின்றார்.

இன்பம் என்பது எல்லாரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது; அப்படியே, துன்பங்கள் வாழ்வை விட்டுத் தூரச் சென்றுவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே இருக்கின்றது. எனினும், 'நீதியின் நிமித்தம்' 'இயேசுவின் நிமித்தம்' உண்டாகும் துன்பங்களை நாம் சகித்தே ஆகவேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாக்கியவான்களின் பட்டியலிலே பெயர் வரவேண்டும், ஆனால், துன்பப்பட்டோரின் பட்டியலிலே பெயர் வேண்டாம் என்பது பலரது விருப்பம். 'நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களின்' பட்டியலில் நாம் சேர்க்கப்படவேண்டும். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்' (சங். 34:19) என்று நாம் பயணிக்கவேண்டிய பாதையினை தாவீது பாடுகின்றான். மேலும், நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர் (சங். 138:7) என்றும் நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார் (சங் 34:17) தனது விசுவாசத்தை அறிக்கையிடுகின்றான். உம்மிலே பெலன்கொள்ளுகிறமனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள் (சங் 84:5-7) என்பதும் அவனது பாடலே.

இதற்கு உதாரணமாகவே, 'எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்' (2தீமோ. 3:11) என்று எழுதுகின்றார் பவுல். பாவத்தை விட்டு நாம் மனந்திரும்பியிருக்கும் நாம், பாடுகளைக் கண்டு மறுதலித்துவிடக்கூடாதே. பாடுகளின் மத்தியில்தான் நமது பெலன் வெளிப்படவேண்டும். 'அந்தப்படி, நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்' (2கொரி. 12:10) என்று தனது விருப்பத்தையும், ஸ்திரத்தன்மையையும் எழுதுகின்றார் பவுல். கைதியாக்கப்படும்போது நாம் பயப்படவேண்டாம் கட்டுகளை அறுக்கிறவர் உடன் உண்டு, அடைக்கப்படும்போது நாம் பயப்படவேண்டாம் விடுவிக்கிறவர் உடன் உண்டு. பாடுகளைச் சந்திக்கும்போது நான் வெட்கப்படுவதில்லை (2தீமோ. 1:12) என்கிறார் பவுல். பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்; கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டிருந்தனர்; என்றாலும், துன்பத்தின் மத்தியிலும் அவர்கள் துக்கமுகமாயிருக்கவில்லையே. நடுராத்திரியிலே ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் (அப். 16:23-25). சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருந்தது. மற்றவர்கள் துக்கமுகமாய் இருந்ததைப் போல இவர்கள் இருக்கவில்லை. நாமும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றோம், இவர்களும் சிறையில்தான் அடைக்கப்பட்டிருக்கின்றனர்; எனினும், இவர்கள் இருவரும் எப்படி சந்தோஷமாயிருக்கின்றனர் என்ற கேள்வி அவர்களோடிருந்த பிற கைதிகளுக்குள் உண்டாகியிருக்கும். இவர்களும் சிறையில்தான், பிற கைதிகளும் சிறையில்தான்; இடம் ஒன்றுதான், பாடுபடும் இடம் ஒன்றுதான்; ஆனால், பவுலும் சீலாவுமோ நீதியின் நிமித்தம் அடைக்கப்பட்டவர்கள்; பிறரோ குற்றங்களினிமித்தம் சிறைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். குற்றம் செய்தவர்களுக்குள் ஒருவராக தங்களை அடைத்துவிட்டார்களே என்று அவர்கள் வெட்கப்பட்டுவிடவில்லை. கிறிஸ்துவோடு இருக்கும் நாம் பாடுகளைச் சந்திக்கும்போது, நமக்குள் இருக்கும் சந்தோஷமே நம்மைப் பிரித்துக் காட்டும். நம்மைப் போல, நம்முடன் பாடுபடும் பிறரையும் ஆதாயப்படுத்திக்கொள்ள வழியைத் தரும். யோசேப்பும் அப்படியே, தேவனுக்கு பிரியமாயிருந்த அவன் பாவத்தை வெறுத்தபோது, பாடுகளுக்குட்படுத்தப்பட்டான்; சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான்; என்றாலும், கர்த்தர் யோசேப்போடே இருந்தார் (ஆதி. 39:21). சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த யாவரையும் கர்த்தர் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தார் (ஆதி. 39:22). பாடுகளின் மத்தியிலும் நமக்கு இருக்கும் ராஜ்யபாரத்தை நாம் அறிந்துகொள்வது அவசியம். பாடுகளின் மத்தியில் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கிறவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் என்று உரைக்கும் ஏசாயா தீர்க்கதரிசி, அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார் (ஏசாயா 53:10,11) என்று வருத்தத்திற்குப் பின் வரும் வருமானத்தைக் குறித்து அறிவிக்கின்றாரே.

நாமோ, பல நேரங்களில், வியாதியானாலும், பிற துன்பங்களானாலும் உலகத்தாரில் ஒருவரைப் போலவே நம்மை அடையாளப்படுத்துகின்றோம்; மற்றவர்களிடத்திலும் அப்படியே பேசிக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வீட்டிலும் மரணம், எனது வீட்டிலும் மரணம்; அவர்கள் வீட்டிலும் வியாதி, எனது வீட்டிலும் வியாதி; அவர்கள் வீட்டிலும் பணக்கஷ்டம், எனது வீட்டிலும் பணக்கஷ்டம்; அவர்கள் வீட்டிலும் சத்துருவின் தொல்லைகள், எனது வீட்டிலும் சத்துருவின் தொல்லைகள்; என்றாலும், 'விசுவாசிகளாகிய நமக்கு வித்தியாசம் வேண்டும்'. நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை (2கொரி 4:8,9) இந்த வார்த்தைகள் நமக்குரியது. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை (1தெச 4:13) என்று சபைக்கு ஆலோசனையாக எழுதுகின்றார் பவுல். ஒரே துன்பம்தான், ஒரே வியாதிதான் எனினும், நாம் கிறிஸ்துவினுடையவர்கள். கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம 8:36,37). அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2கொரி 12:10) என்கிறார் பவுல். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் (2தீமோ. 3:12) இதற்குத் தப்பிப்போக எண்ணவேண்டாம்.

நாம் விசுவாசிகளுக்கு மாதிரியாக வாழவேண்டியவர்கள். இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள் (1தெச 1:7) என்றெழுதுகிறார் பவுல்; இது அந்த சபையாருக்குக் கிடைத்த எத்தனை பெரிய உன்னதமான சான்றிதழ். உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1தீமோ 4:12) என்றும், நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி (தீத்து 2:7) என்றும் அதனையே தன் உடன் ஊழியருக்கும் ஆலோசனையாக பவுல் எழுதுகின்றார். மேலும், மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது (2கொரி 1:12) என்றும் தான் அதனைக் கடைப்பிடிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். நாம் மந்தைக்கு மாதிரியாயிருக்கவேண்டியவர்கள் (1பேதுரு 5:3). எந்தச் சூழ்நிலையினை நாம் சந்திக்க நேரிட்டாலும், அதனை எப்படிச் சந்திக்கவேண்டும் என்று வேதத்தின் அடிப்படையில் செய்வதே நம்மை அவருடையவர்களாகக் காட்டும். இன்றோ, விசுவாசிகளுக்குள்ளேயே பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது, விசுவாசிகள் வித்தியாசமாகக் காணப்படாத நிலை உண்டாகின்றது.  

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி