Skip to main content

பொக்கிஷமா? போஜனமா?

பொக்கிஷமா? போஜனமா?

 

நித்தியமாதும் நிலையானதும் எவை என்றும், அதனை அடையும் வழி எது என்றும் அறிந்து அதற்கு அர்ப்பணித்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. உண்ணும்போது, அதிகமானதைக் கண்டு போதுமென்று சொல்லும் உணர்வைப் பெற்ற நாம், உடமைகளும் பொருட்களும் பெருக்கும்போது அதற்கும் அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைகக்கவேண்டாம்; இங்கே புச்சியும் துருவும், அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள் (மத். 6:19) என்று 'அழியும் பொக்கிஷத்துக்கும், அழியாத பொக்கிஷத்துக்கும்' வித்தியாசம் காண்பித்தார் இயேசு. ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்ட (லூக் 12:19) மனிதனை நோக்கி, 'மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?' என்றார் (லூக் 12:20). நாம் நம்மிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டியவர்கள், பூமியில் அல்ல, பரலோகத்தில் சேர்க்கவேண்டியவைகள். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே மதிகேடான காரியத்தையே செய்துகொண்டிருக்கின்றனர் (லூக் 12:21). உண்டானவைகளை விற்று பிச்சை கொடுத்து, பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள் என்றார் இயேசு (லூக். 12:33). உங்களுக்கு இந்த உலகத்தில் உள்ளவைகளையல்ல, 'ராஜ்யத்தையே கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார்' (லூக். 12:32); எனவே, தேவனுடைய ராஜ்யத்தையே முதலில் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் (லூக். 12:31). இங்கு இருப்பதல்ல, அங்கு இருப்பதுதான் கிறிஸ்தவனின் சொத்தாக கணக்கில் கொள்ளப்படும் என்பதை மறந்துவிடவேண்டாம். 'பரலோகமே, என் சொந்தமே' என்று பாடிக்கொண்டு, பூலோகத்தையே சொந்தமாக்கிக்கொள்ள ஓடிக்கொண்டிருப்பவர்கள் அநேகர்.

பொக்கிஷத்துக்கு மாத்திரமல்ல, போஜனத்திலும் உள்ள வித்தியாசத்தை காட்டிக்கொடுத்தார்ர் இயேசு. தனது போதகத்தைக் கேட்ட ஜனங்களுக்கு உலகத்தின் அப்பத்தை போஜனமாகக் கொடுத்தார் இயேசு. அவர்களது பசியை அவர் அறியாதிருக்கவில்லை; அவர்களை போஷிக்கவும் மறந்துவிடவில்லை (யோவான் 6:11); என்றபோதிலும், அதனைத் தொடர்ந்து மற்றொரு அப்பத்தைக் குறித்து இயேசு போதித்தபோதோ சுற்றியிருந்தவர்கள் விரக்தியடையத் தொடங்கிவிட்டார்கள். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள் (யோவான் 6:27) என்றார். அப்பொழுதும், சாப்பிடும் அப்பத்தைக் குறித்தே குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்; 'எங்களுடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே' என்றார்கள் (யோவான் 6:31). 'மன்னாவையே அப்பமென்ற அறிவோடு நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் அவர்கள்'.

மோசேயின் நாட்களில் பெய்த மன்னாவை 'அப்பம்' என்ற நிலைக்கு உயர்த்திப் பேசிய அவர்களிடம். 'வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை' என்று சொன்னார் இயேசு. அதன் அர்த்தம், மோசே கொடுத்தது 'ஜீவ அப்பம் அல்ல' உங்கள் உடலுக்கான உணவு என்பதே. ஆனால், 'வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பமாகிய தன்னை (இயேசுவை) பிதாவே உங்களுக்கு இப்போது கொடுத்திருக்கிறார்' என்று அவர்களுக்கு உணர்த்தினார். மன்னா உடலுக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பம், இயேசுவோ தன் ஜீவனையே கொடுக்கின்ற அப்பம் (யோவான் 6:32-33). நாம் எந்த அப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்? உடலுக்கு ஜீவனைக் கொடுக்கின்ற அப்பத்திற்hக? அல்லது உயிரையே கொடுத்த அப்பத்திற்கா? சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் மாத்திரம் தேவனிடத்திலிருந்து இறங்கி வந்துகொண்டேயிருந்தால் அது போதும் என்று வாழும் மனிதர்கள் ஏரளம்; அத்தகையோர், தங்களுக்காக உயிரைக் கொடுத்த அப்பத்தை மறந்துவிடுகின்றனர். அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் முதலில் மகிழ்ச்சியாகட்டும் (ஏசாயா 55:2). பிரியமானவர்களே, உங்கள் ஆத்துமா வாழ்கிறதுபோல நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கப் பிரயாசப்படுங்கள் (3யோவான் 1:2).

நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று இயேசு சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யோவான் 6:41). அவர்களது முறுமுறுப்பைக் அறிந்த இயேசு, 'ஜீவ அப்பம் நானே' என்று மறுபடியும் அழுத்திக் கூறினார் (யோவான் 6:48). 'மன்னாவைப் புசித்தவர்கள் மரித்தார்கள்' 'என்னைப் புசிக்கிறவர்கள் மரியார்கள்' என்று வனாந்தரத்தில் கிடைத்த மன்னாவுக்கும், வானத்தலிருந்து வந்த அப்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறினார். உலகத்திற்காக சிலுவையில் பலியாக தன்னைக் கொடுக்கப்போவதை, 'நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே' (யோவான் 6:51) என்று இயேசு போதித்தபோது, அதன் பொருளை உணராத மக்கள் தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள் (யோவான் 6:52). மன்னாவைத் தின்றபோது சந்தோஷமாக இருந்த மக்கள், இயேசு தன்னைக் குறித்துப் பேசியபோது சங்கடப்பட்டார்கள். அவருடைய மாம்சத்துக்கும், ரத்தத்துக்கும் தங்களுடைய சரீரத்தில் இடம் கொடுக்கும் மனிதர்களுக்கே நித்திய ஜீவன் என்று இயேசு போதித்தார். ஆம், நாம் அவருடைய ஆலயமல்லவா, 'நமக்குள்ளே அவர் மாம்சத்தோடும் ரத்தத்தோடும் ஜீவனோடு வாழவேண்டுமே'. இதற்கு இடங்கொடுக்காத கிறிஸ்தவன் மன்னாவைத் தின்று மரிப்பவனே. கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்கு ஆலயமாகவேண்டியவனல்லவா (1கொரி. 3:16). கிறிஸ்துவின் மாம்சமும், ரத்தமும் நம்முடன் இணைந்திராவிட்டால், அவருடைய ஆவி நமக்குள் வாசம் செய்வது எப்படி சாத்தியமாகும்?

நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்டு? செய்ய இயலாமற் சென்றுவிட்ட மனிதனைப் போலவே, இயேசுவின் சீஷர்களிலும் பலர் 'இது கடினமான உபதேசம்' என்று அவருடனே கூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள் (யோவான் 6:66). இயேசுவின் உபதேசங்களைக் கைக்கொள்ள அவர்களுக்கு மனதிருந்தது, ஆனால் கடினமான உபதேசத்தைக் கைக்கொள்ள அவர்களுக்கோ மனதில்லலை; 'யார் இதைக் கேட்பார்கள்?' என்ற மனதுடன், இயேசுவுடனான பயணத்தை நிறுத்திக்கொண்டனர். ஒரு கூட்ட சீஷர்கள் போய்விட்ட நிலையில், தன்னை நெருங்கி நின்ற பன்னிரெண்டு சீஷர்களை நோக்கி: 'நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா? (யோவான் 6:67) என்று கேட்டார் இயேசு. மெய்யான ஜீவ அப்பம், அவர் தரும் ஆசீர்வாதங்களல்ல, அவரே.

நம்முடைய நிலை என்னா? மன்னாவே போதுமென்றிருக்கிறோமா? அல்லது அவரை வேண்டுமென்று ஏற்றுக்கொள்ளுகிறோமா? இன்றைய நாட்களில் மன்னாவைக் குறித்து பேசும்போது மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள், பாவத்தை விட்டு விலகி இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும்போது ஓடிவிடுகின்றனர், ஒதுங்கிவிடுகின்றனர்; அது கடினமான உபதேசம் என்று நினைத்துவிடுகின்றனர். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல (1யோவான் 5:3) என்று எழுதுகின்றார் யோவான். அவரிடத்தில் நாம் கொள்ளும் அன்பே அவருடைய கற்பனைகளை நமக்கு எளிதாக்கும், அவைகளை வழியாக்கும், வாழ்வின் ஒளியாக்கும்.

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி