Skip to main content

பிரிவு

 பிரிவு



கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். (லேவி 20:26)


உன்னதருடனான உறவைக் காத்துக்கொள்வதில் நாம் உறுதியுடன் இருக்கவேண்டும்; என்றபோதிலும், உலக மனிதர்களோ நம்முடனான உறவை சில நேரங்களில் காற்றடித்துப் பறந்து செல்லும் சருகைப் போல கத்தரித்துப்போட்டுவிடக்கூடும். காரணங்கள் ஏதுமின்றி உறவிலே எறியப்படும் கல் நம்மைக் கவலைக்குள்ளும் ஆழ்த்திவிடக்கூடும். என்றபோதிலும், நம்முயை ஆவிக்குரிய குணத்தையும், தன்மையையும் இழந்துவிடாமல் வேதனை என்னும் அத்தகைய ஆற்றைக் கடந்துவிடுவோமென்றால், நாம் அல்ல அக்கரையிலேயே நம்மைக் கல்லெறிந்தவர்கள் விடப்பட்டிருப்பதனை நமது கண்களால் காண முடியும். 

அடிமைத்தனம் என்னும் எகிப்தை விட்டு, ஆண்டவரை பிரித்துக்கொண்டுவரும்போது, பிரிந்துவரும் எகிப்தை நினைத்து நாம் வருந்திக்கொண்டிருக்கலாமோ? அல்லது விட்டுவந்த எகிப்தில் கிடைத்த உணவை விருந்தாக நினைத்து, 'நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே' (எண்; 11:4-6) என்று அழுதுகொண்டிருக்கலாமா? இன்றைய நாட்களிலும், சரீரத்திற்குக் கிடைக்கும் இரைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள்; தங்கள் வாழ்க்கைக்கு வரவிருக்கும் சிறையைக் குறித்து சிந்திப்பதில்லை. இரையைத் தேடி, தூண்டில்களில் சிக்கும் மீன்களைப் போலவும், கண்ணிகளில் சிக்கும் குருவிகளைப் போலவும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர்.

கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணினபோது, நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்லியிருந்தபோதிலும், லோத்துவின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாளே (ஆதி 19:22,24,26). தேவன் இஸ்ரவேல் மக்களின் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தவராக (யாத் 2:24) அவர்களை எகிப்திலிருந்து பிரித்து அழைத்துக்கொண்டுவந்தார். லோத்துவின் குடும்பத்தையோ, நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; சோதோமின் மனிதர்களது கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்று கூறினவாறு காப்பாற்றினார்கள் தூதர்கள் (ஆதி 19:13). இவ்விரண்டு சம்பவங்களும் நமக்குப் போதிக்கும் சத்தியம் என்ன? நம்மை துன்பப்படுத்தும் மனிதர்களால் தேவனை நோக்கி நாம் பெருமூச்சு விட்டாலும் அவர்களை விட்டு தேவன் நம்மை பிரித்துவிடக்கூடும்; அல்லது, துன்பப்படுத்தும் மனிதர்களின் துன்மார்க்கத்தினிமித்தமும் தேவன் நம்மை அவர்களை விட்டுப் பிரித்துவிடக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், அத்தகையோரின் பிரிவினை நினைத்து வருந்தாமல், தேவன் வழிநடத்தும் பாதையில் பரத்திலிருந்து கிடைக்கும் விருந்தாகிய மன்னாவோடு முன்னேறவேண்டியவர்கள் நாம்.  

எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்ட இளையகுமாரன், பன்றிகள் தின்னும் தவிடுகூட கிடைக்காத நிலையில், தான் இருக்கும் இடத்தினை விட்டுப் பிரிந்து தகப்பனுடைய வீட்டை நோக்கி திரும்பிவந்துகொண்டிருந்தான் (லூக். 15:13,16). பிதாவைக் காட்டிலும், பிற மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கையும் இந்நிலைக்கே நம்மைத் தள்ளிவிடும். உலக வழிகளில் சிக்கியிருக்கும் மனிதர்களுடனான உறவையே அதிகம் மதித்து, உன்னதருடனான உறவினை விட்டுப் பிரிந்துசென்று, 'ஆத்துமாவுக்கோ, தவிட்டையே கொடுத்துக்கொண்டிருக்கும்'  மனிதர்கள் இன்றும் உண்டு. இத்தகைய மனிதர்கள், பிதாவுடனான உறவைக் காத்துக்கொள்ளவேண்டுமென்றால், அத்தகைய மனிதர்களை விட்டுப் பிரிந்துவருவது அவசியமல்லவா. பிதாவின் வீட்டிற்கு வந்ததினால், இழந்துபோன உறவையும், உடையையும், உபசரிப்பையும், உணவையும் திரும்பவும் பெற்றுக்கொண்டானே. பிதாவின் வீட்டில் விருந்துண்ணும்போது, தவிட்டைத் திண்ற திண்ணைகளைக் குறித்து நாம் வருந்தவேண்டியதில்லை. சங்கீதம் 1 போதிப்பது இதுதானே. 

ஆண்டவருடனான உறவை வலுப்படுத்த, தாவீதைப்போல சொந்த வீட்டாராலேயே பிரிக்கப்பட்டு, ஆட்டுமந்தையோடுகூட நாம் வைக்கப்பட்டிருக்கலாம்; அல்லது, சிங்காசத்தில் உயர்த்தப்படும்படியாக சொந்த வீட்டிலிருந்து யோசேப்பைப் போல பிரிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய பிரிவுகள் அனைத்தும் நம்மை பிதாவோடு பிணைப்பவைகளே. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி