Skip to main content

அறியாவிட்டால் அழிவுதான்

 

அறியாவிட்டால் அழிவுதான்

 

வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களின் தொடக்கங்கள் பல வேளைகளில் நமக்குத் தென்படுவதில்லை. எங்கோ இருந்து அவைகள் வருவதாகவே நாம் யூகித்துக்கொள்கிறோம், அதற்குக் காரணம் வேறு யாராகவோ இருக்கலாம் என்றே சந்தேகிக்கிறோம். ஆனால், பல நேரங்களில் துன்பங்களுக்குக் காரணம் நாமே. எனினும் துன்பங்களைச் சந்திக்கும் வேளைகளில், அதற்கானக் காரணம் தாங்களாகவும் இருக்கக்கூடுமோ என்ற கோணத்தில் ஆராயமுற்படாவிட்டால், துன்பங்கள் முற்றுப்பெறாதே. நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் (1கொரி. 11:31) என்று கொரிந்தியருக்கு பவுல் ஆலோசனை சொல்லுகின்றார். இதையே யோவானும், 'நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.' (1யோவான் 1:8) என்று எழுதுகின்றார். துன்பங்களைச் சந்திக்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை அலசி ஆராய்வது அவசியம்.

இயேசு பவனியாய் வந்துகொண்டிருந்தபோது, எருசலேமைப் பார்த்து அதற்காகக் கண்ணீர் விட்டு அழுதார். உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது என்று சொன்னார். உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார். (லூக் 19:42-44)

இரண்டு காரியங்களைக் குறித்த அறிவில்லாத ஜனங்களை இயேசு இங்கே குறிப்பிடுகின்றார். ஒன்று சமாதானத்துக்கு ஏற்றவைககை; குறித்த அறிவில்லாமை, இரண்டாவது சந்திக்கும் காலத்தைக் குறித்த அறிவில்லாமை. இவ்விரு அறியாமைகளும் நம்மை அழிவின் முடிவுக்குள் தள்ளிவிடப் போதுமானவை; அறியாமை என்றும் ஆபத்தானதே. உலகத்தில் வாழும்போது, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த நாட்களில் சமாதானத்திற்கேற்றவைகளை முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டும். பாவத்தின் நிமித்தம், அக்கிரமத்தின் நிமித்தம், உலக ஆசைகளின் நிமித்தம் தேவனை விட்டு விலகிக்கிடக்கும் நமது தூரத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடாது. உலகத்தில் வாழும்படி நமக்குக் கொடுக்கப்பட்ட நாட்கள், 'வாழ்க்கையில் பாவத்தை அதிகரிக்கச் செய்ய அல்ல' 'தேவனோடு அதிகமாக நெருங்கிச் சேரவே.' இந்த அறிவற்ற மனுடரே, உலகத்தின் சிற்றின்பங்ளின் சிக்கிக்கிடக்கின்றனர். உலகத்தில் பிறந்தது அனுபவிக்கவே, புசித்துக் குடித்து வெறிக்கவே என்ற எண்ணத்துடனேயே தங்கள் வாழ்நாட்களைக் கடத்துகின்றனர். தங்களுக்கும் தங்களைப் படைத்த தேவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரிக்கச் செய்துகொண்டேயிருக்கின்றனர். தூரத்தை அதிகரிக்கச் செய்யும் இடங்களையே அவர்கள் தேடிச் செல்கின்றனர். குடியும், போதையும், விபச்சாரமும், அசுத்தமான செயல்கள் அத்தனையும் அவர்களை இழுத்துக்கொண்டு செல்ல, முடிவில், மரணத்திற்குப் பின்னர், பரலோகத்தில் வீற்றிருக்கும் தேவனைச் சந்திக்க இயலாதவர்களாகவும், பரலோகத்திற்குத் தூரமானவர்களாகவும் பரிதபிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

தூரமாயிருந்த நம்மை தேவனுக்கு சமீபமாக்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார் (எபே 2:17). இயேசுவின் இரத்தம் மாத்திரமே நம்மை தேவனுக்குச் சமீபமாகக் கொண்டுவர வல்லது. முன்னே தூரமாயிருந்த நாம் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானோம். (எபே 2:13).

பிரியமானவர்களே! உங்கள் சமாதானத்திற்கேற்றவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்களா? அவரை உங்கள் சொந்த இரட்சகராக உள்ளத்தில் வீற்றிருக்க அனுமதித்திருக்கிறீர்களா? இரட்சிப்பிப்பின் சந்தோஷம் உங்களில் உண்டா? நான் தேவனுடைய பிள்ளை என்ற நித்தியத்திற்குக் கொண்டுசெல்லும் நம்பிக்கை உங்களுக்கு உண்டா? பொருளாசையையும், சிற்றின்பங்களையும் கொடுத்து தேவனை விட்டுத் தூரமாக சத்துரு உங்களைத் துரத்திக்கொண்டு செல்வதை அறிந்துகொள்ளுங்கள்; சமாதானத்தை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். மரணத்திற்குப் பின், மனந்திரும்புதல் உங்கள் கண்களுக்கு மறைக்கப்படும் காலம் வரும், தேடியும் காணக்கூடாத நிலை வரும். 'இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் (2 கொரி. 6:2). தேவன் நம்மைச் சந்திக்கும் காலத்தைப் பற்றிய அறிவு நமக்கு உண்டா? சபைகளுக்குச் செல்லும்போது, ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கேற்கும்போது அங்கு செய்யப்படும் பிரசங்கங்கள் அனைத்தும் யாருக்கோ அல்ல, உன்னைச் சந்திக்கவே. ஆனால், இந்த அறிவு இல்லாமலேயே ஆலய ஆராதனைகளிலும், கூட்டங்களிலும் பங்கேற்பதினால் பிரயோஜனம் என்ன?

பல நேரங்களில், நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான காரணங்கள் இதுவே. நம்மிடத்தில் உள்ள அறியாமையினால் வரும் அழிவினைக் காண இயலாமல், அங்கும் இங்கும் நாம் ஓடி அலைவதில் பிரயோஜனம் இல்லை. அறியவேண்டியவைகளை நாம் அறிந்துகொண்டால், அழிவைத் தடுத்துவிடலாமே. சந்திக்கும் காலத்தைக் குறித்தும், சமாதானத்துக்கடுத்ததைக் குறித்ததுமான அறிவு இல்லாமல் சந்தோஷமாக வாழவேண்டும் என்று விரும்பும் மக்களே அதிகம். ஊழியர்கள் பலர் தேவனைக் குறித்து எடுத்துச் சொல்லியும், வேதத்தைக் குறித்து எடுத்துச் சொல்லியும் அதனைப் புரிந்துகொள்ள மனதற்றவர்களாகவும், அந்த அறிவு தங்களுக்குத் தேவையற்றதைப் போல உணர்வவற்றவர்களாகவும் வாழும் ஜனங்கள் அநேகர். தேவ அறிவும், வேத அறிவும் உங்கள் வாழ்க்கையை சத்துருவின் கையிலிருந்து காப்பாற்றும். வேதத்தைக் கைகளில் வைத்திருந்தும், வேதத்தைக் குறித்த அறிவில்லாமல், தேவனை விட்டுத் தூரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களை சத்துரு சூழ்ந்துகொள்கிறான். வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளைக் கொடுத்து, அவர்களை வாதிக்கின்றான். தேவனால் பாதுகாக்கப்படாத அவர்களது வாழ்க்கையை, வேதனைகளினால் பாழ்படுத்திவிடுகின்றான். வசனத்தைக் குறித்த அறிவிருந்த இயேசுவினிடம், 'இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்பச் செய்யும்' என்று சொன்னான், ஆனால், வசனத்தைப் பற்றிய அறிவில்லாதிருந்தால், அந்தக் கல்லுகளாலேயே நம்மை அடித்துக் கொன்றுவிடுவான்.

தேவன் வேண்டாம் தேவைகள் போதும் - அவர் 
சந்திக்க வேண்டாம் சந்தோஷம் போதும் - என்று
துரத்தும் சத்துருவின் கரத்தைப் பிடித்துக்கொண்டாய்
தூரமாய் நின்றுகொண்டாய் துன்பத்திலேயே வாழ்ந்துகொண்டாய் 
மரணம் வந்தது உனக்கு இனி மனந்திரும்புதலில்லை
மறுமுறை உயிர்த்தாலும் மரணம்தான் உன் எல்லை 
சந்திக்கும் காலத்தை அறியாமல் நீ வாழ்ந்ததினால்
வேதனையே வாழ்வானது, வாழ்வோ பாழானது

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி