Skip to main content

நீதியும், பீதியும்

 

நீதியும், பீதியும்

 

ஒவ்வொரு மனிதனையும் இவ்வுலகிற்கு அனுப்பியதற்கு பிதாவிற்கொரு நோக்கம் உண்டு. மனிதர்களை முன்குறிக்கும் மனம் கொண்டவர் அவர். சிம்சோன் தாயின் கர்ப்பத்தில் பிறக்கும் முன்னரே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன். நான்; கர்ப்பத்திலிருந்து வெளிப்படும்போதே உமது சார்பில் விழுந்தேன், நான் என் தாயின் வயிற்றில் இருந்தது மதல் நீர் என் தேவனாயிருக்கிறீர் (சங். 22:10) என்கிறான் தாவீது. அதுமாத்திரமல்ல, என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர் (சங். 139:13) என்பதும், 'நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே (சங். 71:6) என்பதும் அவனது கூற்றே. உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது : என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷ{ரனே பயப்படாதே (ஏசா. 44:2) என்று ஏசாயா தீர்க்கதரிசியும் இதையே உறுதிப்படுத்துகின்றார். கர்த்தர் எரேமியாவை நோக்கி, நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்றார் (எரே. 1:5) இது தேவனது தெரிந்தெடுத்தலின் உயர்ந்த படியல்லவா! எனினும், நாம் எப்படி தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை அவரை நெருங்கும் முதல்படியில்தான் நம்மல் அறிந்துகொள்ளமுடியும். இயேசுவை விசுவாசிக்காமல், வேதத்திற்குக் கீழ்ப்படியாமல், தேவனுக்குத் தூரமான வழியில் நின்றுகொண்டு, 'நான் எப்படி தெரிந்தெடுக்கப்பட்டவன்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தால், விடையறிய இயலாது. 'நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்' (யோவான் 1:23) என்று யோவான் தன்னைக் குறித்து நன்கு அறிந்துவைத்திருந்தான். அந்த அறிவே, இயேசுவுக்கு பாதையை உண்டாக்கவேண்டும் என்ற அறிவை அவனுக்குக் கொடுத்தது.

சகோதரனே, சகோதரியே நீ எதற்காகப் பிறந்தாய் என்று புலம்புகின்றாயோ? சோதனையின் மேல் சோதனை, வேதனைதான் வாழ்க்கை என்று அங்கலாய்க்கின்றாயோ; கவலைப்படவேண்டாம், கர்த்தரண்டை வா; நீ இந்த உலகத்தில் பிறந்ததின் நோக்கம் உனக்கு வெளிப்படும். எப்படிப் போவது என்ற கேள்வியுடன் நிற்கும் உனக்கு இப்படிப் போ என்ற அறிவுரை பிறக்கும். செய்வதறியாது திகைத்து நிற்கும் உனக்கு செய்யவேண்டியதெல்லாம் அறிவிலே உதிக்கும். வாழ்க்கை ஏன்? என்று கேட்ட உனக்கு வாழ்க்கையின் மேன்மை புலப்படும். உன் பயணத்தைத் தொடங்க பக்கத்தில் அவரே இருப்பதும், பாதம் கல்லில் இடறாதபடிக்குக் கரம்பிடித்து உன்னை நடத்துவதும் உனக்கே தெரியும். யோவானைப் போல நீ சத்தமாயிருந்தால், செத்தபின் உன்னால் அவருக்குப் பயன் கிடைக்குமோ? உயிர் இருக்கும்போதே உணர்ந்துகொண்டால் மாத்திரமே அது சாத்தியமாகும். இதுதான் பாதை என்றால், அதில் நீ விதையானாலும் விட்டுவிடாதே.

நம்முடைய தெரிந்தெடுத்தலையும், பயணிக்கவேண்டிய பாதையையும் நாம் கண்டுகொண்ட பின்னர், தூரத்திலிருக்கும் இலக்கை நோக்கி துணிவுடன் செல்லவே நாம் அழைக்கப்பட்டவர்கள்; வழியில் கிடக்கும் விரியன்களுக்கெல்லாம் பயந்து வழியை மாற்றிக்கொள்ளக்கூடாது. தனது அழைப்பை அறிந்தும், தான் பயணிக்கவேண்டிய பாதையினைப் புரிந்தும், நீதியைத் தெரிந்துகொண்ட பின்னரும் பயந்த மனதுடன் முன்னேற மனமின்றி முடங்கிப்போனவர்கள் ஏராளம். 'நான் அதற்காக அழைக்கப்பட்டவன்' என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள், ஆனால் அந்த அழைப்பிற்காக தாங்கள் செய்யவேண்டிய செயலையோ மறந்தவர்களாயிருப்பார்கள். விளையாட்டு மைதானத்திற்குள் வீரனாக நுழைந்த பின்னும், ஓட மனதின்றி இலக்கை கண்களாலேயே பார்த்துக்கொண்டவர்களாக இருப்பிடத்திலேயே நின்றுகொண்டிருந்தால் 'இலக்கு நமது கையை வந்தடையாது'; நிச்சயம் நாம் ஓடியாகவேண்டும், போராடியாகவேண்டும். உலகத்தைக் கண்டோ, உடனிருப்போரைக் கண்டோ, உபத்திரவங்களைக் கண்டோ நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை நாம் நிறுத்திவிடக்கூடாது. நீதியின் பாதையில் (ஆத்துமாவுக்கு) ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் (ஆத்துமாவுக்கு) மரணம் இல்லை (நீதி. 12:18).

நீதியின் வழியை அறிந்துகொண்ட பின்னரும், பிரயாண பயம் பலரைப் பிடித்தாட்டுகின்றது. பயண வழி அறிந்தும், புறப்படாமல் ஓரத்திலேயே ஒதுங்கி நின்று உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் மக்களாக நாம் வாழக்கூடாது. வீரன் என்றால் போருக்குப் புறப்படவேண்டுமே. பெற்றோருக்குப் பயந்தும், நண்பர்களுக்குப் பயந்தும், உறவினருக்குப் பயந்தும் நீதியை நிறைவேற்ற பெலனில்லாமற் போனவர்கள் ஏராளம். நீதி என தெரிந்திருந்தும், பயம் அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதே அதற்குக் காரணம்.

யூதர்கள் இயேசுவைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; என்றாலும், யூதர்களை விட்டு முற்றிலும் ஒதுங்கியே வாழ்ந்துவிடவில்லை இயேசு. வரவேண்டிய நேரத்தில் யூதேயாவுக்கு வருவதற்கு அவர் தயங்கவில்லை. லாசரு வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார் இயேசு. அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் (யோவா 11:6-8). யூதேயாவைக் குறித்த பயம் சீஷர்களின் மனதில் நிறைந்திருந்தது. எனவே அவர்கள் தங்கள் ஊழியத்தின் பட்டியலிலிருந்து 'யூதேயா' வையே நீக்கிவிட்டனர். எலியாவைக் கொல்லவேண்டுமென்று யேசபேல் எழுந்துநின்றபோது, ஆண்டவர் சொல்லாமலேயே எலியா ஓடி ஒளித்துக்கொண்டான். தன் பிராணனைக் காக்க அவன் சென்றான், என்றபோதிலும் ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் (1இராஜா. 19:2). இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக்கூடாது. மேலிடத்திலோ, ஆட்சியிலோ யாரோ வந்துவிட்டார்கள் என்று ஓடி ஒளியவேண்டாம். சத்துரு வாசலை மூடும் முன்னதாக நீங்களே வீட்டிற்குள் உட்கார்ந்துகொள்ளவேண்டாம். பயப்படுத்தி நம்மைப் பதுங்கச் செய்வது சத்துருவின் தந்திரமே.

ஆனால், யூதேயாவில் இயேசுவுக்கு லாசரு என்ற நண்பன் உண்டே. அந்த நண்பன் வியாதியாயிருந்த செய்தி வந்தடைந்தபோது, அந்த நண்பனைக் கூட சந்திக்கச் செல்ல இயேசுவை சீஷர்கள் அனுமதிக்க மனதற்றவர்களாயிருந்தார்கள். சீஷர்கள் இயேசுவை நோக்கி: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் (யோவா 11:8). லாசருவை உயிரோடு எழுபப் சென்றார் இயேசு, ஆனால், சீஷர்களோ, 'இயேசுவும் மரித்துவிடுவார், தாங்களும் மரித்துவிடுவோம்' என்ற எண்ணத்துடன் சென்றனர். திதிமு என்னப்பட்ட தோமா மற்ற சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான் (யோவான் 11:16). அந்த நண்பனின் மரணத்தை யூதர்களுக்கு பிதாவை அறிவிக்கச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் இயேசு. கல்லெறியத் தேடினவர்களைக் கூட்டிக்கொண்டு கல்லறைக்குச் சென்றார், யூதேயா இயேசுவின் பிறப்பிடம் (மத். 2:1), அங்கிருக்கும் சொந்த ஜனங்களுக்குக் கூட நற்செய்தியை அறிவிக்க இயலாதபடி பயம் சீஷர்கள் நெஞ்சை அடைத்திருந்தது.

நண்பனாகிய லாசரு மரித்திருந்தாலும், நாம் மரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தனர் சீஷர்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்போரும் உண்டு. ஆத்துமாக்கள் அநேகம் காணப்படும் இடமாயிருந்தாலும், ஆபத்தையே இத்தகையோரின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. பாதுகாப்பான இடத்திலேயே பணியினைத் தொடரலோமே என்ற விருப்பம் அவர்களுக்குள் வேரூன்றிவிடுகின்றது. மிஷனரிகளை அடித்துவிரட்டும் இடத்திற்கு ஊழியம் செய்யப் போகவேண்டுமா? மனிதர்களையே நேசிக்கத் தெரியாத ஜனத்தினர் மத்தியில் ஊழியம் செய்யப் போகவேண்டுமா? அந்த இடத்தில் இருக்கும் ஆத்துமாக்களை எண்ணாமல், ஆபத்துக்களையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இயேசுவை அறியாதவர்கள் ஆயிரமாயிரமாய்க் காணப்பட்டாலும், பாவத்தில் மரணத்தைத் தழுவுவோர் பலஆயிரம் பெருகிக்கொண்டிருந்தாலும், அவர்களது ஆத்தும மரணத்தைத் தடுத்து நிறுத்தும் சுவிசேஷத்தைச் சுமந்து செல்லும் பயமில்லாத ஆவியே ஒரு மனிதனை பணித்தளத்திற்குக் கூட்டிச் செல்லும். வெளியிலே மரணம் என்றே நினைப்போர் நிச்சயம் குகையிலேயேதான் ஒளிந்துகொண்டிருப்பர் என்பது நிச்சயம். ஆத்துமாக்களுக்காக சுவிசேஷத்தை கொடுக்க மாத்திரமல்ல, ஜீவனையும் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள் என்ற அறிவே நம்மை பணிக்களத்திற்குக் கொண்டுசெல்லும். நாம் ஒதுக்கிவைத்திருக்கும் கிராமங்கள் எத்தனை? நாடுகள் எத்தனை? மனிதர்கள் எத்தனை? சீஷர்கள் 'யூதேயாவை' ஒதுக்கிவிட்டதுபோல நாம் எதனையும் ஒதுக்கிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.

அப்போஸ்தலரின் வாழ்க்கையில் நடந்ததுவே இதுவே. இயேசுவின் சீஷர்களைக் கொலை செய்வது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று ஏரோது அறிந்து, யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தான் (அப். 12:2), சபையில் உள்ளவர்களைத் துன்பப்படுத்தினான் (அப். 1:1), தொடர்ந்து பேதுருவையும் ஏரோது பிடித்து சிறையிலே அடைத்தான். எனினும், துன்பப்பட்டுக்கொண்டிருந்த சபையினரின் ஊக்கமான ஜெபம் பேதுருவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரனைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு (ஏரோது) யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான் (அப் 12:19). கொலை செய்யும் ஏரோது இருந்தாலும், இயேசுவை அறிவிக்கவேண்டியது நம் கடமையே.

தேவன் என்னை இந்த ஊழியத்திற்கு அழைத்திருக்கிறாரே, நான் சென்றால் என்னுடைய வாழ்க்கையின் எதிர்காலம் என்னவாகும்? யார் என்னை போஷிப்பார்கள்? யார் எனக்கு பண உதவி செய்வார்கள்? எனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நிலை என்னவாகும் என்ற பல்வேறு காரியங்களை மனதில் கொண்டு பயணிக்க மனதில்லாமல் பீதியடைந்து பயணத்தையே விட்டுவிடுகின்றனர் அழைப்பைப் பெற்றவர்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர் என்பதை மறந்துவிடவேண்டாம். தகப்பன் இளையவனிடத்தில் வந்து நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்று சொன்னபோது, அவன், போகிறேன் ஐயா என்று சொல்லியும் போகவில்லை (மத். 21:30); இந்தக் கூட்டத்தில் நாம் இடம்பெறவேண்டாம்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி