Skip to main content

சில்லரையில் விழுந்த சீஷன்

 

சில்லரையில் விழுந்த சீஷன்

 

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.(மத் 26:14-16)


தேவஜனம் என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம், அவ்வப்போது நமது மனநிலையினை ஆராய்ந்து பார்க்கவேண்டும். எல்லாவற்றையும் துறந்து இயேசுவை பின்பற்றும் ஊழியர்கள் பலர், ஆத்தும ஆதாயத்தினை விட்டு திசை திருப்பி, தனக்கான ஆதாயத்திற்கான பாதையில் வழிமாறிவிடுகின்றனர். அழைப்பினை ஏற்ற அன்று, 'ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்' (பிலி 3:7) என்று தைரியமாகத் அர்ப்பணித்த மனிதர்கள் பலர், நாட்கள் செல்லச் செல்ல நஷ்டமாகத் தாங்கள் எண்ணியவைகளை இலாபமாக நினைக்கத் தொடங்குகிறார்கள். ஓடிப்போ, என்ற அழைப்பைப் பெற்ற லோத்து குடும்பமாக ஓடும்போது, மனைவி பின்னிட்டுத் திரும்பிப் பார்த்ததினால் அங்கேயே உப்புத்தூணாக மாறிவிட்டாளே. ஆவிக்குரிய வாழ்க்கையிலும், அழைப்பின் ஓட்டத்திலும், நஷ்டமென்று நாம் விட்டவைகளை ஆசையோடு எட்டிப் பார்ப்பதும் நம்மை அப்படியே மாற்றிவிடும்.

சீமோன், யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை இயேசு சீஷர்களாக அழைத்தபோது, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் (லூக். 5.11). எல்லாவற்றையும் விற்று, பொருட்களை பணமாக்கி வைத்துக்கொள்வோம், இயேசுவுக்குப் பின்னே சென்றாலும் நமக்கு அது உபயோகப்படும் என்ற எண்ணம் அவர்களில் உண்டாகவில்லை. இயேசுவுக்காகவே தங்கள் வாழ்க்கையை தியாகித்துவிட்டதின் தொடக்கமே அவர்களது அழைப்பு. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, 'நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே' என்று தாங்கள் செய்த தியாகத்தை சொல்லிக்காட்டுகின்றனர், அத்துடன், 'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' (மத். 19:27) என்ற சுய ஆதாயத்தின் வலைக்குள்ளும் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று (லூக் 9:46). யாக்கோபும், யோவானும் இயேசுவினிடத்தில் வந்து: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் (மாற். 10:37) என்று தங்கள் சுய ஆதாயத்தைத் தேடுகின்றனர். பூமியில் இத்தனை காரியங்களை இயேசுவுக்காக நாம் இழந்திருக்கின்றோம், எனவே, மகிமையில் அந்தத் தியாகங்களுக்குப் பதிலாக ஈடுகட்டப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

ஊழியத்தின் பாதையிலும், அர்ப்பணித்தோர் பலரை இத்தகைய சுய ஆதாயம் ஆட்டிப்படைக்கின்றது. தாங்கள் செய்த தியாகத்தையே எப்போதும் சொல்லிச் சொல்லி மற்றோரைக் காட்டிலும் பெரியவனாக தங்களை வேறுபடுத்திக்காட்ட நினைக்கும் மனிதர்களுக்குள்ளே சுய ஆதாயமே புதைந்து கிடக்கின்றது. பூமிக்குரிய வாழ்க்கையில் மேன்மையானவைகளைத் துறந்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் அது ஈடுகட்டப்படவேண்டும் என்று அலையும் மனிதர்களால் நிலையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ இயலாது; சுய ஆதாயம் அவர்களை அவ்வப்போது சோர்ந்துபோகப்பண்ணும். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத் 5:3).

'எனக்கு என்ன கிடைக்கும்' என்கேள்வியே யூதாஸ் வாழ்க்கையிலும் காணப்பட்டது. இயேசுவை அவன் பின்பற்றிக்கொண்டிருந்தபோதிலும், சீஷனாக இருந்தபோதிலும், ஊழியத்தின் பணப்பையும் அவனிடத்திலேயே இருந்தபோதிலும், தன்னுடைய பணப்பையில் ஒன்றுமில்லாத உணர்வு அவனை தொற்றிக்கொண்டது. கையில் எவ்வளவோ ஊழியத்தின் பணம் இருக்கிறது, ஆனால், அதில் எனது சுய வாழ்க்கைக்குரிய பணம் ஒன்றுமில்லையே!என்று கணக்குப் பார்த்த யூதாஸ், தன்னுடைய பணப்பையில் பணத்தைச் சேர்க்க விரும்பினான். எனக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வி வளர்ந்து வளர்ந்து, இயேசுவைக் காட்டிக்கொடுத்தாகிலும் தனக்கு ஏதாகிலும் கிடைக்கட்டும் என்ற நிலைக்கு யூதாசைத் தள்ளியது. மாபெரும் தவற்றை தான் செய்துவிட்டதை பிற்பாடு அவன் உணர்ந்தான். குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் (மத் 27:4) என்று தனது தவற்றை அவன் உணர்ந்தவனாக, கொடுத்தவர்களிடமே சென்று காசைக் கொடுத்தபோதிலும், 'அது உன்பாடு' என்ற பதிலே மிஞ்சியது. அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான் (மத் 27:5). அவரைப் பின்பற்ற தன்னை அர்ப்பணித்த மனிதர்கள், திசை திரும்பி பொருளாசையைச் சார்ந்துபோகும்போது, அவர்களுடைய வாழ்க்கையிலும் இந்நிலையே உண்டாகின்றது.

'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்ட பேதுரு இயேசுவை மறுதலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். அதுபோன்று, இயேசுவிடமிருந்து எனக்கு இனி எதுவும் கிடைக்காது, மனிதர்களிடமிருந்தாவது எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டியதுதான் என்ற எண்ணத்துடன், 'நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?' என்று கேட்ட யூதாஸ் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டான். அவருக்காக அர்ப்பணித்த நாம், எதற்காக அவருக்குப் பின்னே சென்றுகொண்டிருக்கின்றோம். 'ஆதாயம்' என்ற எண்ணம் நமது ஊழியத்தின் ஓட்டத்தை அழித்துவிடுவதுடன், உடனிருப்போரையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரரானதில்லை, என்றபோதிலும் தியாகம் செய்துவிட்டதால் நான் தரித்திரனாகிவிட்டேன் என்று நினைவு கிறிஸ்துவை நாம் இழக்கச்செய்துவிடும். எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வியும், என்னுடைய பெயரில் எவ்வளவு பணம் இருக்கிறது, வருங்காலத்திற்கென எனக்கு என்ன இருக்கிறது போன்ற கேள்விகளும் நம்மை யூதாசைப் போல மாற்றிவிட வலிமை பெற்றவைகள்.

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (பிலி 3:18-20) என்று இவ்வுலகத்தில் ஊழியத்தினால் ஆதாயம் தேடும் மனிதரையும், இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்போரையும் பவுல் எத்தனையாய் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கின்றார். நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்ளூ எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2தீமோ 4:7,8) என்ற எண்ணமே நமது சிந்தைதனை நிரப்பட்டும். 'கிரீடம் தந்தால் நான் ஓடுகிறேன்' என்று கிரீடத்திற்காக ஓடுபவர்கள் அல்ல நாம், ஓட்டத்தை உண்மையாய் முடித்தால் கிரீடம் நிச்சயமாக நமது தலையில் சூடப்படும்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி