Skip to main content

நீங்களே சாட்சிகள்

நீங்களே சாட்சிகள்


அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்து கொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். (யோசு 24:22)


இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவரது ரத்தத்தினால் கழுவப்பட்டு, பாவங்களைக் கழைந்து பரிசுத்த வாழ்வுக்குள் நுழைந்துள்ள நாம் ஒவ்வொருவரும் நாமே சாட்சிகள் என்பதை ஞாபகத்தில் கொள்ளல் வேண்டும். எவரோ ஒருவருடைய வற்புறுத்துதலினால் வழி மாறியவர்கள் அல்ல நாம். 'நானே, வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்' என்ற இயேசுவின் வாய்மொழிக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். நீங்கள் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டீர்கள்? என்ற கேள்வி நமக்கு முன் வைக்கப்படுமென்றால், நமது பிரதி பதில் என்னவாயிருக்கும்? இயேசுவை நாம் எப்படி தெரிந்கொண்டாம். இயேசு நம்முடைய வாழ்க்கையில், வர நாம் இடம் கொடுத்தோமா அல்லது யாராலோ நம்முடைய வாழ்க்கையில் திணிக்கப்பட்டாரா? மெய்யான தெய்வம் யார்? இயேசு தெய்வங்களுள் ஒரு தெய்வமா? பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுடன் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த நமக்கு சகோதரர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ இயேசு அடையாளம் காட்டப்பட்டார். யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவா 1:29) என்று தன்னைச் சுற்றி நின்றவர்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்தான். யோவான் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேருடன் நின்றுகொண்டிருந்தபோது, 'இதோ இதோ, தேவ ஆட்டுக்குட்டி' (யோவான் 1:36) என்று இயேசுவை அடையாளம் காண்பித்தான். ஊழியர்கள் யோவானைப் போல இயேசுவை அடையாளம் காட்டுபவர்களே. என்றபோதிலும், 'இவரே, இவர் ஒருவரே இனி என் வாழ்க்கையின் தெய்வம், அனைத்திற்கும் அச்சாரம்' என்று அவரை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு நம்முடையது. மெய்யான தெய்வம் என்ற உணர்வுள்ள இருதயத்தோடு, உள்ளத்தில் ஏற்றுக்கொள்வது நம்முடைய பொறுப்புதான். 'நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கு நாமேதான் சாட்சிகள்'. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3:20) என்ற இயேசுவின் தட்டும் சத்தத்திற்கு செவிகொடுத்து, திறந்ததால் இன்று அவருடன் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கின்றோம். திறந்தது யார்? நாம்தானே!

இஸ்ரவேல் மக்கள் இருமனதால் இழுப்புண்டு, தேவனையும், தேவர்களையும் சேவித்துக்கொண்டிருந்தார்கள். தேவ மனிதனான யோசுவா அவர்களை நடத்திக்கொண்டு சென்றபோதிலும், அவர்களோ அந்நிய தேவர்களைச் சேவித்துக்கொண்டிருந்தார்கள். வெளிப்படையாக யோசுவாவின் தேவன், உள்ளாகவோ எகிப்தின் தேவர்கள். இஸ்ரவேல் ஜனங்களின் இத்தகைய வாழ்க்கை யோசுவாவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. 'கர்த்தரையே சேவிப்போம்' என்று தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் இருக்கிற வைராக்கியம், தன்னோடு உடன் இருக்கும் ஜனங்களுக்கு இல்லாததைக் கண்டபோது, யோசுவா மனம் நொந்தவனாக அவர்களை நோக்கி, 'நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்' (யோசு 24:14) என்று அவர்களை எச்சரித்தான். யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை முடிவெடுக்க நெருக்கினான். யோசுவாவின் மனதைப் புரிந்துகொண்ட, யோசுவாவின் வருத்தத்தைப் புரிந்துகொண்ட ஜனங்களுக்கோ உண்மையாக மனம் திரும்ப மனதில்லை. அந்நிய தேவர்களை தங்கள் நடுவிலே வைத்துக்கொண்டே (யோசு. 24:23), 'நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்' (யோசு. 24:18) என்றார்கள். ஆனால், யோசுவாவோ அவர்களது வார்த்தைகளில் திருப்தியாகிவிடவில்லை. கர்த்தரை விட்டுவிட்டு அந்நிய தேவர்களை சேவித்தால், நன்மை செய்த தேவன் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் (யோசு. 24:20) என்று யோசுவா அவர்களை எச்சரித்தான். 'நாங்கள் கர்த்தரையே சேவிப்போம்' (யோசு. 24:21) என்று மீண்டும் ஜனங்கள் உறுதிப்படக் கூறியபோது, 'நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே சாட்சிகள்' என்றான் யோசுவா. யோசுவாவின் குணத்தைக் கொண்ட தலைவர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் இந்நாட்களில் எழும்பட்டுமே. தேவனுக்கு விரோதமான பலவிதமான செயல்களைச் செய்துகொண்டிருந்தபோதிலும், 'ஆலயத்திற்கு வருகிறார்களே அது போதும்' 'காணிக்கை கொடுக்கிறார்களே அது போதும்' என்று திருப்தியடைகிறவர்களாக, ஜனங்களின் வாழ்க்கையைக் குறித்து கவலையற்றிருக்கின்ற போதகர்கள் உண்டு. தேவனுக்கு விரோதமானவைகளை அறுத்தெறிந்து, தேவனை மாத்திரமே தெரிந்துகொள்ளும்படி போதகத்தினாலும், ஆலோசனைகளினாலும், எச்சரிப்பினாலும் ஜனங்களை நெருக்குவோராக யோசுவாவைப் போல நாமும் மாறுவோமே.

நமக்கு நாமே சாட்சிகள் என்பதில் நிச்சயம் இருக்குமென்றால், மற்றவர்களுக்கும் முன்பாக சாட்சிகளாக தேவன் நம்மை உயர்த்துவார். இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் என்று தைரியமாக தன்னுடைய சாட்சியை சொல்பவர்களே, மற்றவர்களை சாட்சிகளாக மாற்றுபவர்கள். ஆலயத்திற்குச் சென்றும், கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்திருந்தும் 'இரட்சிக்கப்பட்டேன்' என்றோ 'நான் தேவனுடைய பிள்ளை' என்றோ தைரியமாகச் சொல்லமுடியாமல் இருக்கும் மக்கள் அநேகர் உண்டு. 'நாங்களே சாட்சிகள்' என்று சொல்லும் ஜனங்கள் பெருகட்டும். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம் (1யோவா 4:14) என்று எழுதுகின்றான் யோவான். அப்படியே பேதுருவும், யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம் (அப் 10:39). இயேசுவை தேவன் எழுப்பினார்; ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் என்றான் (அப். 2:32; 3:15). ஆதி அப்போஸ்தலர்களும், இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் (அப். 5:32) என்றே முழக்கமிட்டனர். பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் இயேசு (அப் 1:8). 'நாங்கள் சாட்சிகள்' என்று சொல்லுவோரையே தேவன் 'தனது சாட்சிகளாக' மாற்றிக்கொள்கின்றார்.

நம்மைத் தொடர்கின்ற ஜனங்கள் எந்நிலையில் இருக்கின்றனர் என்பதைக் கண்காணிப்பது அவசியமே. மாறுபாடான தங்கள் கிரியைகளினாலும், செயல்களினாலும் நன்மை பெறவேண்டிய தேவனிடமிருந்து தீமை பெற்றுக்கொண்டிருப்பதற்கான காரணம் அறியாமல், கர்த்தர் மேலேயே குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். தலைவனும், தலைவனின் குடும்பமும் தேவனையே சார்ந்து நிற்க, தொடர்ந்து வரும் மக்கள் தேவனுக்குத் தூரமாய் நடந்துவரக்கூடாதே; கவனமுடன் இருப்போம்; யோசுவாவைப் போல நம்மையும், நம்மைச் சூழ்ந்தோரையும் பாதுகாத்துக்கொள்ளுவோம்.










 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி