Skip to main content

சொல்வதைச் செய்யுங்கள்

 

சொல்வதைச் செய்யுங்கள்

 

என்றோ தேவன் பேசியதை மாத்திரம் மனதில் கொண்டவர்களாக, இன்று நமக்கு முன்னே நின்று பேசும் தேவனது வார்த்தைகளை உணராமல் உதறிவிடும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாது. அவர் தனது வார்த்தையில் மாறுபடுகிறவரல்ல, ஆனால், நமது வாழ்க்கையை அவ்வப்போது மாற்றியமைக்கிறவர். இயேசு தனது சீஷர்களை அனுப்பியபோது, 'புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். பணப்பையையும், சாமான் பையையும், பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம் (லூக் 10:4) என்று கட்டளையிட்டார். உங்களை ஏற்றுக்கொள்ளும் வீட்டிலே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான், வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் (லூக். 10:4,7,8) என்றார். பணப்பையையும், சாமான் பையையும், பாதரட்சைகளையும் வைத்திருந்த சீஷர்களுக்கு அவைகளை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. நமக்குத் தேவையானவைகளை தேவையற்றவைகள் என்று இயேசு சொல்லுகிறாரே, தேவைகள் எப்படி சந்திக்கப்படும் என்ற சந்தேகம் அவர்களுக்குள் உண்டாகியிருக்கலாம். சிலர், கட்டாயத்தின் பேரில் அவைகளை விட்டு வந்திருக்கலாம், சிலர் எப்போதாவது நமக்கு மீண்டும் உதவும் என்று பத்திரப்படுத்தி வைத்துப் போயிருக்கலாம். எனினும், எலியாவுக்கு காகத்தையும், ஆகாரத்தையும், விதவையையும், வீட்டையும் ஆயத்தப்படுத்தியிருந்த தேவன், கட்டளையின்படி புறப்பட்டுச் சென்ற சீஷர்களுக்கான தங்குமிடத்தையும், போஜனத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார் என்பதை ஊழியப்பாதையின்போது அவர்கள் உணர்ந்தார்கள்.

என்றாலும், இயேசுவின் சிலுவை மரணம் சமீபித்தபோது, அவர் தனது சீஷர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும், சாமான்பையும், பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்று கேட்டார்; அதற்கு அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். இப்பொழுதோ, பணப்பையும், சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங் காலம் வந்திருக்கிறது என்றார் (லூக் 22:36,37).

இதுவரை நான் வேண்டாம் என்று சொன்னவைகள், இனி உங்களுக்கு வேண்டும் என்று இயேசு சொன்னபோது, 'நல்லவேளை பணப்பையையும், சாமான் பையையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தோம்' என்று பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்கள் அவைகளை உடனே எடுத்திருக்கலாம். ஆனால், 'பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்' என்றார் இயேசு. பணம் இல்லையென்றாலும், பட்டயம் இருக்கவேண்டும் என்றார் இயேசு. யார் யாருக்கெல்லாம் பட்டயம் இல்லையோ, அவர்கள் அனைவரும் தங்கள் வஸ்திரத்தை விற்றாகிலும் ஒரு பட்டயத்தை கொள்ளுங்கள் என்றார். ஒவ்வொருவரின் கையிலும் பட்டம் இருக்கவேண்டும் என்பதையே இயேசு குறிப்பிட்டுச் சொன்னார். ஆனால், சீஷர்களாலோ அதனைப் புரிந்துகொள்ள இயலாதிருந்தது. 'ஒவ்வொருவருக்கும் பட்டயம் இருக்கவேண்டும்' என்பதைப் புரிந்துகொள்ளாத சீஷர்களோ இயேசுவை நோக்கி: 'ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயங்கள் இருக்கின்றன' என்றார்கள் (லூக். 22:38). அப்பொழுது இயேசு 'போதும்' என்றார். தங்கள் வஸ்திரங்களை விற்று பட்டயத்தை வாங்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தது. இருக்கிறதை வைத்து சமாளித்துக்கொள்ளலாமே, இரண்டு இருக்கிறது இது போதுமே, உண்டானதை விற்று இன்னொன்றைக் கொள்ளவேண்டுமா? ஒவ்வொருவருக்கும் ஒன்று எதற்கு? அனைவருக்கும் இரண்டு போதும் என்று அவர்கள் நினைத்தார்கள். தேவையை அறிந்து இயேசு சொல்லும் ஆலோசனையினைப் புரிந்துகொள்ளாமல், போதாதவைகளோடிருந்த அவர்களுக்கு 'போதும்' என்ற பதில் கிடைத்தது. தேவனுடைய காரியங்களை நாம் குறைத்து மதிப்பிடுகின்றோமா? அவருடைய எதிர்பார்ப்புகள் அல்ல, நம்முடைய எதிர்பார்ப்பினாலே அவருக்கு எதிர்த்து நிற்கிறோமா?

எலிசா இஸ்ரவேல் ராஜாவை நோக்கி: வில்லையும் அம்புகளையும் பிடியும், உம்முடைய கையை வில்லின் மேல் வையும், கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும், எய்யும் என்றபோது, அவன் எய்தான். பின்பு அம்புகளைப் பிடியும், தரையிலே அடியும் என்றபோது, மூன்றுதரம் அடித்து நின்றான் (2 இராஜா. 13:15-18). இஸ்ரவேலின் ராஜா ஐந்து அல்லது ஆறுவிசயாகிலும் அம்பை தரையில் அடிப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த எலிசாவுக்கோ, ராஜாவின் செயல் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அப்பொழுது எலிசா அவன் மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான் (2இரா 13:19). எதற்கு ஒப்புவமையாக எதைச் செய்கிறோம் என்ற புரிதல் இல்லாததினால், அதிகமாகச் செய்யவேண்டியதை குறைவாகச் செய்து, எதிரிரியை தீர முடியடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டான் இஸ்ரவேலின் ராஜா.

தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான் (2இரா 6:1,2). ஆனால், அவர்களுள் ஒருவன் கோடரியை இரவலாக வாங்கிச் சென்றிருந்தான். இரவலாக அவன் வாங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை, 'ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரம் வெட்டவேண்டும்' என்பதுதான் அவர்களது நோக்கம், எனவே, யாராவது ஒருவர் உத்திரத்தை வெட்டிய பின்னர், அவர்களது கோடரியை வாங்கி இவன் வெட்டியிருக்கலாம். தங்களுக்குள் ஒருவர் கோடரியை ஒருவருக்குக் கொடுத்து உதவியிருக்கலாம்; ஆனால், அவர்களோ, ஒவ்வொருவரும் வெட்டவேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கோடரி தேவை என்ற சிந்தைக்குள் சிக்கியிருந்தனர்; இதுவே, ஒருவன் இரவல் வாங்க காரணமாயிற்று. ஆனால், இயேசுவோ, சீடர்களை இரவல் வாங்கச் சொல்லவில்லை, வஸ்திரத்தையாகிலும் விற்று வாங்கும்படிச் சொன்னார். இன்றைக்கும் கோடரியை இரவல் வாங்கிவிட்டு, பட்டயம் வாங்காமல் வாழும் ஜனங்கள் ஏராளம். குடும்பத்திற்கு, எதிர்கால்த்திற்கு, பிள்ளைகளுக்கு என சொத்து சேர்க்கவும், பொருட்களை சவதரிக்கவும் பலர் கோடரிகளை இரவலாகவும் வாங்கத் தயங்குவதில்லை; கோடரியை இரவலாக வாங்குவோரே, உங்களிடத்தில் பட்டயம் உண்டா?

பட்டயத்தை எதற்கு எடுக்கச் சொன்னார் என்பதின் காரணத்தையும் சீஷர்கள் அப்போது அறியாதிருந்தார்கள். யூதாஸ் முத்தமிட்டு அவரைக் காட்டிக்கொடுத்தபோது, இயேசுவோடு கூட இருந்தவர்களில் ஒருவன் கை நீட்டி தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள் என்றார் (மத். 26:51,52). நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? என்று பிதாவின் பெலத்தையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அடுத்தவரை வெட்டும் பட்டயத்தை உறையில் போட்டுவிட்டு, வேதவாக்கியங்கள் நிறைவேறக் காத்திருங்கள் என்றே இயேசு அவர்களுக்குப் போதித்தார் (மத். 26:53,54). சீஷர்களுடைய மாம்ச சிந்தை, மாம்ச கோபம் பட்டயத்தோடு ஒட்டிக்கொண்டிருந்ததால், பகை என்ற உணர்வு வந்தவுடன் பட்டயம் உறையை விட்டு வெளியே வந்துவிட்டது. தேவனுடைய எதிர்பார்ப்பு என்ன? நம்முடைய செயல்பாடுகள் என்ன? எதற்காக இதைச் செய்யச் சொன்னார் என்ற அறிவு நமக்கு இராவிடில், அதைக்கொண்ட அவருக்கு விரோதமாக நாம் சென்றுவிடுவோம். பிதாவின் பெலன் எனக்கு இருக்கிறது நான் அதனை உபயோகிக்கவில்லையே, அதுபோல உறையிலே பட்டயம் இருக்கிறது அது எதிரிக்காக உபயோகிப்பதற்கல்ல என்பதை இயேசு எடுத்துச் சொன்னார். உங்கள் உடலில் (உறையில்) உள்ள குணங்களை, சுபாவங்களை எங்கு உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு உங்களுக்கு உண்டா? சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் (மத் 10:16); ஆனால், சர்ப்பம் யாரைக் கடிக்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும்ளூ இல்லையெனில், சுவிசேஷம் அறிவிக்கவேண்டிய இடத்தில் விஷம் ஏறிவிடும். 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி