Skip to main content

நிறையும், குறையும்

 

நிறையும், குறையும்

 

நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவினைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும், நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் எத்தகைய விரிசலோ, முறிவோ, பிளவோ ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நாம் கரிசனையாயிருக்கின்றோம். பாவங்களை விட்டு விலகி பரிசுத்த வாழ்க்கையில் நுழைந்து வாழ்கின்றோம். நம்மையும் தேவனையும் பாவமோ, மீறுதலோ பிரித்துவிடாதபடி கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். தேவனுடனான உறவைக் காத்துக்கொள்ள தேவனுக்குப் பிரியமானவைகளையே செய்ய முற்படுவதும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை ஒவ்வொருநாளும் அறிய முற்படுவதும், அவருடைய சமூகத்தை உணரத் துடிப்பதும், அவருடைய சத்தத்தைக் கேட்க ஆவல் கொள்வதும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தனையாய் தேவனை மதிக்கும் நாம், தேவனுக்குச் செய்யவேண்டியவைகளையெல்லாம் அன்றாடம் செய்துகொண்டிருக்கும் நாம், பிறருக்குச் செய்யவேண்டிய பல காரியங்களை மறந்துவிட்டால் தேவனுக்கு முன்பாக குறைவுபட்டவர்களாகக் காட்சியளியளிப்போம்.

இயேசுவைத் தேடிவந்த தலைவனின் நிலை இதுவே. நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? (லூக். 18:18) என்ற கேள்வியோடு இயேசுவை சந்தித்தான் அவன். தேவனுடைய தேவையும், வேதத்தின் சட்டங்களுமே அவனது கண்களுக்கு முன் நின்றது. நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கு இவ்விரண்டிலும் தேர்ச்சி பெற்றால் போதும் என்றே அவன் நினைத்துக்கொண்டிருந்தான். தேவனுக்கு நான் செய்யவேண்டியவைகளையெல்லாம் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றேன், ஆனால் இன்னும் தேவனுக்குச் செய்யவேண்டியவற்றில் குறைவு ஏதாகிலும் இருக்கக்கூடுமோ என்ற மனநிலை அவனுக்குள் காணப்பட்டது. நான் அறிந்த அவண்ணம், நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிற வண்ணம் தேவனுக்குச் செய்யவேண்டிய அத்தனையையும் நான் செய்துகொண்டிருக்கிறேன்; எனினும், ஏதாகிலும் விடுபட்டிருக்கக் கூடுமோ? அல்லது ஏதாகிலும் அதிகமாக அவர் தன்னிடத்தில் எதிர்பார்க்கக்கூடுமோ? அவருக்குச் செய்யவேண்டியதில் நான் ஒன்றும் குறைவு வைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அந்தத் தலைவன் இயேசுவைச் சந்தித்தான். ஆண்டவரே! இன்னும் ஏதாகிலும் உமக்குச் செய்யவேண்டியதிருந்தால் எனக்குச் சொல்லிவிடும், உமக்கு நான் என்னவேண்டுமென்றாலும் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன் என்பதைத்தான் அவனது வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

இயேசு நோக்கி: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்று இயேசு அவனிடத்தில் கேட்டபோது, அவனோ சந்தோஷமாக, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் (லூக் 18:20,21) தனக்குச் செய்கிறதைச் அவன் சரியாகச் செய்துகொண்டிருக்கிறான் என்பதை இயேசு அறிந்திருந்தார்; அதேவேளையில், பிற மனிதருக்குச் செய்யவேண்டியதை அவன் செய்யாமலிருக்கிறான் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவே, அவனை நோக்கி: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார் (லூக் 18:22). தரித்திரருக்குக் கொடுப்பது இயேசுவுக்குக் கொடுப்பதே என்பதைப் புரிந்துகொள்ளாத அந்த ஐசுவரிமுள்ள தலைவன், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது 'துக்கமடைந்தான்' (லூக். 18:33). அவனது துக்கத்தைக் கண்ட இயேசு, ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது (லூக் 18:24) என்றார். 'உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு என்றார் இயேசு. எல்லாவற்றையும் விற்றுவிட்டால், இவனும் தரித்திரரில் ஒருவனாகிவிடுவானல்லவா? இவனுக்கென்று எதுவும் இருக்காதே! அப்பொழுது இயேசுவைப் பின்பற்றுவதில் தடைகளும் இருக்காது. ஊழியத்தின் தொடக்கத்தில் இயேசு அழைத்த சீஷர்கள் அப்படித்தானே செய்தார்கள். அவர்கள் அப்படிச் செய்ததால்தான் இயேசுவுடன் கூட எங்கும் செல்வதில் அவர்களுக்கு தடையில்லாதிருந்தது. இத்தகைய தடைகளை அகற்றாமலேயே பலர் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கிவிடுகின்றனர். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் (மத் 8:20). தலைசாய்க்கும் இடத்திலேயே இன்று பலர் தங்கிவிடுகின்றனர், நாட்கள் செல்லச் செல்லத் தூங்கியும்விடுகின்றனர். நித்தியஜீவனை நோக்கிய அவர்களது பயணம், ஐசுவரியத்துடனேயே அழிந்துவிடுகின்றது.

ஆண்டவரே, உமக்கு எதுவேண்டுமானாலும் கேளும் தருகிறேன், உமக்காக என்ன செய்யவேண்டுமென்றாலும் சொல்லும் செய்கிறேன், உமக்காகத்தான் சிறுவயதுமுதல் இதுவரை நான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்; ஆனால், அடுத்தவனுக்குக் கொடுக்க நான் ஆயத்தமாக இல்லை; இதுதான் அந்த தலைவனின் நிலை. காணிக்கைப் பெட்டியில் நூறு ரூபாய் போடுவதையும், ஆலயத்திற்கு பிச்சைக்காரர்களுக்கு ஒரு ரூபாய் போவதையும் வாழ்க்கையின் வழக்கமாக்கிவிட்டான் சத்துரு. தேவனுக்குச் செய்ய வேண்டிய அத்தனையையும் சரியாகச் செய்துகொண்டிருந்தாலும், நித்தியஜீவனுக்குள் நாம் பிரவேசிக்கவேண்டுமென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கும் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும்.

இன்றைய ஐசுவரியவான்கள் பலரின் நிலைப்பாடும் இதுவே. தேவனுக்காக, சபைக்காக, ஊழியத்திற்காக, ஊழியக்காரர்களுக்காக அள்ளிக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண் எதிரே, பசியோடு வாடுகின்ற மக்களை, வறுமையில் உழலுகின்ற மக்களைக் காண மறுக்கின்றனர். தேவனுக்குச் செய்வதே பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்கும் என்ற ஒரே எண்ணத்தோடேயே வாழ்பவர்கள் இவர்கள். இன்றைய நாட்களில் பிரசங்கங்களும் அப்படியேதான் செய்யப்பட்டுவருகின்றன. தங்களுக்கும், தங்கள் ஊழியத்திற்கும் தாருங்கள் என்றே பிரசங்கிப்போர் அதிகரித்துவிட்டனர்; தரித்திரருக்குக் கொடுங்கள் என்று அறைகூவல் விடுப்போர் எங்கே? எங்களுக்குக் கொடுத்தது போதும்; வறியோருக்குக் கொடுங்கள் என்று சொல்லுவோர் எங்கே? எங்களது ஊழியத்திற்குக் கொடுத்தால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார், உங்கள் தொழில் வளம் பெறும், உங்கள் நோய் தீரும், உங்கள் கடன் தொல்லை மாறும், அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி எங்களுக்கே தாருங்கள், எங்களுக்கே தாருங்கள் என்றே பல ஊழியர்களின் பிரசங்கங்கள் பீடங்களில் தொனித்துக்கொண்டிருக்கின்றன. தரித்திரருக்குக் கொடுக்காத ஜனங்களின் குறைகளை கூவி அறிவிக்காமல், இன்னும் எங்கள் ஊழியத்தில் குறையிருக்கிறது, பணத்தேவை இருக்கிறது, எனவே, எங்களுக்கே கொடுங்கள் என்று பிற மனிதர்களின் தேவையினை கொடுப்போர் காணக்கூடாதபடி ஊழியர்கள் மறக்கடித்துவிடுகின்றனர். அவர்களுடைய குறை ஊழியர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை, தங்களின் குறையே ஊழியருக்கு எப்போதும் முன் நிற்கிறது. உங்களுடையதை விற்று எங்களுக்குத் தாருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்; பரலோகத்திலும் உங்கள் பெலன் மிகுதியாயிருக்கும் என்று பிரசங்கிக்கும் ஊழியர்கள் அநேகர்.

ஊழியங்களுக்குக் கொடுத்துக் கொடுத்து நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள், தரித்திரரை மறந்துபோனதினால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயலாமல் ஏமாற்றமடைவதைத்தான் இயேசு போதித்தார். அடுத்தவனுக்குக் கொடுக்க மனமில்லாத ஐசுவரியவான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்றார் (லூக். 18:24). பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் (மத் 25:36) என்று தரித்திரருக்குக் கொடுத்தவர்களைப் பார்த்தல்லவா கர்த்தர் சொல்லுவார்.

ஊழியத்திற்கும், ஊழியக்காரனுக்கும் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுக்கும் ஜனங்களே, பிற தரித்திர நிலையில் உள்ள மனிதர்களுக்கு, உணவிற்கு வழியில்லாதோர்க்கு, அதே தொகையினைக் கொடுக்க உங்களால் கூடுமா? தேவனுக்குக் கொடுப்பதையே தெரிந்துகொண்டு, மனிதருக்குக் கொடுப்பதை மறந்துவிட்டவர்கள் நீங்கள்; உங்கள் மனந்திரும்புதலுக்காக தேவன் காத்துக்கொண்டிருக்கிறார். நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே (நீதி 3:27).

தேவனை நினைக்கும் நீங்கள், மனிதர்களை மறந்துவிடக்கூடாது. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி