Skip to main content

பழியில்லை ஆனால் பதிலுண்டா?

 பழியில்லை ஆனால் பதிலுண்டா?



'கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்' (ரோமர் 12:18) என்கிறார் கர்த்தர். 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு' (மத் 5:39) என்று இயேசு போதித்தார். ஆனால், மனிதர்களாகிய நாமோ பல நேரங்களில் இவ்விடத்தில் தடுமாறுகின்றோம். தேவனுக்குப் பதிலாக, நம்மை விரோதிக்கிறவர்களை நாமே முண்டியடித்துக்கொண்டு எதிர்க்கிறோம்; இது நம்முடைய செயல் அல்லவே. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் (யாத். 14:14) என்பதுதானே வசனம் போதிக்கும் விதம். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும் (யாத். 21:23,24) என்ற நியாயப்பிரமாணத்தினின்று, மனிதர்களாகிய நம்மை இயேசு விடுதலையாக்கிய பின்னரும், விடுதலையாக்கப்பட்ட பலர் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்றும், அபிஷேகம் பெற்றிருக்கிறேன் என்றும், அந்நியபாஷை பேசுகிறேன் என்றும் சொல்லிக்கொண்டு, இன்னும் இந்தச் சட்டத்திற்குள்ளேயே சிக்கிக்கிடக்கின்றனர். நமக்கு விரோதமாய் எழும்பும் மக்களுக்கு விரோதமாக நாம் எழும்பிவிடக்கூடாது. மனிதர்கள் நமக்கு என்னென்ன தீமைகளைச் செய்தாலும், பதில் வினையாய் அவர்களுக்கு ஏதாகிலும் செய்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை சத்துருவே நம்முடைய மாம்சத்தில் விதைக்கிறான்; எனவே எச்சரிக்கையாயிருப்போம். தங்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்களுக்கு பதில் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய உடன்படிக்கையின் மதிலை உடைத்துக்கொண்டு ஓடும் மக்கள் உண்டு. நாம் பதில் செய்யக்கூடாத இடங்களில், நம்மை பதில் செய்யத் தூண்டும் சத்துருவின் எத்தனத்திற்கு நாம் விலைபோய்விடக்கூடாது. இயேசுவை ஏற்றுக்கொண்ட நம்முடைய வாழ்க்கையில் பழி இல்லை.

சத்தியத்தின் ஒருபுறத்தில் நின்றுகொண்டு, மறுபுறத்திற்குப் பயணித்துவிடாதபடி பல நேரங்களில் சத்துரு தடுத்துவிகின்றான். 'இதைச் செய்யக்கூடாது' என்ற அறிவு மாத்திரமல்ல, எதைச் செய்யவேண்டும் என்ற அறிவும் அவசியம்லவா. ஒருபுறத்தைக் கடைபிடித்துவிட்டதினால், கீழ்ப்படிந்துவிட்டோம் என்று அர்த்தமாகிவிடாதே; மறுபுறத்திலோ நாம் கீழ்ப்படியக்கூடாதவர்களாக மரித்துக்கிடக்கின்றோமே. இத்தகைய நிலையிலிருந்து தேவன் நம்மைக் காப்பாராக. எதிர்ப்போரை பழிவாங்கக்கூடாதென்றால், அதற்குப் பதிலாக நாம் என்ன செய்யவேண்டும் என்றும் இயேசு போதித்தாரே. 'சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்' (மத். 5:44) என்பதுதானே இயேசுவின் போதனை. பழிவாங்காமல் நாம் இருந்தாலும், அதற்குப் பதிலாக இந்தப் பதிலைச் செய்யமுடிகின்றதா? பழிவாங்காத நாம் இப்படி பதிற்செய்யாமற் போனால், இயேசுவின் போதனைக்குத் தூரமாயிருப்போமல்லவா. 'ஆண்டவரே, அவர்களை சந்தியும்' என்று ஜெபிக்கும் மக்கள் அநேகர்; ஆனால், ஆண்டவரே அவர்களை ஆசீர்வதியும் என்று ஜெபிக்கும் மக்கள் சிலர்தானே. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, உறவினர் மத்தியிலோ, அலுவலகத்திலோ, மற்றெந்த இடங்களிலுமோ நமக்கு எதிரிடையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, இத்தகைய பதிலை நாம் செய்யத் தவறவேண்டாம். அப்படிச் செய்யாமற்போனால், அவர்களைக் குறித்த விரோதம் நமது மனதிலே குடிகொண்டிருக்கும், அது குரோதமாகி நம்மை குழிக்குள் தள்ளிவிடுமல்லவா; கசப்பின் எட்டி அவ்வப்போது எழும்பிக்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்டவைகளை நமது இருதயத்தில் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டிருக்வேண்டும் என்றே சத்துரு நம்மை சத்துருக்களுக்குப் பதிற்செய்யவிடுகிறதில்லை. இந்தப் பதிலை செய்யவிடாதபடி இன்று அநேக ஆவிக்குரியவர்களை மதிலாக சத்துரு மறித்து நிற்கிறானே. நமக்கு விரோதமாகப் பேசித் திரிகிறவர்கள், நம்மை தவறாக அடையாளங் காட்டிக்கொடுத்தலைகிறவர்கள், நம்மை அவமானப்படுத்துகிறவர்கள், நிந்திக்கிறவர்கள், நம்மை ஒதுக்கிவைக்கின்றவர்கள் இவர்கள் அனைவரும் பழிவாங்கப்படவேண்டியவர்கள் அல்ல, பதில் செய்யப்படவேண்டியவர்கள். இப்படிச் செய்தால் மாத்திரமே நம்முடைய ஆத்துமாவை ஆவிக்குரியதாக நாம் காத்துக்கொள்ள முடியும்.

ஒருபுறத்திலே பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆவிக்குரிய மதிலைத் தாண்டி ஓடிவிடும் கூட்டம்; மறுபுறத்திலோ, அவர்களுக்கு இயேசு சொன்ன வண்ணம் பதிற்செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் கூட்டம். இவ்விரண்டு கூட்டத்தாரில் நாம் எந்த வகையினைச் சேர்ந்தவர்கள்; ஆராய்ந்து பார்ப்போம்.

ஒரு சீஷனான யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு சீஷனான பேதுரு இயேசுவை பிடிக்கவந்தவர்களுக்கு விரோதமாகப் பட்டயத்தை உருவினான். அப்பொழுது, இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் (மத் 26:52-54) என்றார். எதிகளைக் கொண்டும் நிறைவேற்றப்படவேண்டிய காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் எழுதப்பட்டிருக்கலாம்; அப்படியென்றால், நம்முடைய பட்டயம் எதிரிக்கு விரோதமாக அல்ல, 'இப்படி நடக்கவேண்டும்' என்று நம்முடைய வாழ்க்கையைக் குறித்து தேவனால் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு விரோதமாகவே காணப்படும். நாம் எதிரியை அல்ல, தேவனால் எழுதியவைகளையே வெட்டிவிடுவோம்; அது நம்முடைய வாழ்க்கையில் நிகழாமலேயே போய்விடும். எதிரிகளைக் காணும்போது, சாத்தானே அநேகருடைய கண்களுக்குத் தென்படுகின்றான். எதிரிகளைக் காணும்போது, தேவனைக் காணும் சுபாவம் நம்மில் உருவாகட்டுமே. ஜனங்கள் மூர்க்கமடைந்து, ஸ்தேவானைப் பார்த்துப் பல்லைக் கடித்தபோது, அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் (அப் 7:54-56) என்று சொன்ன பெலன் நமக்கும் உண்டாகட்டும். பழிவாங்க அல்ல, நாம் பதில் செய்ய அழைக்கப்பட்டவர்கள். பழிவாங்குதல் அவருடையது, பதிற்செய்தல் நம்முடையது. நம்முடையதை நாம் செய்வோம்; அவருடையதை அவர் செய்வார்.











Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி