Skip to main content

இளைப்பாறுதல் எப்போது?

இளைப்பாறுதல் எப்போது?

 

ஆறுதலும் அத்துடன் இளைப்பாறுதலும் வாழ்க்கையில் அனைவரும் ஆசிப்பது. சரீரத்தைத் தாக்கும் பெலவீனம், எதிர்காலத்தைக் குறித்த மற்றும் பிள்ளைகளைக் பற்றிய கவலை, இவை அனைத்தும் அவ்வப்போது நமது சிந்தையைக் கவ்விக்கொள்ள, அதற்கு விடையறிய பெலனில்லாமல், அவைகளைக் குறித்தே யோசித்து யோசித்து சோர்வுக்குள் போய்ச் சேர்ந்துவிடுகிறோம். இவ்வுலகத்தில் நாம் விரும்புவது நமது வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அதுவே இளைப்பாறுதல் என்பதுதான் நம்முடைய ஒரே கணக்கு. எனினும், இளைப்பாறுதல் இப்படித்தான் கிடைக்கவேண்டும் என்ற வசனத்தின்படியான வாழ்க்கை முறையே நம்மை சரியான இளைப்பாறுதலைதை; தரும்.

இடம் மாறினால் கிடைக்குமா இளைப்பாறுதல்?

தனது வாழ்க்கையில் இளைப்பாறுதலைத் தேடிய தாவீது, 'ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்' (சங். 55:6) என்ற எதிர்பார்ப்போடு பாடுகிறான். இடம் விட்டு இடம் பெயர்வதால், இளைப்பாறுதல் உண்டாகிவிடுமோ? ஒடுக்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்: எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப் போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லை என்கிறாரே (ஏசா.23:12). இளைப்பாறுதலுக்கு இடையூறாக இருக்கும் அடிப்படைக் காரணத்தை அலசி ஆராயாமல், அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தால் இளைப்பாறுதல் ஒருபோதும் நம்மைத் தேடிவராது மாறாக மேலும் இளைப்படைந்தவர்களாகவே நம்மை மாற்றிவிடும்.

வனாந்தரத்தில் ஆண்டவருக்குக் கோபமூட்டி, இருதயத்தைக் கடினப்படுத்தி, அவரைச் சோதித்து, அவரைப் பரீட்சை பார்த்து, வழிவிப்போகிற இருதயமுள்ளவர்களாயும், அவரது வழியை அறியாதவர்களுமாயிருந்த ஜனங்களைக் குறித்து (சங். 95:8-10), 'என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்'

(சங். 95:11) என்றல்லவோ தேவன் சொல்கிறார். நம்முடைய வாழ்க்கை முறையும் இந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையைப் போன்று காணப்படுமாயின், இளைப்பாறுதலில் நம்மால் பிரவேசிக்க இயலாது.மேலும், சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27) என்றார் இயேசு. 'என்னுடைய சமாதானம்' 'என்னுடைய இளைப்பாறுதல்' என்று அழுத்தமாக தேவன் கூறுவதன் அர்த்தம், இளைப்பாறுதலும், சமாதனமும் அவருடையது என்பதை நாம் அறிந்துகொள்ளவே. இயேசுவை தவிர்த்துவிட்டு சமாதானத்தையோ அல்லது இளைப்பாறுதலையோ தனதாக்கிக்கொள்ள துடிப்போருக்கு அது தூரமானது. நமது உழைப்பினால் இளைப்பாறுதலில் நாம் நுழைந்துவிட முடியாது, அவரது அனுமதியினாலேயே அது நம்முடைய வாழ்க்கையில் வந்தடைகிறது. உலகம் பேசுகிற சமாதானத்திற்கும், தேவன் கொடுக்கிற சமாதானத்திற்கும் வித்தியாசம் உண்டு, தேவன் கொடுப்பது நம் உள்ளத்தில் உறைந்து நிற்கும்; உலகம் கொடுப்பதோ அவ்வப்போது உலர்ந்துபோகும். உலகம் கொடுக்கும் சமாதானத்தைக் குறித்த சரியானதோர் வர்ணனை, சங்கீதக்காரனின் வசனமே. 'காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது' (சங். 103:16). என்றாலும், கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங் 103:17); அது உலர்ந்துபோவதில்லை.

ஆண்டவரின் சமுகமும், நம்முடைய முகமும் 

வெளிப்புறத் தேவைகள் சந்திக்கப்பட்டுவிடுவதால் அவை ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்துவிடாது. 'இஸ்ரவேல் மக்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்' (சங். 106:15). கைகளில் கிடைத்தவைகளைக் கண்டு இஸ்ரவேல் மக்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனால், தங்களுடைய ஆத்துமா இளைத்துப்போய்க் கிடப்பதையோ அவர்கள் அறியாதிருந்தார்கள். இன்று உலக மக்கள் அநேகரின் நிலை இதுதான், அவர்களுடைய வாழ்க்கை பொன்னாலும், பொருட்களாலும், ஐசுவரியத்தினாலும் நிறைந்திருக்கிறது, விரும்பியவைகளெல்லாம் வந்து வாய்த்துவிட்டது; எனினும், அவர்களுடைய ஆத்துமா தேவனை அறியாமல், அவருடைய சமுகத்தைத் தேடாமல் இளைத்துப்போய்க் கிடப்பதையோ அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். 'என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்பதுதான் தேவனது சூத்திரம் (யாத். 33:14). களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டிக்கொண்டிருந்த மனிதன், 'ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு' (லூக். 12:19) என்று சொல்லிக்கொண்டிருந்தான். பொருட்கள் சேர்த்துவைக்கப்பட்டுவிட்டால் ஆத்துமா இளைப்பாறிவிடும் என்பது அவன் கணக்கு. என்றாலும், தேவன் அவனுக்குப் பாடம்புகட்டும் விதத்தைக் கவனித்தீர்களா? 'மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?' என்கிறார் (லூக். 12:20). அவன் சேகரித்த பொருட்கள் ஆத்துமாவுக்குரியது அல்ல, ஆத்துமாவுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை, அந்த பொருட்களால் ஆத்துமா இளைப்பாறிவிடாது என்பதை தேவன் தெளிவாக அவனுக்கு எடுத்துரைக்கிறார். ஆத்துமாவை தான் எடுக்கும்போது பொருட்களைச் சேர்த்து எடுப்பதில்லை, சரீரத்தை பூமியில் விட்டுவிடுவதைப்போல நீ சேகரித்துவைத்திருக்கும் அத்தனையையும் இந்தப் பூமியில் விட்டுவிடுவேன் என்று தெளிவானதோர் பாடம் தேவனிடமிருந்து அவனுக்குக் கிடைத்தது. தேவனது சமூகத்தைத் தேடாமல், உலகத்திலுள்ள சகலத்தையும் தேடியலையும் ஜனங்களின் நிலை இம்மனிதனுக்கு ஒத்ததே.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3யோவான் 1:2) என்றல்லவோ எழுதுகிறார் யோவான். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்றார் இயேசு. இவ்விரண்டு வசனங்களிலும் முதலாவது ஸ்தானம் கொடுக்கப்படுவது எதற்காக? ஆத்துமாவுக்காகத்தானே. பொருட்கள் கிடைத்துவிட்டால் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் என்ற எண்ணத்தில் சிக்கியிருப்போர், ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்ற மனதுடனேயே ஓடிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு கிடைத்திருக்கிறது, இன்னும் என்ன கிடைக்கும் என்ற எண்ணத்துடனேயே ஆண்டவரைத் தொடருவார்கள். ஆத்துமாவுக்கடுத்த அக்கறை அவர்களுக்கு இராது, அக்கரையில் அவர்கள் கரையேறுவதும் இயலாதது. அவர்களுடைய ஆவிக்குரிய மரமோ கனியற்று காய்ந்து கிடக்கும்; வெட்டப்படவேண்டிய காலத்தை எட்டியிருக்கும். எதனை எதோடு தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும் என்ற பகுத்தறிவின் பாதையிலிருந்து விலகுபவர்கள், பரலோகத்திற்கு தங்கள் ஆத்துமாவைக் கொண்டு சேர்க்க முடியாத பரிதாபமானவர்களே.

நாம் சவதரிப்பதும், சேர்ப்பதும், இப்போது வைத்திருப்பதும் சரீரத்தை சுகமாக வைத்திருப்பதற்காகவே. எனினும், இவைகள் அனைத்தும், ஆத்துமாவை அல்லல் தட்டிவிட்டு தனியாக வந்து சேர்ந்திருக்குமென்றால்; வருத்தமும் நம்மோடு சேர்ந்து வாழ்வது நிச்சயம். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி 10:22). உலகப் பொருட்களின் மீது முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு, அவர் சமுகத்திலிருந்து இளைப்பாறுதல் வரும் என்று காத்திருந்தால் நாம் காற்றையே பெறுவோம்.

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கினான் (லூக் 15:11-14). ஒருமுறை ஆசீர்வாதத்தை ஆண்டவரிடத்தில் எப்படியாவது கெஞ்சி பெற்றுக்கொண்டு, மறுமுறை அவரை என்றாவது சந்தித்துக்கொள்ளலாம் என்று மனம் மாறாமலிருப்போரின் நிலை இந்த இளைய குமாரனுக்கு ஒப்பானதே. அவர்கள் குறைவுபடத்தொடங்குவது நிச்சயம்.

ஆண்டவரின் ஆட்சியா, அற்புதத்தின் சாட்சியா? 

கர்த்தர் செய்த அற்புதத்திற்காக சபையில் சாட்சி சொல்லிவிட்டு, உலகத்தாருக்கு முன் சாட்சியில்லாமல் வாழும் மக்களாக நாம் காணப்பட்டுவிடக்கூடாது. 'சாட்சி' ஆத்துமாவுடன் சம்மந்தப்பட்டது, அதனை நாம் சரீரத்துடன் சம்மந்தப்படுத்திவிட்டது வேதனையான காட்சி. 'இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்' (அப். 2:32), 'ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்' (அப். 3:15), 'நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்' (அப். 5:32), 'அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்' (அப். 10:39) என்றனர் அப்போஸ்தலர்கள். ஆனால், நாம் அந்த சாட்சியை நம்மைச் சார்ந்ததாகவே மட்டும் மாற்றிவிட்டது நம்முடைய மனம் மாறிக்கிடக்கிறதையே வெளிக்காட்டுகிறது. அவர்களுடைய கண்ணீரைக் கண்டு கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்கள் கரைந்துபோகும்போது மீண்டும் கண்ணீர் அவர்களில் புரண்டு ஓடுகிறது. ஆசீர்வாதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு ஆண்டவரை விட்டு விலகி ஓகிறவர்கள், சபையை விட்டு விலகி ஓடுகிறவர்கள், போதகர்களை ஊழியர்களை விட்டு விலகி ஓடுகிறவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்களுக்கு உண்டாகும் குறைவுகளே அந்த காரியத்தை அவர்களுடைய வாழ்க்கையில் செய்யும் என்பது நிச்சயம்.

இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கேட்டது கிடைத்தது, ஆனால், அவர்களது வாழ்க்கையோ வனாந்தரத்தோடு முடிந்தது, கானானைக் காணவில்லை. இவ்வுலக பொருட்களை வைத்துக்கொண்டு இளைப்பாறுதலைப் பெற்றவர்களைப் போல வாழ்பவர்களுக்கு அது பொய்க்கால் குதிரை போன்றது. ஆத்துமாவை மறந்துவிட்டு, ஆசீர்வாதத்தையே சார்ந்து ஓடுகிறவர்கள் சிற்றின்பப் பிரியர்களே.

நம்முடைய பாரமும், அவருடைய நுகமும்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11:29) என்றார் இயேசு.

நுகத்தை கழற்றிவைத்துவிட்டால் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது உலக சிந்தை; ஆனால், நுகத்தை ஏற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது தேவன் செய்யும் விந்தை. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேதுரு 5:7) என்று ஆலோசனையாய் எழுதுகின்றார் பேதுரு. ஆனால், நாமோ, இவ்வுலகத்தின் பாடுகளை, துக்கங்களை, பாரங்களை, வருத்தங்களை ஆண்டவரித்திற்குச் சென்று முறையிட்டு அவர் மேல் இறக்கிவைத்துவிட்டு, அவருடைய பாரத்தை விரலாலும் தொடாமல் ஆலயத்தை விட்டும் அவரை விட்டும் ஓடிவந்துவிடுகிறோம். அவருடைய பாரங்களை அவரே சுமந்துகொள்ளட்டும் அல்லது வேறு யார் மீதாவது அவர் சுமத்திக்கொள்ளட்டும் என்று விலகிக்கொள்கின்றோம். 'ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்' (யாத். 4:13) என்றே அவரிடத்தில் சொல்ல முயற்சிக்கிறோம். ஆண்டவருடைய பாரங்கள் அனைத்தும் ஊழியர்களுக்குரியது என்று உதாசினப்படுத்திவிடுகின்றோம். நம்முடைய பாரத்தை இறக்கி வைப்பதோடு, அவருடைய பாரத்தை நம்மேல் ஏற்றிக்கொள்வதாலேயே இளைப்பாறுதல் என்பதல்லவோ சத்தியம். ஒருமுனையை மாத்திரம் பிடித்துக்கொண்டு தேவனிடத்தில் இளைப்பாறுதலை நாம் எதிர்பார்க்கிறோம்; ஆனால், அவருடைய பாரத்தைச் சுமக்கவேண்டும் என்ற மறுமுனையையோ மறுதலித்துவிடுகிறோம்.

'நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்' (லூக் 11:46) என்று சொல்லப்பட்டதைப்போலவே, அநேக விசுவாசிகளின் நிலை இன்று காணப்படுகின்றது. நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று (ஏசா 63:5) என்ற நிலைக்கு, அவரே செயலாற்றிக்கொள்ளட்டும் என்ற நிலைக்கு தேவனை நாம் தள்ளிவிடுகின்றோம். அவர்களே அத்தனையும் பார்த்துக்கொள்ளட்டும் என்று நாம் தள்ளிவிட்ட போதகர்கள், தலைவர்கள், ஊழியர்கள், உடன் பணியாளர்கள் எண்ணிப்பார்த்தால் எத்தனை? எத்தனை?

கர்த்தருடைய ராஜ்யத்தின் பணி இப்புவிதனில்; நிறைவேறவேண்டுமென தூண்களைப்போல இணைந்திருக்கும் நம்மேல் தேவன் தூக்கிவைத்திருக்கும் பாரத்தினைப் புரிந்துகொண்டால், அது விழுந்துவிடாமல் காத்துக்கொள்ளவேண்டுமே என்ற எச்சரிக்கையும், வேகமாக ஓடவேண்டுமே என்ற வாஞ்சையும் நம்மில் எழும்பி நிற்கும், நம்முடைய ஆத்துமாவும் இளைப்பாறுதலில் பிரவேசிக்கும். ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான் (எபி 4:10) என்பதுதானே சத்தியம்; கிரியைகளைச் செய்துமுடிக்காமல் ஓய்வுதனை எதிர்பார்ப்பது இயல்பு அல்லவே.

வெற்றிக்குப் பின் வரும் இளைப்பாறுதல்

யோபுவின் வாழ்க்கையும் இளைப்பாறுதலைக் குறித்ததோர் பாடத்தை நமக்குப் போதிக்கிறது. வாழ்க்கையில் சொல்லொண்ணா உபத்திரவங்களைச் சகித்துக்கொண்டிருந்தபோதிலும், தேவன் தன் உடனேயே இருக்கிறார் என்பதில் உறுதியாயிருந்தவர் யோபு; எனவே, 'ஆனாலும், நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' (யோபு 23:10) என்கிறார், 'உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை' (யோபு 10:7) என்கிறார், அவராலேயே அத்தனையும் நிகழ்கிறது என்ற அறிவு அவருக்கு இருந்தது. சாத்தானோ, உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் (யோபு 1:11); நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால்; அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்கிறான் (யோபு 2:5). தேவனுடைய கையை யோபுவிற்கு விரோதமாக நீட்டச் சொல்கிறான் சாத்தான்; யோபுவும் தேவன் தனக்கு விரோதமாக கையை நீட்டியிருப்பதைப் போலத்தான் நினைத்தார்; எனவே, 'உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக (யோபு 13:21). நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றார் (யோபு 1:21). 'நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்' (யோபு 10:22) என்கிறார். ஆண்டவரே, அப்படிச் செய்தாலும் அதற்கு ஆயத்தமாயிருந்தவர் யோபு. என்றாலும், சாத்தானை ஜெயிக்கும்வரை யோபுவுக்கு இளைப்பாறுதலை விலக்கிவைத்திருந்தார் தேவன்; நம்முடைய வாழ்விலும் இத்தகைய தருணம் வருமென்றால், அந்த நுகத்தைத் தாங்கியே ஆகவேண்டும். இளைப்பாறுதலைக் குறித்த இந்த அறிவு நம்முடைய வாழ்க்கையிலும் வேரூன்றினால், இடறாமல வாழ கர்த்தர் துணை செய்வார். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி