Skip to main content

மகிமையே மகிழ்ச்சி (லூக் 1:13)

மகிமையே மகிழ்ச்சி



 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக் 1:13)


'குறைவுகள்' நாம் கூனிக்குறுகுவதற்கல்ல; மாறாக, கூடவே அவர் நம்மை வைத்துக்கொள்வதற்கே. ஜனங்களுக்காக தேவசந்நிதியில் ஆசாரியனான சகரியா பிரவேசித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் குறைவுள்ளவனாகவே அவன் காணப்பட்டான். ஜனங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அதே வேளையில், தன்னுடைய விண்ணப்பமும் கேட்கப்பட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்புடனேயே அவன் வாழ்ந்துகொண்டிருந்தான். ஒருவேளை 'தேவாலயத்துக்குள் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றதும்' (லூக். 1:9), முதலில் தன்னுடைய தேவைகளுக்காக அவன் விண்ணப்பம் செய்திருக்கலாம்; அல்லது, இவ்வளவு நாள் விண்ணப்பம் செய்துவிட்டேன், இப்போதோ, 'இருவரும் வயதுசென்றவர்களாகிவிட்டோம்' என்ற எண்ணத்தில் விசுவாசக் குறைவினால் விண்ணப்பிப்பதை நிறுத்தியிருந்திருக்கலாம். என்றாலும், அன்றோ அல்லது என்றோ அவன் செய்த விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்தது. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தபோதிலும் (லூக் 1:6), அவர்களுடைய வாழ்க்கையில் குறைவு காணப்பட்டது. என்றாலும் வேளை வந்தபோது அவர்களது வாழ்க்கையின் குறை, தேவனால் நிவிர்த்திசெய்யப்பட்டது. 

கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஓர் கலியாணம் நடைபெற்றபோது, இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர் அந்த கலியாண வீட்டில் இருந்தபோதிலும், திராட்சரசம் குறைவுபட்டது (யோவா 2:2,3). குறைவு உண்டாகிவிட்டபோதிலும், 'என்வேளை இன்னும் வரவில்லை' (யோவான் 2:4) என்றே கூறுகின்றார் இயேசு கிறிஸ்து. வேளை வந்தபோதோ, தண்ணீர் திராட்சரசமாக மாறினதே. 

மேலும், அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவா 9:1-3) என்று சொன்னதோடு, அவனை நோக்கி: நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான் (யோவா 9:7). குறைவுகள் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமென்றால், அது தேவனுடைய கிரியைகள் நம்மிடத்தில் வெளிப்படுவதற்காகவே. 

எனினும், சிலருடைய வாழ்க்கையிலோ, 'குறைவுகள், குறைவுளாகவே விடப்பட்டுவிடுவதால், தேவனுடைய கரம் குறுகிப்போயிற்று என்று சொல்லிவிடமுடியாது' என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி 4:19) என்று பவுல் எழுதுகின்றாரே. இதன் அர்த்தமென்ன? இவ்வுலகத்தில் ஒருவேளை குறைவுள்ளவர்களாக நாம் காணப்பட்டாலும், 'கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நாம் நிறைவாகிவிடுவோம்' என்பதுதானே. எனவே, இவ்வுலகத்தில் நமக்கு இருக்கும் குறைவுகளைக் குறித்து நாம் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை; பரலோகம் நம்மை நிறைவாக்கும். 

லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரன், பருக்கள் நிறைந்தவனாய், ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்தான். நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று; என்றபோதிலும், அவன் மரித்தபோது, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான் (லூக். 16:19,20,22). இவ்வுலகத்தில் அவனுக்குக் கிடைக்காத சந்தோஷமும், மகிழ்ச்சியும் மறுவாழ்வில் ஆபிரகாமின் மடியில் அவனுக்குக் கிடைத்தது. உலகத்தின் பார்வையில், பிறருடைய கண்களுக்கு முன் ஒன்றுமில்லாதவன் அவன். பசியை ஆற்றிக்கொள்ளக்கூட பிறரையே சார்ந்திருக்கவேண்டியவன்; என்றாலும், அவனுடைய குறைவுகள் அனைத்தும் 'மகிமையிலே நிறைவானது.' மகிமையே நம்முடைய வாழ்க்கையை நிறைவாக்கும்; எனவே, இம்மைக்காக பரிதவித்து, நம்முடைய சந்தோஷத்தைப் பறிகொடுத்துவிடவேண்டாம்; மகிமையே மனதை நிறைக்கட்டும். 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி