Skip to main content

தரிசனத்தை இழந்துவிடாதே

 தரிசனத்தை இழந்துவிடாதே?

(Anbin madal published in GEMS Satham, August 2022, GEMS, Bihar)



கால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு நம்மைக் காப்பவரும் (நீதி. 3:26), தமது வலது கரத்தினால் நம்மைத் தாங்குகிறவரும் (சங். 63:8), நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நம்மை நடத்துகிறவரும் (நீதி. 8:21), நமக்குப் போதித்து, நடக்கவேண்டிய வழியை நமக்குக் காட்டுகிறவரும், நம்மேல் தமது கண்ணை வைத்து, நமக்கு ஆலோசனை சொல்லுகிறவரும் (சங். 32:8), நீடித்த நாட்களால் நம்மை திருப்தியாக்கி, தனது இரட்சிப்பை நமக்குக் காண்பிக்கிறவருமாகிய (சங். 91:16) ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

சூழ்நிலைகள் சுற்றிலும் நம்மை நெருக்கி, நிலை தடுமாறச் செய்ய பல நிலைகளில் முயற்சித்தபோதிலும், 'மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?' என்று நம்மை முழங்கச் செய்கிறவரும், 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்' (1 கொரி. 15:55,57) என்றும், 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு' (பிலி. 4:13) என்றும் துதிக்கப் பண்ணுகிறவருமாகிய தேவனுக்கே எல்லா துதியும், மகிமையும், கனமும் உண்டாவதாக. இதனை தனது வாழ்க்கையில் தெளிவுற அறிந்திருந்ததினாலேயே, அனுபவித்ததினாலேயே, 'என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' (சங். 23:5) என்றும், 'கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்' (சங். 20:6) என்றும், யூதாவின் வனாந்திரத்தில் இருக்கும்போதுகூட, 'என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது' (சங். 63:8) என்றும் பகிரங்கமாகப் பாடுகிறான் தாவீது. ஆம், பிரியமானவர்களே! இன்றைய நாட்களிலும், பவுலைப் போன்ற மற்றும் தாவீதைப் போன்ற இத்தகைய உறுதியான மனநிலை நமது உள்ளத்திலும் காணப்பட்டால் மாத்திரமே, நமக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்; அதையே நோக்கினவர்களாகத் தொடர்ந்து பயணிக்கவும் முடியும்.   

அழைப்பு என்பது, ஆபிரகாமைப் போல, தனியொரு மனிதனை, அவனது இருப்பிடத்திலிருந்து அசைத்து, ஆண்டவர் விரும்புகின்ற திசைக்கு நேராகத் திரும்பச் செய்து, அவர் குறித்திருக்கும் இலக்கினை நோக்கிப் பயணிக்கத் தூண்டுகின்றது; என்றபோதிலும், தரிசனமே அவ்வாறு பயணிக்கும் மனிதனை, வழிகளிலெங்கும் அவர் விரும்பும் வண்ணம் செயல்படச் செய்கிறது என்பதனை நாம் மறந்திடலாகாது. தனக்கென ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் இருப்புப் பாதையில் தடம் மாறாமல் தொலைதூரம் பயணிக்கும் தொடர் வண்டியைப் போலவே, அழைப்பினைப் பெற்ற மனிதனும் கர்த்தர் தனக்குத் தந்த தரிசனத்தின் மேலே தடம் புரளாமல் பயணித்தால் மாத்திரமே, இலக்கை நோக்கிய அவனது பயணம் தேவ இராஜ்யத்திற்கு இலாபமாக மாறும் என்பது நிச்சயம். தரிசனம் இல்லாத எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் தேவனுடைய பார்வையில் தரிசு நிலமாகவே காட்சியளிக்கும்; விண்ணகம் விரும்பும் விளைச்சலை அத்தகைய மனிதனின் வாழ்க்கையில் காண இயலாது. எனவே, தரிசனம் மனிதனைத் தொட்டுவிடாதபடியும், தரிசனத்தை மனிதன் தொடர்ந்துவிடாதபடியும் சத்துரு பல நிலைகளில் தொய்வின்றி தொடர்ந்து போராடிவருகின்றான். அவ்வாறே, பெற்ற தரிசனத்தை அகற்றிவிடவும், தரிசனத்திலிருந்து முற்றிலும் பிரித்துவிடவும் பாதைகளில் பலவிதங்களில் தந்திரமாக தன்னால் இயன்ற அளவு தீவிரமாகச் செயல்படுகின்றான்.

எனவே, தரிசனத்தை ஒருபோதும் தொலைத்துவிடாதபடியும்,  அதை விட்டுத் தூரமாகச் சென்றுவிடாதபடியும், தரிசனத்திற்கு விரோதமாகப் போராடுபவைகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம்.  அழைப்பினைப் பெற்றவர்களாயிருந்தும், தரிசனமற்றவர்களாகவே தங்களது வாழ்நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்றைய நாட்களில் அநேகர் உண்டு. கர்த்தருடைய பிள்ளைகளாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்; ஆனால், எங்கே போகவேண்டும் என்றோ, தேவனுடைய இராஜ்யத்திற்காக என்ன செய்யவேண்டும் என்றோ அறியாதவர்களாகவே அவர்கள் காணப்படுவார்கள். இரட்சிப்பின் ஆடையினை அணிந்திருந்தாலும், அத்தகையோரின் இருதயம் தரிசனம் என்னும் அனலின்றி அணைந்துபோனதாகவே காட்சியளிக்கும். இருக்கும் இடங்களிலும், இவர்களைப் பயன்படுத்தும் மனிதர்களின் கைகளிலும் எரியாத தீவட்டிகளாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாதவர்களாகவுமே இத்தகையோரின் வாழ்க்கை காட்சியளிக்கும்.  அழைப்பினை நோக்கிய பயணத்தில், தரிசனம் என்ற பாரம் தங்களிடத்தில் இல்லாமலிருப்பதைக் கூட அறிந்துகொள்ள இயலாமல் வாழுபவர்கள் இவர்கள். வேகமாகப் பயணிக்கும் பேருந்தைப் போல இவர்கள் காணப்பட்டாலும், தரிசனமற்ற வெறுமையான வாகனங்களாகவே வீதிகளில் காட்சியளிக்கின்றனர். தேவன் அழைத்த இடத்திற்கு வந்தடைந்த பின்னும், அமைதியாய் தரிசனமின்றி செயல்படாமலேயே அமர்ந்திருக்கும் மனிதர்கள் இவர்கள். 

எனவே, தேவன் நமக்குக் கொடுத்த தரிசனத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதனையே பற்றிக்கொண்டவர்களாக தொடர்ந்து முன்னேறிச் செல்லவும்,  அதனை செய்து முடிக்கவும்,  நாம் தீவிரமாகச் செயல்படவேண்டியது அவசியம்; என்றாலும், தரிசனத்தைத் தக்கவைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய போர் முறையினையும் கூடவே புரிந்துகொள்வது நல்லது. போர்முனையில் நாம் நிற்கும்போதும், போராட்டங்களைச் சந்திக்கும்போதும், எப்படியாகிலும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற விருப்பம் ஒருபுறம் நமது இதயத்தை நிரப்பியிருப்பது உண்மைதான்; என்றாலும், போர் முடியும் தருவாயில், வீரனாகவே நாம் வீடு திரும்பவேண்டும் என்பதிலும், தரிசனத்தினால் நிறைந்திருக்கும் நமது உள்ளம் ஒருபோதும் வெற்றிக்குப் பின் வெற்றிடமாக மாறிவிடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாயிருக்கவேண்டியது அவசியம். 'நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது' (2 கொரி. 10:3,4) என்று அப்போஸ்தலர்களாகிய தங்களது போர் முறையினைக் குறித்து குறிப்பிட்டு எழுதும் பவுல்,  

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபே. 6:11-13) என்று அதே முறையினை எபேசியருக்கு ஆலோசனையாகவும் எழுதிவைத்திருக்கின்றாரே. 

என்றபோதிலும், அநேக நேரங்களில் உலகத்தினால் உண்டாகும் போராட்டங்களையும், மனிதர்களால் வரும் நெருக்கங்களையும், பாதையில் நம்மைத் தாக்கும் பாடுகளையும், உடனிருப்பவர்களாலேயே உருவாக்கப்படும் உபத்திரவங்களையும் எதிர்கொள்ள நேரிடும்போது, ஆவிக்குரிய ஆயுதங்களை மறந்து, மாம்சீக பெலத்தில் போராடத் தொடங்கிவிடுகின்றோம்; விளைவு, ஆவிக்குரிய வீரர்களாகப் போர்புரிந்துகொண்டிருந்த நாம், போரின் முடிவிலோ மாம்சத்தில் விழுந்துபோனவர்களாகவே வீடு திரும்பும் சூழ்நிலை உண்டாகிவிடுகின்றது; அதுமாத்திரமல்ல, தரிசனத்தோடு ஓடிக்கொண்டிருந்த நம்மை, அது தடம்புரளவும் செய்துவிடுகின்றது. பிரியமானவர்களே! தரிசனத்திலிருந்து நம்மை திசைமாறச் செய்யவும், தடம்புரளச் செய்யவும், சத்துரு நம்மோடு தொடுக்கும் யுத்தங்களுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியதோடு, சத்துரு தொடுக்கும் மாம்சீக ஆயுதங்களுக்கு, நாமும் மாம்சீக ஆயுதங்களையே தொடுத்து தரிசனத்தின் தொடர் பயணத்திற்கு நாமே தடைகற்களாக மாறிவிடக்கூடாது என்பதிலும் நாம் கவனமாயிருக்கவேண்டியது அவசியம். போர் முனையில் ஆவிக்குரிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு, மாம்சத்துக்கடுத்த ஆயுதங்களைத் தரிப்பித்து நம்மை மடியச் செய்ய சத்துரு எடுக்கும் யுக்திகளுக்கு நாம் இணங்கிச் சென்றுவிடக்கூடாதே.  போர் முனையில், போர் முறையினை அறிந்துகொள்ளாமல் தங்களது மாம்சீக பெலத்தில் போரிடுவதினால், அநேக வீரர்களுடைய வாழ்க்கை வீழ்ந்துபோனதாகவே காட்சியளிக்கின்றது. இத்தகைய வீரர்களின் யுத்தம், உலகத்தாரின் பார்வையில் சத்துருக்களின் மேல் வெற்றி பெற்றுவிட்டதைப் போல வெளியரங்கமாகக் காணப்பட்டாலும், அந்தரங்கத்திலோ, அவர்களது மாம்சீக வீழ்ச்சி சத்துருவையே வெற்றிக்குள்ளாக்குகின்றது என்பதை நாம் மறுக்க முடியாதே. 

எகிப்தில் அடிமையாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்டவன் மோசே. இத்தகைய பெரியதோர் திட்டத்தினை அவன் மூலம் செயல்படுத்துவதற்காக, பிறப்பு முதலே தேவன் அவனைப் பின்தொடர்ந்து, பல காரியங்களை அவனுக்குச் சாதகமாகச் செய்துமுடித்தார்; அடிமைகள் என்று கருதப்பட்ட ஜனத்தில் பிறந்த அவனை அரியணை வரை கொண்டு சென்று அமர்த்தினார். என்றபோதிலும், தன்னைக் கொண்டு, தன் ஜனத்திற்காக தேவன் செய்யவிருக்கும் போர்முறையினைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மோசே,  மாம்சத்தின்படி போரிடத் தொடங்கினபோது (யாத். 2:12), தன் ஜனத்தை விடுவிப்பதற்காக வீரனாக வைக்கப்பட்டிருந்த அவனே எகிப்திலிருந்து வெளியேறும் நிலை உண்டாகிவிட்டதே. (யாத். 2:14-15) 

பிரியமானவர்களே, மோசேயைப் போன்ற மாம்சீகப் போர்முறைகள், நம்மையும் நியமிக்கப்பட்ட பாதையிலிருந்தும், தேவன் தந்திருக்கின்ற தரிசனத்திலிருந்தும் விலகச் செய்யும் வலிமையுள்ளவைகள், தேவன் நம்மேல் வைத்திருக்கும் தரிசனத்தை தகர்த்துப் போடக்கூடியவைகள் என்பதை புரிந்துகொண்டவர்களாக, எப்போதும் எந்நிலையிலும் ஆவிக்குரிய ஆயுதங்களை மாத்திரமே பயன்படுத்த நம்மை அர்ப்பணிக்கவேண்டியது எத்தனை அவசியம். பல சூழ்நிலைகளில், பிரச்சனைகளையும் மற்றும் போராட்டங்களையும் நாம் சந்திக்கும்போது, ஆவிக்குரிய மனிதர்களாகவே நாம் காணப்பட்டபோதிலும், மாம்சீக ஆயுதங்களைக் கையிலெடுக்கவே சத்துரு நம்முடைய இருதயத்தைத் தூண்டிவிடுகின்றான். சத்துருவின் இத்தகைய தந்திரத்திற்குள் அகப்பட்டுக்கொண்டால், தரிசனத்திலிருந்தே தூரமாக நாம் சென்றுவிட நேரிடுமல்லவா; எந்த மக்களை விடுவிக்கவேண்டும் என்ற தரிசனத்தோடு தேவன் நம்மை முன் குறித்திருத்திருந்தாரோ, அந்த மக்கள் வாழுமிடத்திலிருந்தே நாம் வெளியேற நேரிடுமல்லவா. இத்தகைய வலைகளில் நாம் வீழ்ந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.   

அவ்வாறே, ஆண்டவரின் அழைப்பினை ஏற்று ஆபிரகாம் தனது பயணத்தைத் தொடங்கினபோது, 'பிள்ளை இல்லை' என்ற குறை ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பெரிதாகக் காட்சியளித்தது. ஏற்ற காலத்தில் பரலோகம் அதனை பூர்த்தி செய்யும் முன், 'ஆகார்' என்ற மாம்சீக ஆயுதத்தை சாராள் கையிலெடுத்து, தனக்கென சந்தானத்தைத் தேட முயற்சித்தபோது, ஆபிரகாமும் தட்டாது அதனை ஏற்றுக்கொண்டான்; விளைவு, அதனால் பிறந்த இஸ்மவேலைக் குறித்து, 'அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்' (ஆதி. 16:12) என்றல்லவா வாசிக்கின்றோம். வாக்குத்தத்தத்தைப் பெற்றவன் வரும் முன் வதைக்கிறவன் வந்துவிட்டான். 'பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு' (ஆதி. 21:9) என்றுதானே வேதம் வெளிப்படுத்துகின்றது. அநேக நேரங்களில், ஆபிரகாம் மற்றும் சாராள் தம்பதியரைப் போன்று, நாமும் நமக்கு நாமே இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுகின்றோம். தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் ஒருபுறம் நம்முடைய வாழ்க்கையில் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் நிறைவேறக் காத்திருக்க, மாம்சத்தில் முடிவெடுத்து வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானவைகளை வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக நுழைத்துவிடுகின்றோம். விளைவு, வாக்குத்தத்தங்களையே பரியாசம் பண்ணுபவைகளாகவும், வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானவைகளாகவும் அவைகள் மாறிவிடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இஸ்மவேலைப் போல, மாம்சத்தில் உண்டானவைகளை வெளியேற்றாமல், தரிசனத்தின் பயணத்தைத் தொடர்வது சாத்தியமில்லாததாகிவிடும். எனவே, தரிசனத்தை நோக்கிய நமது பயணத்தை பரியாசம் பண்ணும் மாம்சத்துக்கடுத்த காரியங்களை உருவாக்கிவிடாதபடிக்கு நாம் கவனமாயிருப்போம்.  

மேலும், ஆண்டவர் செய்யும் யுத்தத்திற்கு மாம்சீக ஆயுதங்கள் அவசியமில்லாதது என்பதை தாவீதின் வாழ்க்கையிலிருந்தும் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றதே. புறக்கணித்துத் தள்ளப்பட்ட ராஜாவாகிய சவுலுக்குப் (1 சாமு. 16:1) பதிலாக புதிய ராஜாவை தெரிந்துகொள்ளும்படியாக, ஈசாயின் வீட்டிற்கு சாமுவேல் அனுப்பப்பட்டபோது,  வீட்டிலே வரிசையாக வந்த ஏழு குமாரர்களில் எவரையும் தெரிந்துகொள்ளாமல், அவர்களையும் கூடவே புறக்கணித்துத் தள்ளினார் கர்த்தர் (1 சாமு. 16:6-10). 'இருதயத்தைப் பார்த்த கர்த்தரால்' (1 சாமு. 16:7) புறக்கணித்துத் தள்ளப்பட்ட இந்த ஏழு குமாரர்களில், எலியாப், அபினதாப் மற்றும் சம்மா ஆகிய மூன்று மூத்த குமாரர்களின் 'மாம்சீக, சரீர வளர்ச்சியைப்' பார்த்து, கோலியாத்திற்கு எதிரான யுத்தத்திற்கு தன்னோடு அழைத்துச் சென்றிருந்தான் சவுல் (1 சாமு. 17:13); கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கியிருந்தபடியினால் (1 சாமு. 16:14), அவனும், மாம்சத்திற்குரியவனாகவே போர்முனையில் காட்சியளித்தான்.  மாம்சத்துக்குரியவனின் தெரிந்துகொள்ளுதல், மாம்சத்துக்கடுத்ததாகவே காணப்படும் என்பதற்கு சவுல் ஓர் உதாரணமல்லவா. வீரர்கள் என்ற போர்வையில் இவர்கள் போருக்குச் சென்றிருந்தபோதிலும், எதிரியையோ அவர்களால் வீழ்த்த இயலவில்லை; ஆண்டவர் தேடிய மனிதனோ, ஆட்டு மந்தையிலிருந்தான். இன்றும், கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை விட்டு விட்டு, மனிதர்களின் மாம்சீகப் பெலத்தை மாத்திரம் கணக்கில் கொண்டு, அப்படிப்பட்டோரை மட்டுமே அழைத்துக்கொண்டு போரைச் சந்திக்கும் சவுல்கள் உண்டே; போர் முனையில் நின்றாலும், அபிஷேகம் பெற்றவர்கள் வராதவரை, வெற்றி இவர்களது வசம் வராது.

அதுமாத்திரமல்ல, கோலியாத் என்னும் பெலிஸ்தியனுக்கு விரோதமாக தாவீது புறப்பட்டபோது, சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தபோது, 'நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டானே' (1 சாமு. 17:39). 'பொன்னாடை போர்த்துவதுபோல' தன் ஆடையினை சவுல் போர்த்தினபோதிலும், அவைகளைப் புறக்கணித்துவிட்டு பொறுக்கின கற்களோடு தாவீது போருக்குப் புறப்பட்டானே. மேலும், தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்' (1 சாமு. 17:45) என்று கோலியாத்தின் ஆயுதங்களையும், தன்னுடைய ஆயுதமாகிய ஆண்டவரையும் வேறுபடுத்திக் காண்பித்தானே. எத்தனையோ ஆயுதங்கள் போர்முனையில் காணப்பட்டபோதிலும், 'கோலியாத்தை வீழ்த்த கூழாங்கல் போதும்' என்ற தேவ திட்டத்தை, திறம்படச் செய்து முடித்தான் தாவீது. 

பிரியமானவர்களே! ஆவியில் தொடங்கிய நமது ஓட்டம், எவ்விடத்திலும் மாம்சத்தில் நிறைவுற்றுவிடாதபடிக்குக் காத்துக்கொள்ளுவோம். 'ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?' (கலா. 3:3) என்று கலாத்தியருக்கு பவுல் எழுதி உணர்த்தும் வார்த்தைகள் நமக்கும் எச்சரிக்கையாக மாறட்டும். பிசாசின் தந்திரங்களைப் புரிந்துகொண்டு, பிதாவுக்குப் பிரியமானவர்களாகவே நடந்துகொள்ளுவோமானால், தரிசனத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமானதே.


தரிசனம் இல்லாமல் நீ தரிசு நிலம் ஆகிவிடாதே

தரிசு நிலங்கள் பல உண்டு தரிசனத்தை நீ இழந்துவிடாதே


சத்துருவின் தந்திரங்களோடு சமரசம் செய்துவிடாதே

சடுதியாய் அவன் புரியும் யுத்தத்திற்குப் பயந்துவிடாதே


சரீரத்தின் ஆயுதங்களால் சத்துருக்களை எதிர்த்துவிடாதே

சர்வாயுத வர்க்கம் உண்டு சத்தியத்தை நீ மறந்துவிடாதே


போராடும் சத்துருவுக்கு புகலிடம் கொடுத்துவிடாதே

போரிடும் அவனுக்கு புறமுதுகும் நீ காட்டிவிடாதே


எதிரியை எதிர்த்து எதிர்த்து உன் திரியை அணைத்துவிடாதே

எப்போதும் எரியும் விளக்கு உன் நிலையை மறந்துவிடாதே


வீரனாகப் போரிட்டு வீரனாகவே வீடுதிரும்பினால்

விண்ணகம் பாராட்டும், மண்ணுலகம் வரவேற்கும்





அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. P.  J. கிருபாகரன்


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி