Skip to main content

ஆபிரகாமைத் தேடி வந்த ஆண்டவர்

 

ஆபிரகாமைத் தேடி வந்த

ஆண்டவர்

www.sinegithan.in




அவரை கண்டுகொள்ளுங்கள்


ஆராதனைகளானாலும், ஐக்கியமானாலும், ஆடல் பாடல்களானாலும், கூடுகைகளானாலும், பண்டிகைகளானாலும், கொண்டாட்டங்களானாலும், வேறெந்த பிற நிகழ்ச்சிகளானாலும், 'ஆண்டவர்' அடையாளப்படுத்தப்படுகின்றாரா? என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். மேல்மட்டமாய் இருக்கவேண்டியவைகளெல்லாம் மேலோங்கி நிற்க, ஆண்டவரும் மற்றும் அவரது வார்த்தைகளும் அடிமட்டத்திற்குத் தள்ளப்படுமென்றால், அவ்விடத்தை விட்டு நாம் அகன்று சென்றுவிடுவதே ஆண்டவருக்குப் பிரியமானவர்களாக நம்மை மாற்றும்.  

மனு உருவில் இயேசு கிறிஸ்து வந்தபோதிலும், மனிதர்களில் உயர்ந்தவர் அவர்; 'என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?' (யோவான் 8:46) என்று தனது பரிசுத்தத்தைப் பிரகடனப்படுத்தினவர். 'இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை' (யோவான் 14:30) என்று உறுதியாக உரக்கச் சொன்னவர். 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' (யோவான் 14:6) என்றும், 'நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்' (யோவான் 10:9) என்றும் ஜனங்களுக்குத் தன்னை அடையாளப்படுத்தினவர். 'ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும்' என்று பிலிப்பு கேட்டபோது, 'பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?' (யோவா 14:8,9) என்றும், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்றும், 'என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை' (யோவான் 8:29) என்றும் தனக்கும் பிதாவுக்கும் இடையிலான உறவினை உறுதிபடக் கூறினவர். 'எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான்' (யோவான் 1:15) என்று யோவான் ஸ்நானகனாலும் அறிமுகப்படுத்தப்பட்டவர். இப்படிப்பட்டவருக்கு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், நம்மிடத்திலிருந்து பிறருக்கு வெளிப்படும் வாழ்வியல் முறைகளிலும் இடங்கொடாவிட்டால், ஆடம்பரமாயிருக்கும் அத்தனையும் அவர் பார்வையில் ஆகாததாகவே மாறிப்போகும். 

ஆவிக்குரியவர்களாகிய நம்முடைய கண்கள், எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கவேண்டும், எத்தனையான கூட்டத்திலும், அவரை அடையாளம் கண்டுகொள்ளத் தெரிந்திருக்கவேண்டும். 'என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஸ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்' (உன். 5:10-16) என்று வார்த்தைகளால் அவரை வடித்துப் பாடுகின்றான் சாலொமோன். அநேக நேரங்களில், இத்தகைய நேசரையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், அவருடைய நேசத்தையும் கூடவே இழந்து நிற்கின்றோம். 

பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டபோது, அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது, சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (மத். 16:13-16). இத்தகைய தெளிவான பரத்தின் வெளிப்பாடும் பார்வையும் இன்று நம்முடைய கண்களில் உண்டா? இல்லையேல், 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' (யோவான் 14:6) என்று சொல்லுபவரை, 'இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?' (மத். 13:55) என்ற சாதாரணமான கண்ணோட்டத்துடன் கடந்துசெல்லுகின்றோமா?  

இயேசு கிறிஸ்து பிறந்தபோது, எருசலேமுக்கு வந்த சாஸ்திரிகள் ஏரோதுவை நோக்கி, 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்' (மத். 2:2) என்று கேட்கிறார்கள்; நட்சத்திரத்தைக் கண்டதும், சாஸ்திரிகளுக்கு இருந்த ஞானமோ, ராஜா பிறந்துவிட்டார் என்ற அறிவினை மாத்திரமே அவர்களுக்குக் கொடுத்தது. அது 'கிறிஸ்துவே' என்ற உணர்வு உடனே அவர்களில் உண்டாகவில்லை. எனவே, ஒரு முறை நட்சத்திரத்தைக் பார்த்ததும், ராஜாவின் பிறப்பிடத்தை தாங்களே மனதில் நிர்ணயித்துக்கொண்டு, தாங்கள் அறிந்திருந்த ஏரோதுவின் அரண்மனைக்குப் போகும் பாதையில் பயணத்தைத் தொடங்குகின்றார்கள்; வானத்தை நோக்கிப் பார்த்து, கிழக்கிலே கண்ட நட்சத்திரம் செல்லும் பாதையைப் பின்பற்றவோ அவர்கள் மறந்துவிட்டார்கள்.  நட்சத்திரத்தைக் கண்ட இடத்திலிருந்தே, அது காட்டும் பாதையில் அவர்கள் பயணித்திருந்தால், அது 'நேர்வழியாகப்' பிள்ளை இருக்கும் ஸ்தலத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தியிருக்குமே, ஏரோதுவின் அரண்மனைக்கு அவர்கள் சென்றிருக்க வாய்ப்பில்லையே. இயேசு கிறிஸ்துவை தரிசித்த பின், ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள் (மத். 2:12) என்று நாம் வாசிக்கின்றோமே; அப்படியென்றால், குழந்தையாகிய இயேசு கிறிஸ்துவை காண வாஞ்சித்த சாஸ்திரிகளை, இந்த வழியிலேயே, அதாவது 'நேர்வழியிலேயே' கூட்டிவந்திருக்கக்கூடுமே. 

அநேக நேரங்களில் 'நேர்வழியாக' நம்மை வழிநடத்த தேவன் முயற்சிக்கின்றபோதிலும், நமக்கு இருக்கும் அறிவினால் நாம் வழிவிலகிச் சென்றுவிடுகின்றோம். பயணம் தொடங்கக் காரணமாயிருந்தது அவர்தான்; என்றாலும், பாதை மாறிச் சென்றுவிடுகின்றோம். கிழக்கிலே தோன்றிய நட்சத்திரம், அதன் இலக்காகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி 'நேர்வழியாக' நடத்திச் செல்ல ஆயத்தமாயிருப்பதை சாஸ்திரிகள் அறிந்துகொள்ளாமல், கிறிஸ்துவுக்கு எதிரியாகிய ஏரோதுவின் அரண்மனைக்குள் நுழைந்துவிட்டதைப் போல, நாமும் எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்துவிடுகின்றோம்; என்றபோதிலும், 'யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது' (மத். 2:6) என்று அங்கிருந்தும் நம்மை வசனத்தின் மூலம் வழிநடத்த தேவன் போதுமானவர். தேவன் காட்டுகின்ற நேர்வழியினை சில நேரங்களில் நாம் தவறவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை புரிந்துகொள்ளவும் மற்றும் உணர்ந்துகொள்ளவும் நாம் தடுமாறினாலும்; எழுதப்பட்டிருக்கும் வசனங்களைக் கொண்டு நம்மை வழிநடத்துகின்றவர் தேவன்; எப்படியாகிலும், நம்மை இலக்கை அடையவைப்பதே அவரது நோக்கம். நட்சத்திரம் காட்டிய வழியில் அவர்கள் சென்றபோது, 'அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்'. (மத். 2:11)  

எழுதப்பட்டவைகளை அறிந்துகொண்டவர்களாக, ஏரோதுவின் அரண்மனையிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் வானத்தை நோக்கிப் பார்த்த சாஸ்திரிகள், அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, 'மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்' (மத். 2:10). அதன் பின்னர், அந்த நட்சத்திரம் காட்டிய வழியிலேயே தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். சாஸ்திரிகள் பாதை மாறிச் சென்றபோது, நட்சத்திரம் 'நேர்வழியாக' அதன் வழியில் சென்றுவிடவில்லை, எப்படியாகிலும் அவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று, அவர்கள் அறியாதபோதிலும், அவர்கள் அதனைப் பின்பற்றாதபோதிலும், அவர்களோடு கூட தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தது. சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பின்பற்றி நடந்திருக்கவேண்டும்; ஆனால், இப்போதோ, அவர்கள் வழிவிலகிச் சென்றதினால், நட்சத்திரம் அவர்களைப் பின்பற்றிச் செல்லவேண்டியதாயிற்று. அநேக நேரங்களில், வழிகாட்டும் நட்சத்திரத்தை விட்டு விட்டு, நமக்கு இருக்கும் அறிவினை மாத்திரமே சார்ந்துகொண்டவர்களாக வழி மாறிச் செல்வதினாலேயே, வேதனைகளை வாழ்க்கையில் கூட்டிக்கொள்ளுகின்றோம். வழிகாட்டுபவரை விட்டுவிட்டால், வலியினைக் கூட்டுகிறவர்களாகவே நமது வாழ்க்கை காணப்படும்.  

ஆனால், 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று சாஸ்திரிகள் கேட்டபோது, ஏரோதுவோ, பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: 'கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று' அவர்களிடத்தில் விசாரிக்கின்றான் (மத். 2:4). அப்படியென்றால், 'கிறிஸ்துவைக் குறித்த அறிவு' ஏற்கனவே ஏரோதுவுக்கு இருந்திருக்கிறது என்றும், 'அவர் யூதருக்கு ராஜாவாக எழும்புவார்' என்பதை அவன் முன்னமே அறிந்திருந்தான் என்றும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றதல்லவா. 

இன்றும். உலகத்தின் இரட்சகராக 'கிறிஸ்து' பிறந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளாமல், 'நட்சத்திரம், யூதருக்கு ராஜா' என்ற அறிவோடு மாத்திரமே நின்றுவிட்ட சாஸ்திரிகளைப் போல, நாமும் அநேக நேரங்களில் நின்றுவிடுகின்றோம். அடையாளங்களைத் தொடர்ந்து அவர் நடத்தும் வழிகளுக்கு உடன்படாமற்போய்விடுகின்றோம். கிறிஸ்து பிறப்பின் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றபோதிலும், இரட்சகராக 'கிறிஸ்துவை' இன்றும் பலரது கண்கள் காணாததற்குக் காரணம் இதுவே. 

    சாஸ்திரிகளுக்கு வானத்தைக் குறித்த அறிவு இருந்தது, ஆனால் வசனத்தைப் பற்றிய அறிவில்லை; பிரதான ஆசாரியருக்கும், ஜனத்தின் வேதபாரகருக்கும் வசனத்தைப் பற்றிய அறிவு இருந்தது, ஆனால் வானத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறிவில்லை. ஆனால், ஏரோதுவோ, வானத்தைக் குறித்த அறிவுடைய சாஸ்திரிகளையும், வசனத்தைப் பற்றிய அறிவுடைய ஆசாரியர்களையும், வேதபாரகர்களையும் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, கிறிஸ்துவுக்கு எதிராக செயல்பட நினைக்கின்றான்; இச்சூழ்ச்சியை இன்றைய நாட்களிலும், சத்துரு சாத்தியப்படுத்தத் துடிக்கிறான்.  


ஆசீர்வாதத்தை வாங்கிக்கொள்ளுங்கள்


மம்ரேயின் சமபூமியில் ஆபிரகாமுக்கு கர்த்தர் தரிசனமானபோது (ஆதி. 18:1), தனக்கு எதிரே மூன்று புருஷர்கள் நின்றுகொண்டிருந்தபோதிலும், ஆண்டவரை சரியாக அடையாளம் கண்டுகொண்டு, 'ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனை விட்டுக் கடந்துபோகவேண்டாம்' என்று சொல்லிவிட்டு, அதற்குப் பின்னதாகவே, 'கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள்' (ஆதி. 18:3-5) என்று சொல்லுகின்றான் ஆபிரகாம். ஆண்டவருக்கும், ஆபிரகாமுக்கும் இடையிலான உரையாடல்களினாலேயே நிறைந்திருக்கிறது அந்த அதிகாரம். ஆபிரகாமின் குடும்பத்தை ஆசீர்வதிக்க வந்தார் ஆண்டவர்; ஆனால், சோதோமையோ அழிக்க வந்தார். 

பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான் (ஆதி. 18:16) என்று நாம் வாசித்தபோதிலும், ஆபிரகாமின் வீட்டிற்கு வந்த மூன்று பேரும் சென்றுவிடவில்லை; 'அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்' (ஆதி. 19:1) என்றுதானே அடுத்த அதிகாரம் தொடங்குகின்றது. அப்படியென்றால், அந்த இரண்டு தூதர்களுடன் வந்த ஆண்டவர் எங்கே? அந்த இரண்டு தூதர்களையும் சோதோமுக்கு நேராக அனுப்பிவிட்டு, ஆண்டவரோ ஆபிரகாமோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான் (ஆதி. 18:22) என்றே பின் வரும் வசனங்களில் வாசிக்கின்றோம். சோதோமை அழிக்கும்படியாக தூதர்கள் புறப்பட்டுச் சென்றபின்பு, சோதோமுக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கின்றான் ஆபிரகாம். கந்தகத்தினால் அழிக்கப்படவிருக்கும் கடைசி மணித்துளியின் வேளை அது. இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட நேரத்திலேயே நாம் ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது. 


அழிவிலிருந்து தப்பிக்கொள்ளுங்கள்


பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினபோதிலும், தாமதித்துக்கொண்டிருந்தான் லோத்து. அப்பொழுது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள் (ஆதி. 19:15,16). அந்த இரண்டு தூதர்களும் அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்புதான், ஆண்டவர் லோத்துவை சந்தித்து, 'உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ' (ஆதி. 19:17) என்கிறார்; அந்த பட்டணத்திற்குள் ஆண்டவர் பிரவேசிக்கவில்லை. பட்டணத்தை விட்டு காப்பாற்றப்பட்டு, பட்டணத்திற்கு வெளியே கொண்டுவந்து விடப்பட்ட பின்புதான், முன் நிற்கும் ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்ளுகின்றான், அவரோடு உரையாடுகின்றான் லோத்து (ஆதி. 19:18-22). சில நேரங்களில், சோதோமைப் போன்ற பாவங்களுக்குள் நாம் தங்கியிருப்போமென்றால், பலரது விண்ணப்பங்களைக் கேட்டு நம்மை வெளியே கொண்டுவர தேவன் தூதர்களை அனுப்பக்கூடும்; என்றபோதிலும், பாவங்களை விட்டு நாம் வெளியே வந்தால் மாத்திரமே, ஆண்டவரை நாம் சந்திப்பது சாத்தியம். 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி