Skip to main content

பாவியும் நீயும் ஒன்றா?

பாவியும் நீயும் ஒன்றா?

 

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் (சங் 1:1) இருக்கவேண்டும் என்ற ஆலோசனையினைப் பெற்ற நாம், பாவிகளை நேசித்தும், பாவங்களைக் கண்டு விலகியும் செல்லும் நமது பயணத்தின் தொடர்ச்சி, எந்நிலையிலும் பாதிக்கப்படாதபடிக்கு தொடரோட்டமாய் சென்றுகொண்டிருக்கவேண்டும். பாவங்களைக் கண்டு விலகவேண்டும், ஆனால் பாவிகளையோ நேசிக்கப் பழகவேண்டும் என்ற இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரணாயிருந்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் முன்னேறிச் செல்வதற்கும், வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கும் அப்படிச் செய்வதே சிறந்த பயிற்சி என்பதை மறந்துவிடவேண்டாம். பாவத்தையே கிள்ளி எறிய நாம் அனுப்பப்பட்டவர்கள்; பாவிகளை தள்ளி எறிய அல்ல. கோபத்திற்காக, கோபம் கொண்டவனையும், பொய்க்காக பொய் சொன்னவனையும், திருட்டிற்காக திருடியவனையும் தண்டிப்பவது இவ்வுலக வழக்கு மாத்திரமல்ல, நியாயத்தீர்ப்பிலும் கூட அப்படியே. எனினும், மரணத்திற்கு முன்பாக மனிதர்களை பாவத்திலிருந்து பிரித்தெடுத்துவிடும் அழைப்பு நம்முடையது. எனினும், பாவத்திற்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள இந்த வலுமையான பிணைப்பை உடைத்தெறிய வல்லவர் இயேசு ஒருவரே; அதனைச் செய்யவே அவரது இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டது. பாவத்தைவிட்டு பாவியைப் பிரித்தெடுக்கத் திணறுவோர், 'இனி அவன் திருந்தவே மாட்டான்' என்ற வாசகத்தோடு தன் பணியினை முடித்துக்கொள்கின்றனர். பாவத்தையும், பாவியையும் பிரித்துப் பார்க்க பெலன் இருந்தால் மாத்திரமே, பாவியை நாம் நேசிக்க முடியும்; இல்லையென்றால், பாவியையும் பாவத்தோடு சேர்த்து வீசிவிடுவோம்.

நான் வாலிபனாக இருந்தபோது, கன்னியாக்குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கிருபையின் ஊழியத்தினர் நடத்திய வாலிபர் முகாமிற்கு ஜெபக்குழு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அப்போது ஒருநாள், எனது நண்பன் சகோதரன் கழிவறைக்குச் சென்றிருந்தபோது, கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை உள்ளே தவறவிட்டுவிட்டான்.எனினும், அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட அவனுக்கு மனமில்லை. அவன் வெளியே வந்தபோது செய்த முதல் செயல், அந்த கழிவறைக்கு காவலாக நின்றதே. வேறு யாரையும் கழிவறைக்குள் செல்ல அனுமதிக்காமல், வேறு கழிவறைக்குச் செல்லுங்கள் இதிலே எனது கைக்கடிகாரம் விழுந்துவிட்டது நான் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். நானும் அவனுடன் சேர்ந்து பல வழிகளில் அதனை எடுக்கப் போராடியும், ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் விட்டுவிட மனமற்ற அவன் சிலரை அழைத்து வெகுநேர போராட்டத்திற்குப் பின்னர் அதனை வெளியே எடுத்து லைப்பாய் சோப்பினால் அதனை தீரக் கழுவி தன் கையிலே கட்டிக்கொண்டான்; அப்போது அவனது முகத்தில் இருந்த ஆனந்தத்தைக் கண்டவன் நான்.

எனக்கருமையானவர்களே, மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாகும் (லூக். 15:10) என்று இயேசுவும் சொன்னாரே. இதற்காகவே, அவர் பாவிகளைத் தேடித் தேடிச் வந்தார். பாவிகளை பாவத்தோடு விட்டுவிடவில்லை. பாவிகள் தன்னிடத்தில் தானாகவே மனந்திரும்பி வரட்டும் என்று காத்திருக்கவில்லை; அவரே தேடிவந்தார். பாவிகளை பாவத்தினின்று பிரிக்க தன்னையே சிலுவையில் உடைக்கக் கொடுத்தார். பாவிகளோடு பந்தியிருந்தார் (மத். 9:11), பாவிகளுக்கு சிநேகிதனாயிருந்தார் (மத். 11:19), 'நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்' (லூக். 5:8) என்று சொன்ன பேதுருவை பாவியாக அப்படியே விட்டுவிடாமல், சீஷனாக்கி கூட அழைத்துக்கொண்டுபோனார் (லூக். 5:8,10). இயேசு பாவிகளோடு பழகியதற்கான காரணம் நமக்குத் தெரிகிறதல்லவா? சகேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றபோது, 'இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்' (லூக். 19:7) என்று ஜனங்கள் முறுமுறுத்தார்கள்; ஆனால், அவரது வருகை அந்த வீட்டிற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது. இயேவால் குணமாக்கப்பட்ட குருடனிடத்தில், 'இந்த மனுஷன் பாவி' (யோவான் 9:24) என்று சொன்னார்கள், ஆனால் அந்தக் குருடனுடைய கண்களோ திறந்திருந்தது. 'உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது' என்று சொல்லி பாவத்தினின்று பாவியைப் பிரித்தெடுத்தார்.

பாவிகளை இயேசு ஒதுக்காதபடியினாலே, பாவிகளும் அவரைத் தேடிவந்தார்கள் (லூக். 7:37). சகல ஆயக்காரரும், பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்திற்கு வந்தார்கள் (லூக். 15:1). அவர்களை அவர் தள்ளிவிடவில்லை, அவர்களை விட்டு அவர் ஒதுங்கிப்போய்விடவுமில்லை.

ஆனால், பரிசேயரும் வேதபாரகருமோவென்றால், பாவிகளைக் கண்டு ஓரம்போய்க்கொண்டிருந்தனர். லேவியனும், ஆசாரியனும் அடிபட்டுக்கிடந்தவனைக் கண்டு அப்புறமாய் போய்க்கொண்டிருந்தனர்; மனிதாபிமானமற்றவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். எனவே, பாவிகளும் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கண்டு ஓரமாய் ஒதுங்கிக்கொண்டிருந்தனர். பாவத்தின் பிடியில் சிக்கிக்கிடப்போரைக் கண்டு நாம் ஒதுங்கிச் செல்வோரா நாம்? பாவிகள் நம்மைத் தேடிவரவேண்டும், அவர்களை நாம் ஏற்றுக்கொண்டால்தான், ஜீவ ஊற்றினால் அவர்கள் பாவங்களைக் கழுவமுடியும். பாவிகளை தூரத்தில் துரத்திவிட்டால், அவர்கள் பாவங்களை உணர்த்துவது எப்படி? பாவிகளைக் கண்டு ஓரம்போகவேண்டாம்; கூடையில் இருக்கும் மீன்களுக்கல்ல, கடலில் கிடக்கும் மீன்களுக்காகப் பிரயாசப்படுவோம், வலையை வீசுவோம்.

இயேசுவைப்போல, பாவிகளை நேசிக்கும் வளர்ச்சி நமக்குள்ளும் உண்டாகவேண்டுமென்றால், அவருடைய போதித்தவைகளில் நாம் பயிற்சிபெறவேண்டும். இல்லயென்றால், பாவத்திலிருந்து நாம் பிரிந்து வந்திருந்தாலும், பரிசுத்தவான்களாக நம்மை அடையாளம் காட்டினாலும், பாவிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இராது. இந்த வட்டத்திற்குள் அடைந்து கிடப்போர் ஏராளம். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே (லூக் 6:32-34) என்று சொன்னார். ஓரம்போய்கொண்டிருக்கிறவர்களே! செயல்களில் நீங்களும் பாவிகளும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள் என்பதை என்று எச்சரித்தார். அதைக் காட்டிலும் மேற்படிக்கு முன்னேற வர இயேசு அழைப்பு விடுத்தார்.

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள் (லூக் 6:35-37); உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் (மத் 5:44). நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே (மத் 5:39-42) என்றார்.

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? (மத், 5:46,47)

பாவத்தைவிட்டு விலகி பரிசுத்தவான்களுடைய கூட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், பாவிகளைக் காட்டிலும் மேன்மையானவைகளைச் செய்கிறோமா? இல்லையெனில், பாவிகள் எப்படிச் செய்கிறார்களோ, அப்படியே செய்துகொண்டிருக்கிறோமா? வித்தியாசமில்லாமல் வாழ்ந்தால், வாழ்க்கையில் நாம் அவர்களுக்குச் சமமானவர்களாகவே இருப்போம் என்பதை மறந்துவிடவேண்டாம். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி