Skip to main content

நீதிக்காக நிலைதவறாதே

நீதிக்காக நிலைதவறாதே


 

யூதர்களது வம்ச வரலாற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை; தகப்பன், மகன் என்ற உறவே உயர்ந்து நின்றது (லூக். 3:23-38, மத். 1:1-16). பெண்களோ, பிள்ளைகளைப் பெற்றெடுக்க உபயோகிக்கப்படும் கருவிகளைப்போலவே பெரும்பாலும் கருதப்பட்டனர். என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் ஆண்களுக்கான வரிசைகளுக்கிடையே, தாமார், ராகாப், பத்சேபாள், ரூத் மற்றும் மரியாள் ஆகிய ஐந்து பெண்களின் பெயர்கள் ஆக்கிரமித்து நிற்பது தியானத்திற்குரியது. தவறினபோதிலும் திருந்திவாழ்ந்ததால் தாமார், ராகாப் என்பவர்களும், தாவீது தன்னைத் திருத்திக்கொண்டதினால் (சங். 51) பெயர் குறிப்பிடப்படாமல் பத்சேபாளும், தடுமாறாமல் தைரியமாக நின்றதால் ரூத்தின் பெயரும், தெரிந்தெடுக்கப்பட்டுமளவிற்கு கறைபடாத வாழ்வு வாழ்ந்ததால் மரியாளுடைய பெயரும் வரலாற்று வரிகளில் வரையப்பட்டுவிட்டனவே. மனிதர்களின் பட்சபாதத்தை பரலோகம் ஏற்றுக்கொள்வதில்லை; எனவே, பவுல், நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலா 3:26,28) என்று தெளிவாக எழுதுகின்றாரே. 


கலிக்கமிடப்படாத கண்கள்


கண்களுக்கு கலிக்கமிடப்படாதவர்களும், இருளிலேயே பயணத்தைக் கழித்துக்கொண்டிருப்போரும் எப்போதும், எங்கேயும் இடறிவிழும் ஆபத்தைச் சுமந்தவர்களாகவே வாழ்ந்துகொண்டிருப்பர். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார் (ஆதி 38:6,7). தொடர்ந்து, சகோதரனாகிய ஓனானுக்கு தாமார் கொடுக்கப்பட்டபோது, அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான் (ஆதி 38:9). அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார் (ஆதி 38:10). ஆனால், யூதாவோ, 'மகன்களின் மரணத்திற்கு மருமகளே காரணம்' என்று யூகித்தான். அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; புருஷன் வீட்டையே அடைக்கலமாக நம்பி வந்தவளை, தகப்பன் வீட்டை நோக்கி அனுப்பியது அநாகரீகமல்லவா. அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள் (ஆதி 38:11); என்றபோதிலும், யூதாவின் குமாரனான சேலா பெரியவனாகியும் தாமார் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை. (ஆதி. 38:14) 

நாமும் அநேக நேரங்களில், தவறுக்கான காரணங்களைக் கண்டுகொள்ள முற்படாமல், அநியாயங்களை அடுத்தவர்மீது சுமத்திவிடுகின்றோம்; நம்மிடமிருக்கும் பொல்லாப்புகளைக் கண்டுகொள்ள இயலாத குருடர்களாக அடுத்தவர்களைப் புறம்பே தள்ளிவிடுகின்றோம்; நம்முடைய பொல்லாப்பு நமக்குத் தெரியவேண்டுமென்றால் நம்முடைய கண்களுக்கு கலிக்கமிடவேண்டியது அவசியம் (வெளி.3:18). 'இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்' (மத் 7:4,5) என்று போதித்தாரே இயேசு கிறிஸ்து. பொல்லாப்பை எடுத்துப்போட்டால், புதுவாழ்வு கிடைக்கும். தாவீதின் கண்களை 'பத்சேபாள் மூடிக்கொண்டபோது', அந்த உத்திரத்தை உதறிவிடாமல், அவளோடு உறவுகொண்டதும், கணவனான உரியாவைக் கொன்று அவளை தனக்கு மனைவியாக்கிக்கொண்டதும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது (2சாமு 11:27); என்றபோதிலும், மனந்திரும்பினதினாலே அவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது. 


 கண்களில் சிக்கிய கால்கள்


மீன்களைப் பிடிக்கச் செல்லும் நமது கால்கள் வலைகளில் மாட்டிக்கொள்ளக்கூடாது. அவ்வாறே, தீமை செய்யும் மனிதர்களைப் பிடிப்பதற்கு, தீமையான வலைகள் நமது கைகளில் காணப்படவும் கூடாது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று தாமார் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள்; அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியானாள் (ஆதி 38:14-18). வேடமிட்டதைத் தொடர்ந்து, 'மாமனாருக்காக வேசியாகவே தன்னை மாற்றிக்கொண்டாளே தாமார்.' மாமனாருக்கு தாமார் வலைவிரித்தாலும், மாட்டிக்கொண்டதோ தானும்தானே. மற்றவர்களுக்கு நீதியைக் கற்பிக்க, நாம் தவறுசெய்யும்படித் தள்ளப்படக்கூடாது. கணவன் இறந்தபோது, வீட்டிலே விதவையாகிப்போயிருந்த மருமகளாகிய தாமாரைக் குறித்து கவலைப்படாமல், மனைவி இறந்ததும், சரீரப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக வேசியைத் தேடிப் போனதால், வீட்டை வீட்டு விரட்டின மருமகளிடத்திலேயே விழுந்துவிட்டான் யூதா. 

யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான் (ஆதி 29:20,21). ஆனால், அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான் (ஆதி 29:23). காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான் (ஆதி 29:25). இதுபோன்ற நிலையே யூதாவின் வாழ்க்கையிலும் ஏற்பட்டது. 

கருவினால் வரும் எதிர்ப்பு

பாவம் கழுவப்படாவிட்டால், அது நிச்சயம் ஓர் நாள் பிரபலமாகும். தனக்கு நீதி செய்யப்படவேண்டும் என்று தாமார் செய்த செயல், பாவமாகவே பிறரால் பிரபலமாக்கப்பட்டது. யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்றுதானே கேட்டான் கேட்டான். அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள் (ஆதி 38:20,21). தாசியே இல்லாத இடத்தில் தாமார் வேசியாக எண்ணப்பட்டுவிட்டாளே. யூதாவின் சிநேகிதன் தாசியைத் தேடினபோது, அவ்விடத்து மனிதர்கள் யூதாவின் சிநேகிதனை வேசித்தனம் பண்ணும்படியாக வந்தவன் என்றுதானே நினைத்திருப்பார்கள். அத்துடன், யூதா வேசியைத் தேடிச்சென்றது, சிநேகிதனுக்கும் வெளியாகிவிட்டதே. 

அப்படியே, தாமாரின் தவறும் ஊரறிய பிரபலமாகத் தொடங்கியது; ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். மருமகள் வேசித்தனம் செய்துவிட்டால் சுட்டெரிக்கப்படவேண்டும்; ஆனால், மாமனாராகிய தான் வேசித்தனம் பண்ணினால் வேசிக்கு பரிசாக ஆட்டுக்குட்டியைக் கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் யூதாவின் சட்டம். தாமார் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள் (ஆதி 38:24,25). அப்போது, அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே (ஆதி 38:26) என்று யூதா சொன்னபோதிலும், தான் நீதியுள்ளவள் என்பதை நிரூபிக்க, மாமனையே குறிவைத்தது தவறுதானே; என்றபோதிலும், 'அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை' (ஆதி 38:26) என்ற வார்த்தை, மனந்திரும்புதலினால், இருவர் வாழ்விலும் மறுவாழ்வு உண்டானது என்பதை நிரூபிக்கின்றது. 

விபச்சாரத்திலே கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை கல்லெறியும் நோக்கத்துடன் இயேசுவினிடத்தில் ஜனங்கள் கொண்டுவந்தபோது, இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். என்றாலும், என்ன அவர் என்ன எழுதுகின்றார் என்பதை அவர்கள் கவனிக்காமல், ஓயாமல் அவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார் (யோவா 8:6-8). அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள் (யோவா 8:9); கல்லெறியும்படியாக அங்கே நின்றவர்கள் அனைவரும் பாவிகளே என்பதைத்தானே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது. அவள்மீது எறியும்படியாக யாராவது ஒருவன் ஒருவேளை கல்லை எடுத்திருப்பானென்றால், அவ்வேளையிலேயே இயேசு கிறிஸ்து அவனது பாவத்தை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். எனவே, 'நாம் தப்பித்தால் போதும், நமது பாவம் வெளியே தெரியாதிருந்தால் போதும்' என்ற பயத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்; எனினும், போகும் வழியில் அவர்கள் எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும்போது, பாவிகள் என்ற போர்வையிலேயே அவர்களது பார்வை காணப்பட்டிருக்கும். இந்த நிலையையே யூதாவும் சந்தித்திருப்பான். 

உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தாவீது எடுத்துக்கொண்டபோது, கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங் கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப் போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில்வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான். (2சாமு 12:1-4) 

கர்த்தர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்பி உணர்த்தினார். எனினும், தீர்க்கரிசியின் உதாரணத்தை உணர்ந்துகொள்ள இயலாத தாவீது: உதாரணத்தில் சொல்லப்பட்ட மனுஷனை யாரோ ஒருவன் என்று அறிந்து அவன்மீது மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான் (2சாமு 12:5,6). அடுத்தவனென்றால், எரிக்கப்படவேண்டும், கல்லெறியப்படவேண்டும், மரணத்திற்குப் பாத்திரவானாக எண்ணப்படவேண்டும்; ஆனால், 'தான்' என்று வந்துவிட்டால், தப்பியோடுவதா? நாத்தான் தாவீதை நோக்கி, 'நீயே அந்த மனுஷன்' (2சாமு. 12:7) என்று சொன்னபோது, தன்னுடைய தவற்றை உணர்ந்தான். நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்று உணர்ந்தவனாக தாவீது மனந்திரும்பியபோது, நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் (2சாமு 12:13) என்றான். ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷpக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான் (2சாமு 12:14). தவறுசெய்தது தானே, என்பதை தாவீது அறிந்தபோது, மனந்திரும்பி மீண்டும் தேவனிடம் தஞ்சம் அடைந்தான். தாமாருக்குக் கொடுத்தனுப்பப்பட்டதும் ஆட்டுக்குட்டியே, தாவீதுக்கு உவமையாகச் சொல்லப்பட்டதும் ஆட்டுக்குட்டியே; நம்முடைய பாவத்திற்கு பலியானதும் இயேசு கிறிஸ்து என்னும் ஆட்டுக்குட்டியே.


 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி