Skip to main content

எனக்கு விருந்தாளி உனக்கோ எதிராளி

எனக்கு விருந்தாளி
உனக்கோ எதிராளி

 

எந்த ஒரு மனிதனுக்கும் தேவன் எதிரியல்ல; ஆனால், மனிதனே தன்னை தேவனுக்கு எதிரியாக மாற்றி அவரிடத்தில் மாட்டிக்கொள்கிறான். பாவத்துடன் எதிர்த்துருவத்தை நோக்கி பயணிப்பதே அதற்கான பிரதான காரணம். தேவன் பாவிகளை நேசிக்கிறார் ஆனால், பாவத்தை அல்ல. பாவத்திலிருந்து மனிதனைப் பிரிப்பதற்காக தனது சொந்தக் குமாரனையே விலைக்கிரயமாகக் கொடுத்தவர் தேவன். என்றாலும், இந்த அறிவு இல்லாமல், இறுதிவரை, இறக்கும்வரை, வாழ்க்கையின் முடிவுவரை பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல், தண்ணீரைப் போல அள்ளி அள்ளி பாவத்தையே பருகிக்கொண்டேயிருக்கும் மனிதனை தேவன் தள்ளிவிடுவது நிச்சயம். தேவன் இரட்சிப்பை அருளுகிறவர், அவரால் மரணத்திற்கு நீங்கும் வழிகள் உண்டு (சங் 68:20); எனினும், சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைக்கிறவர் அவர் (சங் 68:21). தேவனை விருந்தாளியாக்கி, தேவனிடத்தில் விருந்தாளியாக இருக்கவேண்டிய மனிதன், இவ்விரண்டு விருந்தோம்பல்களையும் இழந்து வீதியில் நிற்கும்போது, சத்துரு தனது வீட்டிற்கு இழுத்துச் சென்று அவர்களை விருந்தோம்புகிறான்; சத்துருவின் உணவே, வீம்புடன் தேவ ஜனத்திற்கு விரோதமாய் அவர்களை துணிந்தெழுப்பிவிடுகின்றது. தேவ ஜனத்திற்கு விரோதமாகவும், தேவ திட்டங்களுக்கு தடைகளாகவும், ஆத்தும அறுவடைக்கு இடற்கல்லாகவும் மாற்றுகின்றான். என்றாலும், நமது வீட்டுக்குள் விருந்தாளியிருக்கும் தேவனால் அவர்கள் வீழ்தப்படப்போகிறவர்களே.

என் கர்த்தர் பரிசுத்தத்தின் பக்கம்

தேவன் பரிசுத்தத்தின் பக்கம்; இதில் நாம் சந்தேகம் கொள்ளவேண்டிய அவசியமில்லை; இந்த பரிசுத்தமே எதிரிக்கும் எல்லையாக வேலியாக மாறிவிடுகின்றது. 'நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?' (யோபு 1:10) என்றான் சாத்தான். அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிரசங்கி 10:8) இதுவே சத்துருவுக்கு பொருத்தமான வாக்குத்தத்தம். யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான் (யோசு 5:13). அப்பொழுது அவர் தன்னை 'கர்த்தருடைய சேனையின் அதிபதி' என்று அடையாளப்படுத்திக்கொண்டு, 'உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது' என்றார் (யோசு. 5:15).

எகிப்திலிருந்த தன் ஜனத்தை விடுவிக்க மோசேயை அனுப்ப கர்த்தர் சிந்தங்கொண்டபோது, அது அக்கினியிலேயே தொடங்கியது. கர்த்தருடைய தூதனானவர் முட்செடியிலே உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று மோசேக்கு தரிசனமானார். மோசே அந்த முட்செடியை உற்றுப் பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது (யாத். 3:2). அது முட்செடியை எரிக்கிற அக்கினி அல்ல, மோசேயை எரிக்கிற அக்கினியும் அல்ல; அது, பரிசுத்தத்திற்கும் பரிசுத்தமல்லாததற்கும் உள்ள மாபெரும் வித்தியாசத்தை நினைப்பூட்டுகிற அக்கினி. தேவனுக்குப் பிரியமற்றவைகளைக் கழற்றிப்போட்டுவிட்டு, தேவனை நெருங்கும்படி அழைக்கிற அக்கினி. அழைத்த தேவன் அக்கினியின் நடுவே தேவன் இருந்தார் (யாத். 3:4). உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார் (யாத் 3:5). நாம் பாவத்தின் பக்கம் நிற்க அல்ல, பரிசுத்தத்தின் பக்கம் நிற்க அழைக்கப்பட்டவர்கள். பாவத்தின் பக்கம் நிற்பவருக்கு அவர் எதிராளி, பரிசுத்தத்தின் பக்கம் நிற்போருக்கோ அவர் விருந்தாளி.

பிரியமானவர்களே, தேவன் சேனைகளின் கர்த்தராயிருக்கிறார், பாவத்தை எரிக்கும் அக்கினியாயிருக்கிறார்; பாவங்களை விட்டுவிட்டு வந்தால் நீங்களும் அவருக்கு விருந்தாளியாகலாம். தேவனுக்கு விருந்தாளியாக உங்களுக்கு விருப்பமோ? அக்கினியாயிருக்கும் அவரைச் சந்திக்கவும், அவரது சத்தத்தைக் கேட்கவும் உங்களுக்கு விருப்பமோ? அவரது அழைப்பை அறிந்துகொள்ள விருப்பமோ? அப்படியென்றால், நீங்கள் கழற்றிவிடவேண்டியவைகளை கழற்றிவிட்டு அக்கினியை நெருங்கிவாருங்கள்; ஆயுதங்களை எறிந்துவிட்டு ஆண்டவரை பாருங்கள், அவர் உங்களை விருந்தாளியாக வரவேற்பார். தேவன் நம்மை அல்ல, நமது பாவத்தை எரிக்க விரும்புபவர்; ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாமல், பாவத்துடனேயே வாழ்ந்துகொண்டிருப்போரின் வாழ்க்கை சாம்பலாக எரிந்துபோம். அப்படிப்பட்டோர், தங்கள் அழைப்பையோ, தேவ சத்தத்தையோ, தேவ சித்தத்தையோ அறிந்துகொள்ள முடியாமல் வாழ்க்கையை பாவத்தோடு முடிக்கும் நிலை உண்டாகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், நம்மைச் சுத்திகரிக்க இடம்கொடுப்போமென்றால், பாவத்திற்கு விலகி, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற தேவனோடு விருந்தாளியாக வாசம்பண்ணலாம்.

என் கர்த்தர் பரிசுத்தவான்களின் பக்கம்

அவ்வாறே, சீரிய ராஜா எலிசாவை பிடிக்கும்படி வகைதேடியபோது, குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள் (2இரா 6:14). பகைவனுடைய குதிரைகளையும், இரதங்களையும், பலத்த ராணுவத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான் எலிசாவின் வேலைக்காரன்; ஆனால், எலிசாவோ, தன்னைச் சுற்றிலும் நிற்கிற அக்கினிமயமான குதிரைகளையும், இரதங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான் (2இராஜா. 6:17). பகைவனுடைய சேனையில் இல்லாத அக்கினி, எலிசாவை சுற்றி நின்ற சேனையோடு கூட இருந்தது. அது பகைவர்களுக்கு எதிராகவும், எலிசாவுக்கோ மதிலாகவும் நின்றது.

மேலும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் தன்னை வணங்காததை நேபுகாத்நேச்சார் கண்டபோது, சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்ளையிட்டான். அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது (தானி 3:22); அவர்களோ அக்கினியின் மத்தியிலும் உயிரோடு இருந்தார்கள். பகைவர்கள் கொழுத்தும் தீ அவர்களைத்தான் அழிக்கும்; பகைவர்கள் வளர்க்கும் சிங்கங்கள் அவர்களைத்தான் கொல்லும். 'தான் வெட்டிய குழியில் தானே விழுவான்' என்ற பழமொழியைப் போன்றது அது. ஆமான், தான் செய்த தூக்குமரத்தில் அவனே தொங்க நேரிட்டதே.

மோசே கண்ட முட்செடியும் எரிந்துபோகவில்லை, எலிசா இருந்த மலையும் எரிந்துபோகவில்லை, அக்கினியில் போடப்பட்ட சாத்ராக், மேஷhக், ஆபேத்நேகோ என்பவர்களும் எரிந்துபோகவில்லை; இந்த மூன்று சம்பவங்களும் நமக்கு கற்பிப்பது என்ன? தேவனுடைய அக்கினி நம்மை எரிப்பதற்கல்ல; சத்துரு நம்மை தொடாதபடி தடுப்பதற்கே. அவர் சத்துருவுக்கு எதிராளி நமக்கோ விருந்தாளி.

அவர் பட்சிக்கிற அக்கினிதான், எரிச்சலுள்ள தேவன்தான் (யாத். 24:17; உபா. 4:24) என்றாலும் அவருடைய அக்கினி தன்னுடைய ஜனங்களை பட்சிப்பதில்லை, அவருடைய எரிச்சல் தனக்குப் பிரியமானவர்கள் மேல் மூளுவதில்லை. இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து, ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய். உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா 9:1-3) என்பதே தன்னை அண்டி நிற்கும் ஜனத்திற்கு தேவன் கொடுத்த வாக்கு. மேலும், பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று; அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார். ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச்சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப் பண்ணினார். அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார் (2சாமு 22:8-15) என்பது, நம்மிலும் பலவான்களாயிருக்கிற சத்துருக்களுக்கும், பகைஞருக்கும் நம்மை விடுவிக்கும் தேவனின் தோற்றம் இது. நம்முடைய ஆபத்து நாளிலே அவர்கள் நமக்கு எதிரிட்டு வரலாம், ஆனால் கர்த்தரோ நமக்கு ஆதரவாயிருப்பார் (2சாமு. 22:19); நாம் கர்த்தரது அரவணைப்பிற்குள் இருக்கிறோம். அவரது சிறகின் கீழே தஞ்சமடைந்திருக்கிறோம்.

யாருக்கு தேவன் எப்படி இருக்கின்றார்? என்ற அறிவு அநேகருக்கு இன்றைய நாட்களில் இல்லை. அதனாலேயே, எதிரியை பார்த்து பட்சிக்கிற அக்கினியாய் போய்க்கொண்டிருக்கிற தேவனை, தன்னைப் பார்த்துதான் பட்சிக்கிற அக்கினியாய் வந்துகொண்டிருக்கிறார் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்தில், பிள்ளைகளின் வாழ்க்கையில் தோல்விகளோ, சோர்புகளோ, விரும்பாத காரியங்களையோ சந்திக்க நேரிடும்போது, அந்த சம்பவங்கள் அனைத்துக்கும் தேவனை காரணம் என்று தேவன்பேரில் குற்றஞ்சாட்டிவிடுகிறார்கள், அவரையே அவைகளுக்குப் பொறுப்பாக்கிவிடுகிறார்கள். 'தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது' (மத். 12:25) என்பதை போதித்த இயேசு, தன்னுடையவர்களுக்கு விரோதமாய் எழும்பி நிற்பாரோ.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இருந்த நாட்களில், தனது ஜனத்திற்கும், எகிப்திய ஜனத்திற்கும் வித்தியாசம் காட்டினார் தேவன். வாதைகளால் எகிப்தியரை தேவன் பாதித்தபோதிலும், இஸ்ரவேலரின் பாதைகளோ பாதுகாக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தினை காண்பித்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை (யாத். 9:6). கர்த்தருக்கு ஆராதனை செய்யவிடாமல் எகிப்தியர் இஸ்ரவேலரை தடுக்கத் தடுக்க கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரிடரிடமிருந்து பிரித்துக் காண்பித்துக்கொண்டேயிருந்தார். வாதைகள் அனைத்தும் எகிப்தியருக்கே வந்தது, இஸ்ரவேலருக்கு அல்ல. எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது (யாத் 9:25,26).

தேவ ஜனத்திற்கு விரோதமாய் எழும்பி நிற்கிறவர்கள் நினைவில் நிற்கவேண்டிய அறிவு இதுவே. தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும். அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை (எண்; 23:22,24) என்ற பிலேயாமின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்குரியது.

வேதத்தின் சோதோம், கொமோரா சம்பவம் கற்றுத்தரும் சத்தியம் நமக்கு சக்தியைத் தரட்டும்.

சோதோம், கொமோராவின் மக்கள் கர்த்தருக்கு விரோமாய் பாவத்தில் வாழ்ந்துவந்தார்கள். பாவம் அவர்களிடத்தில் பெருகிக்கொண்டேயிருந்தபோது, 'சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்' என்றார் கர்த்தர். (ஆதி 18:21). பாவிகளை மீட்பதற்காக தனது குமாரனை மாத்திரம் அனுப்பினவரல்ல, பாவத்திற்கு விரோதமாகவும் எழுந்துவருகிறவர் தேவன். 'எனக்கு விரோதமாய் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்' (யாத். 32:23) என்றார் தேவன். இதை அறியாமல், தங்கள் மனம்போன போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள் பலர். தேவன் பாவத்திற்கு எதிராய் நிற்கிறவர் என்பதை அறிந்திருந்தபடியினால்தான், யோசேப்பு, 'தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி?' (ஆதி. 39:9) என்ற கேள்வியை முன்வைத்தான். மேலும், 'நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் (2 சாமு. 12:13) என்று தாவீதும் அறிக்கையிடுகின்றான்.

தொடர்ந்து பாவத்தில் நீடித்துக்கொண்டிருந்தால், நீங்கள் தேவனுக்கு விரோதமாக வாழ்வதோடு மாத்திரமல்ல, தேவனையும் உங்களுக்கு விரோதியாகவே மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. சோதோம், கொமோராவைச் சந்திக்க அவர் புறப்பட்டு வந்ததைப் போல, இரண்டாம் வருகையில் உங்களைச் சந்திக்கவும் புறப்பட்டு வர இயேசு ஆயத்தமாயிருக்கிறார்; அந்நாட்களில் பாவத்தில் வாழ்ந்தவர்கள் நித்திய அக்கினிக்கு இரையாக்குவார். அவருடைய பட்சத்தில் நீங்கள் நிற்கவேண்டுமென்றால், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்புக்கும், பரிசுத்தத்திற்கும் உங்கள் வாழ்க்கையில் இடமளித்தேயாகவேண்டும்.

ஆபிரகாம் வீட்டில் நடந்த விருந்து: பாவத்தின் மேல் இத்தனை கோபத்தை தேவன் காட்டினாலும், நம்மைச் சந்திக்கும்போது அந்த கோபம் வெளிப்படுவதில்லை. சோதோம், கொமோராவுக்கு விரோதமாய் தேவன் வந்துகொண்டிருக்கும்போது, ஆபிரகாம், பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து: ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள் (ஆதி 18:1-5). ஆபிரகாம் அவருக்கு விருந்து கொடுத்தான். சோதோம், கொமோராவை அழிக்க புறப்பட்டு வந்தவர்கள், ஆபிரகாமின் வீட்டிற்கோ விருந்தாளியாக மாறினார்கள். ஆபிரகாமின் அழைப்பினை ஏற்று, அவனது வீட்டிற்குச் சென்று அவன் வைத்தவைகளைப் புசித்தார்கள். விருந்துமாத்திரமல்ல, அழிக்கப் போய்க்கொண்டிருக்கிற வழியில் ஆசீர்வாதத்தையும் பெற்றான் ஆபிரகாம்.

லோத்து வீட்டில் நடந்த விருந்து: அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள் (ஆதி 19:1-3). வீதியிலே இராத்தங்குவோம் என்று அவர்கள் சொன்னதற்குக் காரணம், வீட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த ஆண்புணர்ச்சிக்காரர்களின் அருவருப்பினாலேயே.

அழிவுக்கு ஆயத்தமாயிருந்த நகரமாயிருந்தாலும், அந்த நகரத்திலும் தூதர்கள் விருந்துண்ண ஒரு வீடு ஆயத்தமாயிருந்தது. இதற்காகத்தான், லோத்து அதனை தெரிந்துகொள்ள ஆண்டவர் அனுதித்திருந்தாரோ! வீட்டிற்குள் தங்கியிருந்த இவர்களை, அந்த நகரத்தார் வீதியில் தங்கியிருந்ததைக் கண்டிருந்தால், போர் நேருக்கு நேர் மூண்டிருக்கும். எதிருக்கு எதிராய் மோதியிருப்பார்கள். லோத்துவின் வீட்டைச் சுற்றிலும் நின்றவர்களை குருட்டாட்டம் பிடிக்கச் செய்தது, முழு நகரத்தையுமே செய்ய நேரிட்டிருக்கும். இயேசு சிலுவையில் அறைவதற்கு ஒரு கூட்டம் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோதிலும், அவர் விருந்துகொள்வதற்காக ஒருவன் தன் வீட்டையும் ஆயத்தப்படுத்திவைத்திருந்தான் (மாற் 14:15,16).

சோதோமோ எரிந்தது: ஆபிரகாமின் வீட்டில் விருந்து முடித்து புறப்பட்டபோது, நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார் கர்த்தர் (ஆதி 18:21). 'அழிவு' என்ற வார்த்தை ஆண்டவரின் வரியிலிருந்து புறப்படாதிருந்தபோதிலும், 'சோதோம் கொமோராவின் பாவத்தை அறிந்த ஆபிரகாம்' அந்தப் பட்டணங்களுக்கு அவரால் அழிவே வரப்போகிறது என்பதை தனக்குள் உறுதி செய்துகொண்டான்; எனவே, துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? (ஆதி 18:23) என்று கேட்கிறான். பார்த்து அறியப்போகவில்லை, பார்த்து அழிக்கப்போகிறார் என்பதை அறிந்துகொண்டான் ஆபிரகாம்.

அழிவின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருந்த தூதர்கள், லோத்துவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, சோதோமின் நிலையையும் அதின் பாவத்தின் கூக்குரலையும் கண்கூடாகக் கண்டு, அறிந்து உறுதி செய்தபோது, அழிக்க முடிவு செய்தார்கள், எனவே, லோத்துவை நோக்கி: நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள் (ஆதி 19:13). செய்திருக்கிறார்களோ இல்லையோ? என்று அறிய வந்த தூதர்கள், செய்திருக்கிறார்கள் என்று அறிந்ததும் அழிவை முடிவு செய்தார்கள். செய்திருக்கிறார்கள் என்பதை ஆபிரகாம் முன்னதாகவே அறிந்திருந்ததினாலேயே, அழிவிலிருந்து நீதிமானாகிய லோத்துவை காப்பாற்ற ஆண்டவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். ஆபிரகாம் கர்த்தரை பிடித்துவைத்திருந்தான் எனவே, ஆண்டவர் இரண்டு தூதர்களை சோதோம் கொமோராவை நோக்கி அனுப்பிவிட்டு ஆபிரகாமுக்கு முன்னே நின்றுகொண்டேயிருந்தார். தாத்தாவாகிய ஆபிரகாம் செய்த இந்தக் காரியத்தைத்தான், பேரனாகிய யாக்கோபு செய்தான். 'நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்' (ஆதி. 32:26) என்று ஆண்டவரை யாக்கோபு பிடித்துவைத்திருந்தான். பிரியமானவர்களே, இயேசுவைப் பின்பற்றுவோரே, தேவஜனம் என்று அழைக்கப்படுவோரே, தேவ நாமத்தை சுமந்து திரிவோரே ஆபிரகாமின் இந்த பணி இன்று நம்முடையது. 'பார்த்து அறிவேன்' என்று தானே பார்த்து அறியவேண்டும் என்று வந்திருந்த ஆண்டவரை, சோதோம் கொமோராவுக்குள் நுழையவிடாமல் ஆபிரகாம் பிடித்துவைத்துக்கொண்டான். ஆபிரகாமிடமிருந்து ஆண்டவர் விடைபெறுவதற்கு முன், அவனது விண்ணப்பத்திற்கு விடை கிடைத்தது.

ஆண்டவரை வீட்டிலிருந்து வழியனுப்பிவிடவில்லை, 'ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்' (ஆதி 18:16). தனது வீட்டில் விருந்தை முடித்த அவர் எங்கே போகிறார் என்பதை அறிய முற்பட்டான். ஆபிரகாம் கூடவே வருகிறதைக் கண்ட ஆண்டவர், 'நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?' (ஆதி. 18:18) என்று அவனுக்கு வெளிப்படுத்தினார்.

பிரியமானவர்களே, நம்முடைய வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்துவிட்டுப் போகிறார், நம்முடைய வீட்டில் விருந்து உண்டு செல்கிறார் என்ற சந்தோஷத்தில், அப்புறம் அவர் எங்கே சென்றாலும் கவலையில்லை என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்துவிடவேண்டாம்; தேவனது வழியை அறிந்துகொள்ள முற்படுங்கள், அவரது செயலை தெரிந்துகொள்ள பிரயாசப்படுங்கள், அப்போதுதான் மோசே இஸ்ரவேலருக்காக விண்ணப்பம் செய்ததுபோல, ஆபிரகாம் லோத்துவுக்காக விண்ணப்பம் செய்தது போல, நீங்களும் நீதிமான்களுக்காக விண்ணப்பம் செய்ய முடியும். ஆபிரகாம் ஆண்டவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான், ஆனால் அங்கோ மற்ற இரண்டு பேரும் லோத்துவைக் காப்பாற்றிக்கொண்டிருந்தனர். ஆபிரகாமின் ஜெபத்திற்கு அது உடனடி பதிலைப் போல காணப்பட்டாலும், மற்றொரு பக்கம் லோத்து அவர்களை விருந்தாளியாக்கிக்கொண்டதும் ஓர் காரணமல்லவா.

உங்கள் வீட்டிலும் அவர் விருந்துண்ணவேண்டுமென்றால், 'இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது' என்று சகேயுவுக்குச் சொல்லப்பட்டதைப் போல, உங்களைக் குறித்தும் சொல்லப்படவேண்டும். இரட்சிப்பின் வஸ்திரம் இல்லாமல் விருந்துக்கு வர முடியாது, மாற்று வழியில் பிரவேசிக்க இயலாது, ஒரே வழி இயேசுவே. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3:20) என்றார் இயேசு. சோதோம், கொமோராவைப் போல பாவத்தில் மூழ்கியிருக்கும் பூமி ஒருநாள் எரிந்து சாம்பலாகும்; நாமோ விருந்தாளியாயிருப்போம் தேவனுடைய வீட்டிலே. நம்முடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறவர், எதிரிகளைச் சந்திக்க எழுந்துபோவார்; இது எதிர்ப்போருக்கு தேவன் தரும் எச்சரிக்கையே. பாவத்தினால், தேவனுக்குப் பகைஞர்களாக வாழும் மனிதர்கள், கோபத்தினால் பரிசுத்தவான்களை எழுந்து அழிக்க முற்பட்டால், கொழுந்தாய் எரியும் தேவனின் அக்கினிக்கு அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு அக்கினி, நமக்கோ அதுவே அரண். இந்தச் செய்தியை எழுதி முடிக்கும்போது, என் நினைவில் உதித்த பாடலை நீங்களும் ஒருமுறை பாடிப்பாருங்கள்; ஆனந்தமடையுங்கள்.

Download the song

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எந்தன் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா

இந்த பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடிவா விண்ணினில் சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்

கஷ;டம் நஷ;டம் பட்ட பாடு மறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே பறந்துபோகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே நீங்குமே நீங்குமே

ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்தியகாலம் நானும் அங்கு வாழ்வேன் என்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவார்
என்றுமே என்றுமே என்றுமே

  

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி