Skip to main content

உன்னில் உள்ள வெளிச்சம்

 

உன்னில் உள்ள வெளிச்சம்




ஆகையால், உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. லூக்கா 11:35


இயேசுவின் பிறப்பைக் குறித்து, 'இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) என்று தீர்க்கதரிசனமாக முன் மொழிந்தார் ஏசாயா தீர்க்கதரிசி. இயேசு, தான் மாத்திரம் ஒளியாக பிரகாசிப்பதோடு மாத்திரமல்லாமல், நம்மையும் ஒளியாக மாற்றவே இவ்வுலகத்திற்கு வந்தார். எனவே, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத். 5:24) என்று இயேசு போதித்தார். யோவானும் இயேசுவைக் குறித்து, உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9) என்று எழுதுகின்றார். இயேசுவே வழி, இயேசுவே ஒளி என்று பிரசங்கிக்க மாத்திரம் அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்; இயேசுவண்டை ஜனங்களை ஈர்க்கும் வழியாகவும், இயேசுவண்டை ஜனங்களை நடத்தும் ஒளியாகவும் வாழ்ந்துகாட்டவேண்டியவர்கள்.

உலகத்திற்கு ஒளியாக வந்த இயேசுவை சிலுவையில் அறைந்தான் சத்துரு, இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்க வந்த யோவான் ஸ்நானகனை சிறையில் அடைத்து சிறைச்சேதம் செய்தான் சத்துரு; சுவிசேஷத்தைப் பிரசங்கித்த அப்போஸ்தலர்களையும் சிறையில் அடைத்து, இவ்வாறாக, ஒளியாக வந்தவரையும், ஒளியைக் குறித்து சாட்சிகொடுத்தவர்களையும் சித்திரவதைக்குட்படுத்தி, சுவிசேஷம் என்ற வெளிச்சம் இந்த தேசத்திலும், உலகத்திலும் பரவாதபடிக்கு சத்துரு செயல்படுகின்றான். எனினும், ஒளியாகிய இயேசுவை அடைத்துவைக்கக் கல்லறையால் கூடாமல் போயிற்று, காவலர்களால் கூடாமல் போயிற்று. சிலுவையானாலும், கல்லறையானாலும், பாதாளமானாலும் அத்தனையையும் மேற்கொண்டு இன்னும், இன்றும் உலகத்தில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது இயேசு என்னும் ஒளி. ஏரோது அடக்க நினைத்தபோதிலும், பரிசேயரும் சதுசேயரும் அடக்க நினைத்தபோதிலும், நியாயசாஸ்திரிகள் அடக்க நினைத்தபோதிலும், பிற யூதர்கள் அணைத்துவிடத் துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இயேசுவைத் தொட்ட அவர்களுக்குத் தோல்வியே எஞ்சியது. அப்படியே, கொடுஞ் சிறையிலும், சித்திரவதையிலும் இயேசுவை மறுதலியாமல், சரீரத்தை துன்புறுத்தும் சத்துருவுக்குக் கொடுத்துவிட்டு, ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புவித்த அப்போஸ்தலர்களாலும் பிசாசு தோல்வியையே தழுவினான். இவர்கள், மரித்தாலும் தன்னுடைய வாழ்க்கையின் ஒளி இருளாகாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொண்டவர்கள். ஆம், ஒளிக்காக ஜீவனைக் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள் நாம்; உலகத்திற்கு வழியைக் காட்ட வாழ்க்கையையே தத்தம் செய்ய அழைக்கப்பட்டவர்கள் நாம். நம்முடைய திரியை தூண்டி எரியச் செய்கிறவர் தேவன், ஆனால், சத்துருவோ அதைத் தீண்டி தீண்டி அணைத்துவிடவே வகைபார்த்துக்கொண்டிருக்கின்றான்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களானாலும், ஊழியர்களானாலும், மிஷனரிகளானாலும், போதகர்களானாலும் எரிந்துகொண்டிருக்கிற அவர்களுடைய திரியை அணைத்துவிட சத்துரு எடுக்கும் முயற்சிகளை நாம் அறிந்து, நம்மைத் தப்புவித்துக்கொள்ளவேண்டும். நம்மில் உள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு நாம் காத்துக்கொள்ளவேண்டும். நண்பர்களினாலோ, உறவினர்களினாலோ, பணிக்களத்திலோ, பணத்தைக் கொண்டோ, எதிர்காலத்தை நினைப்பூட்டியோ, பிள்ளைகளின் வாழ்வைக் காட்டியோ, துன்பத்தையும் துக்கத்தையும் கொடுத்தோ, வியாதிகளின் மூலமாகவோ நம்முடைய வாழ்க்கையில் எரிந்துகொண்டிருக்கிற ஒளியையும், நாம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற வெளிச்சத்தையும் அணைத்துவிட சத்துரு எடுக்கும் முயற்சிகளை அறிந்துகொள்ளுவோம்; எச்சரிக்கையாயிருப்போம். இருளில் இருக்கிற ஜனங்கள் நம்மில் வெளிச்சத்தைக் காணமுடியாதபடிக்கு நம்முடைய வாழ்க்கையை மாற்றிவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். இருளோடு நம்முடைய வாழ்க்கை கலந்துவிடக்கூடாது; இருளில் உள்ளோரினிடத்தில் உள்ள தேவனுக்கு விரோதமான பழக்கவழக்கங்கங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம்முடைய வாழ்க்கையில் தென்படக்கூடாது.

சகோதரர்களே! சகோதரிகளே! கிறிஸ்துவைப் பின்தொடரும் உங்கள் வாழ்க்கை, நீங்கள் விட்டு வந்த காரியங்களினால் மீண்டும் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள். சினிமா பார்ப்பதை விட்டுவிட்டேன் என்று சாட்சி சொன்ன பலர், தொலைக்காட்சித் தொடர்களில் தொலைந்துபோய்விட்டனர்; இதெல்லாம் பாவமல்ல, என்று இருளுக்குச் சாதகமாகவே பேசத் தொடங்கிவிட்டனர். திருமணத்திற்கென்று நல்ல நாளைத் தேடி, தேவன் நல்லது என்று சொன்ன ஆறு நாட்களை, பொல்லாதது என்று குறித்துவிடுகின்றனர். குடும்பப் பிரிவினைகளையும், விவாகரத்துக்களைப் பெருக்கி கிறிஸ்தவர்களை வேடிக்கையாக்கி வைத்திருக்கிறான் சத்துரு. கிறிஸ்தவ உலகத்திற்குள் நுழைந்துவிட்ட இருளை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல் கண் சொருகிப்போய் இருப்பவர்கள் ஏராளம், ஏராளம். வெளிச்சத்தையும், இருளையும் தேவன் வௌ;வேறாகப் பிரித்தார் (ஆதி. 1:4), ஆனால், பலர் வெளிச்சத்தையும், இருளையும் ஒன்றாக வைத்து வாழ முயற்சிக்கின்றனர். வெளிச்சம் இருக்கின்ற இடத்தில், இருள் இருக்க முடியாது என்ற கோட்பாட்டிற்கும் எதிராக, வெளிச்சமாகிய இயேசுவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருள் இருக்கிறது என்ற நிலைக்கு பலர் தங்களைத் தள்ளிக்கொண்டனர்.

ஒரு சகோதரியை அறிவேன்; விக்கிரக வழிபாடுகளில் சிக்கிக் கிடந்த அந்த வாலிப சகோதரி இயேசுவின் ரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார். அந்த சகோதரியினிடத்திலிருந்து வெளிச்சம் வெளிப்படத் தொடங்கியது. அந்த சகோதரியின் வாழ்க்கையின் மூலமாக அநேகர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளத் தொடங்கினர். ஆனால், திருமணம் செய்துகொள்ளும் வேளை வந்தபோதோ, பெற்றொர் அவளை விக்கிரக வணக்கமுள்ள ஓர் மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைத்தனர். திருமணம் முடித்த அந்த சகோதரியின் ஆவிக்குரிய வாழ்க்கையினை மெல்ல, மெல்ல சத்துரு திருடிக்கொண்டான். கணவருடன் இணைந்து விக்கிர வணக்கம் செய்பவராகவும் அந்தச் சகோதரியை மாற்றிவிட்டான். அந்த சகோதரியினிடத்திலிருந்த வெளிச்சம் இருளாகிவிட்டது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் நமது வெளிச்சத்தை, நண்பர்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ பறிகொடுத்து, பரலோகத்தை இழந்துவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி