Skip to main content

வஸ்திரம் விலகினால்...

 

வஸ்திரம் விலகினால்...



இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். (வெளி 16:15)


சரீரத்தையும் அதனை மூடும் வெளிப்புற வஸ்திரத்தையும்  மாத்திரமே காத்துக்கொள்வது வாழ்க்கையல்ல; மாறாக, நீதிக்கு  (வெளி. 19:8) முன் நமது உட்புறம் நிர்வாணமாகக் காணப்பட்டுவிடாதபடி நாம் கவனமாயிருக்கவேண்டும். உலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் காத்துக்கொண்டாலும், வஸ்திரத்தை இழந்து நின்றால், வருகையின் வெளிச்சத்தில் நிர்வாணம் வெளிப்பட்டுவிடும்.  ஆஸ்திகளை வைத்துக்கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தூரமாக அம்மணமாக வாழும் நிலைக்கு சத்துரு நம்மை தள்ளிவிடக்கூடாது. வெளிப்புறத்தில் விலையேறப்பெற்ற வஸ்திரம் (1 தீமோ. 2:9; 1 பேதுரு 3:3); ஆனால், உட்புறத்திலோ, மாம்சத்தால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தோடு (யூதா 1:23) நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது; யோசேப்பைப் போல உட்புற வஸ்திரம் கறைபடுவதற்கு முன் வெளிப்புற வஸ்திரத்தை விட்விட்டு ஓடவும் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டுமே (ஆதி. 39:12). யோபுவைப் போல, பவுலைப்போல சரீரப்பிரகாரமான     நிர்வாணத்தை சத்தியத்திற்காக ஏற்றுக்கொள்ளுவோம். (யோபு 1:21; 2 கொரி. 11:27)

ஆதாமும், ஏவாளும் தேவனால் உண்டாக்கப்பட்டு, தேவ மகிமையினால் மூடப்பட்டிருந்ததினால், நிர்வாணிகளாயிருந்தபோதிலும் வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி. 2:25). மகிமையால் அவர்கள் மூடப்பட்டிருந்தபோது, அவர்களுக்கு மரணமில்லாதிருந்தது; ஆனால், சத்துருவின் வார்த்தைக்குச் செவிகொடுத்து மகிமையின் வஸ்திரத்தை இழந்தபோதோ, மரணம் அவர்களை ஆட்கொண்டது (ஆதி. 3:19). இன்று, இரட்சிப்பின் வஸ்திரத்தால் நம்மை மூடிக்கொண்டால், தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களிலிருந்து நாம் விலகியிருந்தால், மறுவாழ்வில் மகிமையில் நாம் பிரவேசித்து மரணமில்லா வாழ்வினைச் சுதந்தரித்துக்கொள்ள முடியும். சத்துருவின் சத்தம், நமது ஆவிக்குரிய சரீரத்தை நிர்வாணமாக்கிவிடும்.

மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து நடத்திச்சென்றபோது. மலைக்கு மேலே மோசே தேவனைச் சந்தித்துக்கொண்டிருக்க, மலையின் கீழே இருந்த ஜனங்களோ, ஆரோனை நெருக்கி, தங்களிடத்திலிருந்த பொன்னை உருக்கி, நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள் (யாத் 32:1). தங்களிடத்திலிருக்கும் பொன்னை தேவனுக்கு விரோதமானதைச் செய்ய கொடுத்ததினால், ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான் (யாத் 32:25). தங்கத்தைத்தான் கழற்றிக்கொடுத்திருந்தார்கள்; எனினும், தங்களிடமிருந்த வஸ்திரத்தையும் அவர்கள் இழந்திருந்தார்கள். எதற்காக நாம் கொடுக்கிறோம்? தேவனை விட்டுவிட்டு தெய்வங்களை உருவாக்கவும், தேவனுக்குப் பிரியமற்றவைகளைக் கட்டியெழுப்பவும் கொடுக்கும் தானங்கள் கொடுப்பவர்களையே நிர்வாணமாக்கிவிடும். 

தேவனால் காக்கப்பட்டவன் நோவா; 'இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்' (ஆதி 7:1) என்று தேவனே சாட்சி கொடுத்தவன். எனினும், அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான் (ஆதி. 9:21). வெறிகொண்டது மாத்திரமல்ல, நிர்வாணமாயிருந்தது மாத்திரமல்ல, குமாரனை சபிக்கும் நிலை வரைக்கும் வீழ்ந்தது அவனது வாழ்க்கை. இரட்சிப்பின் வஸ்திரத்தையே விலகச்செய்யுமளவிற்கு, வாழ்க்கையில் எதற்கும் நாம் இடமளித்துவிடக்கூடாது. நம்முடைய வாழ்க்கையின் வஸ்திரம் விலகுமென்றால்; நாம் நிர்வாணமாகக் காணப்படுவது மாத்திரமல்ல, அடுத்தவருடைய சாபத்திற்கும் காரணமாகிவிடக்கூடும்.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம் 

(2 கொரி. 5:1-3) என்று பவுல் எழுதி உணர்த்துவது சரீரமாகிய கூடாரம் (2 பேதுரு 1:13,14) அழிந்துபோனாலும், நித்திய ஜீவனில் நாம் நிர்வாணிகளாயிருக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தவே.  வஸ்திரத்தை வேகச்செய்யும் காரியங்களிலிருந்து விலகி வாழ்வோம். (நீதி. 6:27)


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி