Skip to main content

முதுமை

 

முதுமை

 

ஓட்டத்தைத் தொடங்கும் ஓர் வீரன், ஒரு முனையிலிருந்து மறுமுனையைச் சென்று அடைந்துவிட்டால், அவனது முகத்தில் ஆனந்தமும் களிப்பும் தென்படும். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லதாக இருக்கவேண்டும் (பிரச. 7:8). நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2தீமோ 4:7) என்பது பவுலின் வார்த்தைகள். முதிர்வயதைத் தொடும்போது, பல்வேறு சிந்தனைகள் மனதில் எழத்தொடங்குகின்றன. ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது (மத். 26:41) என்ற இயேசுவின் வார்த்தைகளை அனுபவிக்கவேண்டிய நாட்கள் அவைகள். மாம்சத்தின் பலன் ஒடுங்கும்போது, ஆவியின் பலனும் ஒடுங்கிவிடக்கூடாது. சுகவீனம் நேரிட்டாலும், வியாதியினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தாலும் அதற்கும் நமது ஆவியின் பலத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால், மாம்சத்தின் பெலன் சுருங்கும்போது, ஆவியை சோர்பு நெருங்குகின்றது. இதற்கு இடம்கொடுத்துவிட்டால், ஆவியின் பலத்தை நாம் பலவீனப்படுத்திவிடுவோம். நமக்குள் வாசமாயிருக்கும் தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்திவிடாத வாழ்க்கை வாழுவோம் (எபே. 4:30). உலகினைப் பிரிந்து, உறவினைப் பிரிந்து, பிதாவினை நெருங்கும் வேளையே முதிர்வயதின் வேளை. முதிர்வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் என்றும், தேவனே இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக (சங். 71:9,18) என்று தாவீது ஜெபிக்கிறான். இது முதிர்வயதை எட்டும்போது நம்முடைய ஜெபமாகவும் இருக்கும். நாம் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்போம் (சங். 92:15) என்பதை அறிந்துகொள்வோம். கனிதருகிற நமது வாழ்க்கையாகிய மரத்தை தேவன் உலகத்திலிருந்து பிடுங்கி பரத்திலே நாட்டுகிறார். ஜீவ விருட்சம் இடமாற்றம் செய்யப்பட்டதுபோல, ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கவிருக்கும் நாமும் இடமாற்றம் செய்யப்படுகின்றோம் அவ்வளவே. வெள்ளிக்கயிறு கட்டுவிடுவதைப்போல, பொற்கிண்ணி நசுங்குவதைப்போல, ஊற்றின் அருகே சால் உடைந்துபோவதைப்போல, துரவண்டையில் உருளை நொறுங்கிப்போவதைப்போல மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிற காலம் அதுவே (பிர 12:6,7)

எனினும், நாம் முதிர்வயதை அடைந்தாலும், நடக்கவேண்டிய வழியை நாம் விட்டுவிடக்கூடாது (நீதி. 22:6); அதற்காகவே நாம் போதிக்கப்பட்டோம். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய் (ஆதி. 15:15) என்றார். அப்படியே, நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான் ஆபிரகாம் (ஆதி. 25:8). தானியம் ஏற்ற காலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர் (யோபு 5:26) என்பது யோபுவுக்குச் சொல்லப்பட்டது.

கருகருவென இருந்த முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக நரைக்கத் தொடங்கும்போது, அதனைக் காணும்போது, நரையினை ஒத்துக்கொள்ள மனம்வருவதில்லை. அதனை எப்படியாவது கருமையாகவே பார்க்க விரும்பி சாயங்கள் பலவற்றை முடிகளில் பூசுகின்றோம். அதினால், மாயமான ஒரு சந்தோஷத்திற்குள் மனதைத் தள்ளுகின்றோம். 'முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை' (நீதி. 20:29) என்ற வசனத்தின்படி, நரையில் உள்ள மகிமையைக் காண முடிவதில்லை. நரையை மறைக்கிறோம் என்றால், மகிமையை மறைக்கிறோம் என்பது அதன் மாற்றர்த்தமல்லவா. முதிர்வயதுள்ளவர்களை தகப்பனைப் போல நடத்தவேண்டும் (1தீமோ. 5:1,2) என்று தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக எழுதுகின்றார் பவுல். நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர் (லேவி 19:32) என்பது ஆண்டவரின் வார்த்தை.

முதிர்வயதில் காணப்படவேண்டிய ஒரு குணத்தை பவுலின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளுவோம். பவுல் தனது முதிர்வயதில், கட்டப்பட்டிருக்கும்போது, உடனிருந்த ஒநேசிமுவுக்காக பிலேமோனுக்கு எழுதும்போது, தன்னுடைய முதுமையைக் கையிலெடுத்து பிலேமோனுக்குக் கட்டளையிடவில்லை. பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால், நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பின் நிமித்தம் மன்றாடுகிறேன் (பிலே. 1:8,9) என்று எழுதுகின்றார். இத்தகைய மனப்பாங்கு முதிர்வயதின்போது நம்மிடத்திலும் உண்டாயிருக்கவேண்டும். ஊழியத்திலும், குடும்பவாழ்க்கையிலும் இத்தகைய அன்பின் மன்றாடுதல் அவசியம். கட்டளையிடுதல், சில நேரங்களில் நம்மைக் கவலைக்குள்ளாக்கிவிடுமே.

வாழ்க்கையின் இறுதி நாட்களுக்குள் வரும்போது, நமது இதயத்தின் நிலை எப்படியிருக்கின்றது? ஓட்டத்தை முடித்த அனுபவம் இருக்கிறதா? அல்லது ஓட்டத்தில் ஓரமாய் நின்றுவிட்ட, ஒதுங்கிவிட்ட அனுபவம் கண்ணில் படுகின்றதா? வாலிபத்தில் மாத்திரமல்ல, வயோதிபத்திலும் நம்மைக் காக்கிறவர் அவரே. உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களை தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4) என்பது அவர் நமக்குத் தந்த வாக்கு அல்லவா. முதிர்வயதாகும்போது, சரீரத்தின் பெலன் எல்லாம் போய்விட்டது என்ற மன்பாவனைக்குள் வரும் மனிதர்கள் சோர்புக்குள்ளாகத் தள்ளப்படுகின்றனர். வாழ்க்கையின் முடிவு நிலைக்குள் வந்துவிட்டேன், எல்லாம் முடிந்துவிட்டது, இனி மரணம்தான் என்ற சிந்தையினையே மேலோங்க விட்டுவிடுகின்றனர். 'இனி மரணம்தான்' என்பதும் 'மரணத்தைச் சந்திப்பது உண்மைதான்' என்றாலும், வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்பதை ஆவிக்குரியவர்களாகிய நாம் புரிந்துகொள்ளவேண்டும். உலகத்தின் வாழ்க்கையினை நிறைவு செய்து (காலியாக்கிவிட்டு அல்ல), பரம வாழ்வைத் தொடரவிருக்கும் நமது வாழ்க்கைப் பாதையில் இடையில் வரும் பாலமே மரணம். சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை (1தெச 4:13) என்று மரணத்தைக் குறித்து பவுல் குறிப்பிடுகின்றாரே.

இயேசு தனது சீஷர்களைப் பார்த்து 'அக்கரைக்குப் போவோம் வாருங்கள்' (மாற். 4:35) என்று சொன்ன வார்த்தை நமது காதுகளில் தொனிக்கட்டும். 'அக்கரைக்கு யாத்ரை செய்யும் சீயோன் சஞ்சாரி' என்பது நான் விரும்பும் ஓர் மலையாளப் பாடல். பார்ப்பவர்களுக்கு மரணமாய்த் தோன்றினாலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நமக்கோ மரணம் ஒரு தொடர் பயணமே. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி