Skip to main content

விற்கப்பட்டாலும், மறக்கப்படுவதில்லை

 

விற்கப்பட்டாலும், மறக்கப்படுவதில்லை

 

'மறதி' என்பது மனித சரீரத்திற்குள் விதைக்கப்பட்டிருப்பது; அது தேவனாலேயே நமது சரீரத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றது; அது இறைவனின் படைப்பில் இணைந்த ஒன்று. என்றாலும், நாம் எவைகளை மறந்துவிடவேண்டும், எவைகளை மறந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருத்தல் வேண்டும். மறக்கவேண்டிய காரியங்களை நினைத்துக்கொண்டேயிருப்தும், நினத்துக்கொண்டிருக்கவேண்டிய காரியங்களை மறந்துவிடுவதும் நமது வாழ்க்கையில் எதிர்முனையான விளைவுகளையும், திருப்பங்களையும் ஏற்படுத்திவிடும். வாழ்க்கையில் நிகழும் பல காரியங்ளை நாம் மறந்துவிடுகின்றோம், பல வருடங்களுக்கு முன்னர் சந்தித்த நபர்களை நாம் மறந்துவிடுகின்றோம், வாசித்த புத்தகங்களை மற்றும் பார்த்தவைகளை மறந்துவிடுகின்றோம்; இப்படியாக, அனுதின வாழ்க்கையில் மறதி என்பது அவ்வப்போது நம்மிடத்தில் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஐயோ! அதனை மறந்துவிட்டேனே! என்று சில காரியங்களுகு;காக நாம் வருத்தப்பட்டுத் தேடுவதும் உண்டு.

ஒருபுறம், தனக்கு நன்மை செய்தவர்களைக் கூட மறந்துவிடும் கூட்டத்தாரை உலகத்தில் நாம் காணமுடியும். நம்மிடத்தில் நன்மை பெற்றவர்கள் நம்மை மறந்துவிடும்போது, நமக்கு மன வருத்தம் உண்டாகின்றதல்லவா. யோசேப்பினிடத்தில் நன்மை பெற்ற பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் நெடுநாளாய் அவனை மறந்துவிட்டான் (ஆதி. 40:23). என்றபோதிலும், மறந்துவிட்டவனைத் தூற்றிக்கொண்டிராமல், தன்னுடன் இருக்கும் தேவனைக் கொண்டு யோசேப்பு அந்தக் காயத்தை ஆற்றிக்கொண்டான். நம்முடைய பார்வை யார் மீதிலே? யார் நம்மை மறந்துவிடக்கூடாது என்று நாம் நினைக்கிறோம்? மனிதர்களின் மனதிலே நான் பதிந்திருக்கவேண்டும் என்று மனிதரைப் பிரியப்படுத்தும் பல காரியங்களைச் செய்து, கர்த்தரின் மனதைக் காயப்படுத்திவிடும் மக்கள் அநேகர் உண்டு. 'என் பந்து ஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்' (யோபு 19:14) என்று தனது உபத்திரவத்தின் நாட்களில் யோபு புலம்புகின்றான்.

மற்றொருபுறம், தனக்குத் தீமை செய்தவர்களை மறக்க முடியாமல், தினம் தினம் நினைவில் கொண்டே திணறிக்கொண்டலையும் கூட்டத்தினரும் உண்டு. எதிர்த்து நின்ற மக்களைப் பொருத்துக்கொள்ள முடியாமல், விரோதஞ் செய்தோரை மன்னித்துவிட மனதில்லாமல், அத்தனையையும் இருதயத்தில் சுமந்து சுமந்து நாட்கள் செல்லச் செல்ல வாழ்வின் ஓட்டத்தில் களைத்துப்போய்விடுகின்றனர் இத்தகைய மக்கள். தாங்கள் களைத்துப் போனதற்கான காரணத்தைக் கூட அறிந்துக்கொள்ளக் கூடாதபடி கண்சொருகிப்போனவர்களாகவும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தீமை செய்யும் மனிதர்களையே நினைத்து நினைத்து நாம் நம்மையே கெடுத்துக்கொள்ளக்கூடாது. 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்று சிலுவையில் இயேசு சொன்னதைப் போன்று சொல்லிச் சொல்லி வாழக் கற்றுக்கொள்ளுவோம். அவர்களை எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? அவர்கள் தீமை செய்கிற அத்தனை முறையும் மன்னிக்கவேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரமே நாம் நமது ஆவிக்குரிய வாழக்கையைக் காத்துக்கொள்ளமுடியும்; இல்லையென்றால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அவர்களாலேயே முடிந்துவிடும்; அவர்களோடேயே முடிந்துவிடும்.

ஆனால், தேவனோ, எந்நேரமும், எச்சூழ்நிலைகளிலும் நம்மை மறப்பதில்லை. பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, துன்பங்களைச் சந்திக்கும்போது, பாடுகளின் வழியாக உபத்திரவங்களின் வழியாகக் கடந்து செல்லும்போது, தோல்வியைத் தழுவும்போது, தேவன் நம்மை மறந்துவிட்டார்? என்ற எண்ணம் நமக்குள் உண்டாகிவிடுகின்றது. கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் (ஏசா 49:14) என்று சொல்லத் தொடங்குகின்றோம்; மட்டுமல்லாது, இத்தனை நாட்கள் நமக்கு நன்மை செய்த தேவனையும், இத்தனை நாட்கள் நம்மை நடத்திய தேவனையும் நாம் மறந்துவிடுகின்றோம். ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரே 2:32) என்று தன்னை மறக்கிற மனிதர்களைக் கண்டு கர்த்தர் அங்கலாய்கின்றாரே.

'தேவன் என்னை 'மறந்துவிட்டார்' என்ற நினைவினை மனதில் கொடுத்து, நாம் தேவனை மறக்கும்படிச் செய்வது சத்துருவின் தந்திரம். இப்படி தேவனை மறக்கும் ஜனங்கள், தங்கள் வாழ்க்கையில் வேதனையையே வருவித்துக்கொள்கின்றனர். தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் (சங். 9:17) என்கிறான் தாவீது. நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? (ஏசா 51:12). தேவனை மறக்கிற ஜனங்களை சாத்தான் தன்னை நினைக்கும்படிச் செய்துவிடுகின்றான். தேவனை மறக்கிற ஜனங்களே அந்நிய தேவர்களைப் பின்பற்றி வணங்கத் தொடங்குகின்றனர் (உபா. 8:19; நியா. 3:7; சங். 44:20; ஏசா. 65:11; எரே. 13:25; எரே. 18:15). இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறாள் (ஓசி. 8:14) என்று ஓசியா தீர்க்கரிசியைக் கொண்டு கர்த்தர் உரைக்கின்றாரே. நம்முடைய அனுதின வாழ்க்கையில், நம்முடைய நினைவில் தேவன் உண்டா? தேவனைக் கொண்டு காரியங்களைச் செய்கின்றோமா? அல்லது தேவனை மறந்தவர்களாகக் காரியங்களை நடப்பிக்கின்றோமா? கிறிஸ்தவர்கள் என்ற பெயருடன் இருந்தபோதிலும், தேவனையும் அவருடைய பரிசுத்தத்தையும் மறந்து, தேவனுக்கு விரோதமான காரியங்களுக்கும், சினிமாக்களுக்கும், போதை வஸ்துக்களுக்கும் தங்கள் வாழ்க்கையை விட்டுக்கொடுத்துவிடும் மக்கள் உண்டல்லவா! தேவனை நாம் மறந்துவிட்டால், அவருக்கு விரோதமானவைகளையே செய்யத்தொடங்குவோம். தேவன் மறந்து மன்னித்துவிட்ட பாவங்களை மீண்டும் நினைவுக்குள் கொண்டுவருவதும், நம்மையே நினைத்துக்கொண்டிருக்கும் தேவனை 'உன்னை மறந்துவிட்டார்' என்று சொல்லுவதும் சத்துருவின் சூழ்ச்சியே; இதில் வீழ்ச்சியடையாதிருப்போம். 
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை (ஏசா 49:15) என்றல்லவா தேவன் நம்மைப் பார்த்து சொல்லுகின்றார். யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா 44:21) என்று நம்மை தைரியப்படுத்துகின்றார். உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபி 6:10). இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை (லூக் 12:6) என்றார் இயேசு. ஆம், நாம் விற்கப்பட்டாலும், மறக்கப்படுவதில்லை. நம்மை விற்கிறவர்களைக் குறித்து நாம் கவலை கொள்ளாமல், நம்மை மறக்காதவரைக் குறித்து களிப்போடு இருப்போம்.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். என்றாலும், அவன் தான் கண்ட சொப்பனத்தை மறந்துவிடவில்லை, சொப்பனத்தைத் தந்த கர்த்தரையும் மறந்துவிடவில்லை. யோசேப்பு விற்கப்பட்டு எகிப்திற்குக் கொண்டுபோகப்பட்டான் (ஆதி 37:28). எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்கப்பட்டான் யோசேப்பு (ஆதி 37:36). என்றாலும், தேவன் யோசேப்போடு கூட இருந்தார்; தேவன் யோசேப்பை மறக்கவில்லை. தேவனின் நினைவு, யோசேப்பை தேசத்தின் மேல் அதிபதியாக உயர்த்தியது; தேசத்தை பஞ்சகாலத்தில் போஷிப்பவனாக மாற்றியது. வாழ்க்கையில் உண்டாகும் கஷ்டங்கள் தேவன் நம்மை மறந்துவிட்டார் என்பதைக் காட்டுபவைகளல்ல, தேவன் உடனிருக்கிறார் என்பதை உணர்த்தும் பாதைகள் அவ்வளவே. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி