Skip to main content

சுவரைத் தாண்டி சுவிசேஷம்



சுவரைத் தாண்டி சுவிசேஷம்



அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்குத் அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.(லூக் 14:21)

அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.(லூக் 14:24)

பரலோக ராஜ்யத்தின் பணியில் முனைந்து நிற்கும் நாம், முன்னேறத் தடையாயிருக்கும் காரியங்களையும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். எங்கோ ஓரிடத்திலேயே போரிட்டுக்கொண்டும், போரடித்துக்கொண்டும் இருக்க அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம். நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற் 16:15) என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்றவேண்டியவர்கள். ஓரிடத்தில் நடத்தும் சபையுடனோ, ஊழியத்துடனோ, ஒரு சிறு குழுவுடனோ, சிறியதோர் கூட்டத்துடனோ நமது தரிசனம் முடங்கிவிடக்கூடாது.

இதைப் புரிந்துகொள்ளும்படியாகவே, இயேசு ஓர் உவமையையும் எடுத்துரைத்தார். ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான் (லூக் 14:16-20). இந்த பதிலையே இன்றும் பல அழைக்கப்பட்டவர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். மனந்திரும்புதலைப் பற்றியும், சுவிசேஷம் அறிவிப்பதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல், தங்கள் சொந்த அலுவல்களிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர். இவர்களை திசை திருப்புவதில் பெருமளவு நேரத்தைச் செலவழிக்கும் நிலை பல நேரங்களில், பல ஊழியர்களுக்கு உண்டாகிவிடுகின்றது. வருடக்கணக்காக அழைத்துக்கொண்டிருப்பதும், வருடக்கணக்காகச் சாக்குபோக்குச் சொல்லிக்கொண்டிருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இயேசு மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்தார்; ஆனால், மனந்திரும்புவதையோ மக்களிடம் விட்டுவிட்டார்; அறிவிக்கவே தான் அனுப்பப்பட்டதில் அவர் உறுதியோடு இருந்தார். ஒரு மனிதனிடத்தில் அல்ல உலகம் முழுவதும் சுவிசேஷம் சென்றடையவேண்டும் என்பதே பிதாவின் சித்தமாயிருக்கிறது.

ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:23) என்றார் இயேசு. ஒரே இடத்தில் இயேசுவை அறிவித்துக்கொண்டே, நாட்களையும், காலங்களையும் செலவழித்துக்கொண்டு, மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள் என்று எத்தனை முறை அழைக்கப்பட்டாலும் மனந்திரும்பாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் நமது நேரத்தை விரயமாக்கிவிடக்கூடாது. அறிவிக்கப்பட்டவர்கள் மனந்திரும்புதல் என்ற விருந்தை அசட்டை செய்யும்போது, திறந்து கிடக்கும் பரந்த உலகத்தைப் பார்க்க நாம் தவறிவிடக்கூடாது. பலமுறை கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளாத கூட்டத்தினர் ஒரு புறம்; மறுபுறமோ ஒருதரம் கேள்விப்பட்டாலே ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் கூட்டத்தினர். இத்தகைய கேள்விப்படாதோர் கூட்டத்தின் மத்தியில், அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே (ரோம 10:15). அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்க நமது பாதங்கள் எத்தனையாய் பயணித்திருக்கிறது? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். அறிவித்தவர்களுக்கே அறிவித்துக்கொண்டும், போதித்தவர்களுக்கே போதித்துக்கொண்டும் நாம் இருப்போமென்றால், தொலைவிலிருக்கும் அறிவிக்கப்படாதோரை புறக்கணித்துவிட்ட சுவிசேஷகர்களாக, போதகர்களாக நாம் காணப்படுவோம். அழைக்கப்பட்டவர்களையே அழைத்துக்கொண்டிருக்கிறவர்களாகவே நாம் காணப்படுவோம். வீட்டிலிருப்போரையே விருந்துக்கு வா, வா என்று அழைத்துக்கொண்டிருந்தால், ஒருமுறை கூட போஜனம் அற்று (சுவிசேஷம் அறிவிக்கப்படாமல்) கிடக்கும் மாந்தரின் நிலை என்ன ஆவது?

இயேசு புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். (லூக் 4:42,43) அழைப்பைப் புரிந்துகொள்ளுவோம், அதுவே நம்மை அழைத்துச் செல்லட்டும்










 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி