வெள்ளி, 8 அக்டோபர், 2021

பரத்தின் மீதிருக்கட்டும் பார்வை

 

த்தின் மீதிருக்கட்டும் பார்வை



அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். (ஏசா 53:3)


மனிதர்கள் புறக்கணித்துத் தள்ளும்போது, மகுடத்தையே இழந்துவிட்டதுபோல மனமுடைந்து மகிழ்ச்சியையே இழந்துவிடும் மனிதர்கள் உண்டு. 'ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்' என்ற எண்ணத்தை மனிதர்களை நோக்கியே திருப்பிவைத்திருப்பதினால், புறக்கணிக்கப்படும்போது புறமுதுகில் உண்டாகும் புண்களினால் முன்னோக்கிப் பயணிப்பதற்குக்கூட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். என்றபோதிலும், 'தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்' என்ற எண்ணத்தோடு பயணிக்கும் மனிதர்களின் மனங்களோ, மனிதர்களின் செய்கைகளால் மனமடிவாகிறதில்லை.  'மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்' என்ற எண்ணம் தவறல்வே; என்றபோதிலும், 'மனிதர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக' பரலோகத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்வது பயணிக்கும் பாதைக்கே பாதகமாகிவிடும். 

'மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்' என்ற மனநிலையோடு 

வாழும் மனிதர்களின் சிந்தை, மனிதர்களைச் சார்ந்தே சிந்திக்கும்; இப்படிப்பட்டோரின் பார்வையில் பரலோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். மேலும், 'பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்' (மத் 10:20) என்ற வார்த்தைக்கும், 'ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன'; (யாத் 4:12) என்ற வார்த்தைக்கும் அத்தகையோரின் வாழ்க்கை தூரமாகிவிடுமே. அத்துடன், 'சுயமகிமையைத் தேடுகிறவன் சுயமாய்ப் பேசுகிறான்' என்றும், 'உண்மையுள்ளவனோ தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறான்' என்றும் இயேசு கிறிஸ்து போதித்த வண்ணம் (யோவான் 7:18), 'சுயமகிமையைத் தேடும்' மேலும் ஒரு ஆபத்திற்குள்ளாகவும் வாழ்க்கை  நுழைந்துவிடும். வாழ்க்கையில் சுத்தமில்லாமல், வரிசையில் வந்து எத்தனை காணிக்கை கொடுத்தாலும், விண்ணகக் கணக்கில் அது வைக்கப்படுவதில்லையே (ஏசா. 1:11-16); மண்ணின் தேவைக்காக மனிதர்கள் ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், விண்ணகத் தேவைக்கோ அது வெறுப்பானதே.   

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் (மத் 23:14) என்றும் கிறிஸ்து போதித்தாரே. அப்படியே பவுலும், மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள் (எபே 6:6) என்றும், வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள் (கொலோ 3:22) என்றும் தனது நிருபத்தில் எழுதுகின்றாரே. ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதற்காக, பலியை முந்தி செலுத்திய சவுல், தேவனால் புறக்கணிக்கப்பட்டான்.

(1 சாமு.13: 8,13)

எனினும், கர்த்தருடைய பிள்ளைகள் மனிதர்களால்  புறக்கணித்துத் தள்ளப்படும்போது, கர்த்தர் சாமுவேலினிடத்தில் சொன்ன வார்த்தைகளையே நாமும் நினைவுகூரவேண்டியது அவசியம். எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று ஜனங்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. தீர்க்கதரிசியாக இத்தனை காலம் அவர்களோடுகூட இருந்து, தேவனுடைய வார்த்தகளையும் வழிகளையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி, முன் நின்று நடத்திக்கொண்டிருக்கும் 'தேவ மனிதனான' தன்னையே அவர்கள் தள்ளிவிடுவதாக நினைத்து வருந்தினான் சாமுவேல். சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினபோது, கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள் (1சாமு 8:6,7) என்றார். 'புறஜாதிகளை தங்களுக்கு மாதிரியாக்கி தன்னையே அவர்கள் புறந்தள்ளுகிறார்கள்' என்ற காரியத்தினை கர்த்தர் சாமுவேலுக்குப் புரியவைத்தார். 

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா 53:5) என்ற வார்த்தை மீட்கப்படும் நாளோடு முடிந்துபோனது அல்ல; மாறாக, 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சக 2:8) என்ற வசனத்தின்படி, நமக்கு எதிராக வரும் மனிதர்களும் 'நம்மை அல்ல' அவரையே தொடுகின்றனர் என்ற சத்தியத்தையே நமக்கு வெளிப்படுத்துகின்றது. அவரைத் தொடுகிறவர்களுக்கு, பதில் அவரிடத்திலிருந்தே கிடைக்கட்டும்; இதில், நம்முடைய பங்கு வேண்டாமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக